பொதுவாக ஒரு நூலோ அல்லது ஒரு ஸ்தோத்திரமோ செய்பவர்கள் எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசிப் பகுதியில் அந்த நூலை, சுலோகத்தைப் படிப்பதன் பலன், அவசியம், செய்தவரின் நோக்கம் என்று பொதுவாகச் சொல்லி முடிப்பார்கள். ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் இந்தக் கடைசி சுலோகத்தில் மிகச் சிறந்த செய்தியையே நமக்குத் தருகிறார். ஆத்ம சாதகர்களுக்கான மிக முக்கியமான குறிப்பையும், மக்களுக்கு மிகவும் அத்யாவசியமான தெளிவையும், பொதுவாக ஹிந்துமதம் என்பதன் உயிர்நாடியையும் ஒருங்கே அளிக்கும் வண்ணம் பகவத் பாதர் எழுதியிருப்பது மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்கதாகும்.
உலகில் இருட்டு என்பது கொடியது. ஒளியின் இல்லாமை இருட்டு. ஒளியின் விளக்கத்தில்தான் வாழ்வு துலங்குகிறது. பொருள் இருந்தாலும், காணும் கருவி இருந்தாலும், காட்டும் ஒளி இல்லையேல் காட்சி இல்லை.
பலவித இருட்டுகள் இருக்கின்றன. புற இருட்டு என்பதே மிகவும் தொந்தரவானது. அதிலும் அக இருட்டு என்றால் கேட்கவே வேண்டாம். தெளிவும், ஊக்கமும் இல்லாத குழப்பம் அக இருட்டு. உள்ளத்தில் தன்னம்பிக்கையும், பெருமை உணர்வும் தான் ஒருவர்க்கு உண்மையில் அகத்தின் ஒளி என்கிறார் திருவள்ளுவர். ‘ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை’.
உள்ளத்தின் ஒளியைப் பெருக்க உன்னதமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். Be a light unto yourself என்றார் பகவான் புத்தர். அவ்வாறு உள் ஒளியாய் ஒவ்வொருவரும் இலக வழி சொல்கிறார் சங்கரர். ஒவ்வொரு ஒளியும் அணைந்து விட்டால் பின் எது ஒளியாய் இருக்கும் என்று கேட்டுப் பல ஒளிகளைச் சொல்லிக் கடைசியில் எல்லா ஒளிகளும் இல்லாமல் போன பின்பும் நிலைத்து என்றும் மறையாது உயிர்க்கு உற்ற ஒளியாய் இருப்பது ஆத்ம ஒளி என்று உபநிஷதம் சொல்கிறது. அதை நினைவு படுத்துகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
உள்ள வெறுக்கை என்கிறார் திருவள்ளுவர். வெறுக்கை என்றால் பெருமை உணர்வு. ஓர் உன்னத இலட்சியத்தின்பால் மனிதர் ஈர்க்கப்படும் பொழுது அவர்களுடைய முழு சிந்தனையும், உள்ளமும், ஆர்வமும் எல்லாம் அந்த இலட்சியத்தில் குவிவதை இந்த உள்ள வெறுக்கை என்பது குறிக்கிறது. அப்பொழுது மனிதர் தம் அகத்துள் சிதறுண்டு நிற்காமல் ஒரே உணர்வாகத் திரண்டு இயங்குவதை யோகிகள் இதயம் என்று குறியீட்டு மொழியில் உணர்த்துகின்றனர். இது உடலில் இடப்பக்கம் இருக்கும் உறுப்பான இதயம் என்பதைக் குறிப்பது அன்று.
உள்ளம் ஒன்றித்துத் திரண்ட உயிர்கெழு ஆர்வம் என்பதை உருவகப்படுத்த உற்ற சித்திரம் கமலம். எனவே இதய கமலம் என்று உரைக்கின்றனர் யோகிகள். புற உலகில் மொட்டாக இருக்கும் தாமரையை மலரச் செய்ய சூரியனின் கதிர்கள் அந்தக் கமலத்தின் மீது படுவது போன்று, அக உலகில் இதய கமலத்தை மலர்த்தும் கதிர், ஆத்ம ஒளி ஆகும். இந்த ஆத்ம ஒளிதான், கற்று அறிந்து பயின்ற கலைகள் அனைத்தின் சாரமும், முடிவுமாக இருப்பது. எனவே ஆத்ம ஞானம் என்பதை வேத ஸாரம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
அத்வைதத்தின் உயிரான கருத்து ‘பிரம்மம் ஒன்றே உண்மை. உலகம் வெறும் மித்யையே. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே. வேறன்று’ என்னும் இதுதான். இதைத்தான் ‘ப்ரஹ்ம சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ என்னும் வாக்கியம் உணர்த்துகிறது.
இந்தக் கருத்தின் நுணுகிய திரண்ட வடிவாக இருப்பது பிரணவம் என்னும் ஓம். பிரணவம் மூன்று எழுத்துகளைக் கொண்டு உருவானது. அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துகள் அவை. அ, உ இரண்டும் சேர்ந்து ஓ என்று ஆகி, ம் என்பதுடன் சேர்ந்து ஓம் என்று ஆகிறது. இந்த எழுத்துகளின் அமைப்பு ரீதியான உட்பொருளில் அத்வைதத்தின் ஆன்ற மறைமுடிவான கருத்து அடங்கியிருக்கிறது. இலக்கண ரீதியாகப் பார்த்தால் இந்த எழுத்துகள் தம்மளவிலேயே அர்த்தங்கள் உடையன. ‘அ’ என்பது பிரம்மத்தைக் குறிக்கும் எழுத்து ஆகும். ‘ம்’ என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகும். ‘உ’ என்பது ’அதுவே’ என்னும் பொருள்தரும் ஏவகாரம் என்பதை உணர்த்தும் குறிப்பு எழுத்து. ஏவகாரம் என்பது ஒன்று அதுவேதான் என்று வலியுறுத்திச் சொல்வது. ஏன் ம் என்பது ஜீவனைக் குறிக்கும் எழுத்து என்று சொல்கிறோம்? அதற்குக் காரணம் இருக்கிறது. வேதாந்தத்தில் உலக தத்துவங்கள் ஆன 24 தத்துவங்களை (அதாவது ஞான இந்ந்திரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, இந்திரிய உணர்ச்சிகள் 5, பூதங்கள் 5, அந்தக்கரணம் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் நான்கு - மொத்தம் 24) வடமொழி அரிச்சுவடி ரீதியாக க, க2, க3, க4, ஞ, ச, ச2, ஜ, ஜ2 என்ற வரிசையில் நிரல்படுத்திக் கொண்டே வருவார்கள். அப்படியே ப4 வரை 24 தத்துவங்கள் வரிசைபடுத்தப் படும். 25 ஆவதாக வரும் எழுத்து ‘ம’ என்பதாகும். அதை 25 ஆவது தத்துவமான ஜீவன் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். எனவேதான் ஜீவனுக்கே மகார வாச்யன் (ம என்னும் எழுத்தின் பொருளாக இருப்பவன்) அல்லது பஞ்சவிம்சதியான தத்துவம் (பஞ்சவிமசதி - 25, 25 ஆம் தத்துவம்) என்று பெயர் சொல்வார்கள். இப்பொழுது அ, உ, ம் என்னும் எழுத்துகளை வரிசையாக வைத்து அந்த எழுத்து உணர்த்தும் தத்துவத்தை நினைத்துப் பாருங்கள். அ + உ+ ம் = பிரம்மம் + அதுவே + ஜீவன். அதாவது ‘பிரம்மம் ஒன்றே சத்யம். இந்த உலகம் உண்மையில் சத்யமன்று. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே’ என்னும் அத்வைத சாரமான, வேத ஸாரமான கருத்தையே அ, உ, ம் என்னும் எழுத்துகள் தம்மளவிலேயே உணர்த்துவதைக் காணலாம். எனவேதான் இதய கமலத்தில் ஒளிரும் ஆத்ம தீபத்தையே பிரணவமயம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
ஓம் என்பதை விரித்தால் அ + உ + ம். இந்த மூன்று எழுத்துகளை விளக்கினால் அதுவே அத்வைத ஸாராம்சம்.
அறிவுகள் அனைத்தும் உணர்வை அடிப்படையாக கொண்டன. உணர்வோ நம்முள் இருப்பது. நாம் உணர்வுமயமாக இருக்கிறோம். சித்கனம் ஆக இருப்பது ஆத்மா. உணர்வு இருக்கப் போய்த்தான் உலகமே நம்க்கு இருப்பு உடையதாக ஆகிறது. அப்படி இருக்கும் போது இந்த உணர்வை நமக்குப் புறத்தில் இட்டு அறிய முயல முடியாது. ஏனெனில் உணர்வை புறத்தில் இட்டால் அப்பொழுது நாம் உணர்வு இல்லாத ஒன்றாக ஆகவேண்டும். அப்பொழுது அறிவோ உலகமோ என்ற பேச்சே இல்லை. எனவேதான் சித் மயமாக் இருக்கும் ஆத்மாவை, உணர்வுமயனை ஒருநாளும் தர்க்கம் கொண்டு, அல்லது அனுமானம், ஊஹம் முதலியன் கொண்டு அணுகவே முடியாது. பின் நாம் எப்படி ஆத்மாவை உணர்கிறோம் என்ற கேள்வியே பொருளற்றது. ஏனெனில் நாம் உணர்வதே ஆத்மா அடிப்படையாகத்தான். ‘விஞ்ஜாதாரம் கேன விஜானீயாத்?’ என்று கேட்கிறது உபநிஷதம். உணர்பவனை எதைக் கொண்டு உணர்வது? எனவேதான் பிரணவமயமான் ஆத்ம தீபம்தான் அனைத்தையும் நமக்குப் புலப்படுத்துகிறது. ஆனால் அதுவோ தர்க்கத்துக்கு எட்டாதது. ‘அதர்க்யம்’ என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
தர்க்கத்துக்கு எட்டாதது. புறத்தில் இட்டு ஒரு பொருள் போல் அறிய முடியாதது. என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? கையில் ஒரு டார்ச் இருக்கிறது. இருட்டில் இருக்கும் பொருளைப் பார்க்க அந்த டார்ச்சைப் பயன்படுத்துகிறோம். அது ஒளி பாய்ச்சி அந்தப் பொருளைக் காட்டுகிறது. அந்தப் பொருளில் இருக்கும் பிரச்சனையை இந்த டார்ச் ஒளிகொண்டு சரி செய்கிறோம். டார்ச்சுக்குள்ளேயே ஒரு பிரச்சனை. உடனே ஒடித்து வளைத்து டார்ச்சுக்குள் அந்த டார்ச் ஒளியை அடித்துப் பார்க்கவா முயற்சி செய்கிறோம்? உடனே டார்ச்சைத் தனித்தனியாக கழட்டி உள்ளே முதலில் அடிப்படையாக இருக்கும் கருவியின் உப பொருளில் என்ன ஆயிற்று என்று நோக்குகிறோம்.
டார்ச்சின் ஒளியைக் கொண்டு நாம் புறப்பொருளில் இருக்கும் பிரச்சனையைப் பார்ப்பது தர்க்கம். டார்ச்சினுள் இருக்கும் பிரச்சனையைப் பார்க்க டார்ச்சையே தனித்தனியாக அலசிப் பார்க்கிறோமே அதை எதற்கு உவமையாகச் சொல்லலாம்.? அதைத்தான் யோகிகள் தியானத்தில் ஆழ்ந்து புரிந்துகொள்ள முயலும் பிரச்சனைக்கு உவமையாகச் சொல்லலாம். உணர்வின் மயமாக அகத்துள் அமைந்துள்ள ஆத்மாவைப் பார்க்க உற்ற வழியாக யோகத்தில் ஆழ்ந்த தியானம் உதவுகிறது. தியானம் என்பது புறத்தைத் தள்ளி அகத்தை அலசி உற்று உணர்ந்து நோக்குதல்.
Atman is not understood inductively or deductively but you become aware of it by intuition.
அதனால்தான் அரிஸ்டாடில் Contemplation is the activity of Gods என்றார்.
எனவேதான் ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், இந்த ஆத்மா யோகிகளால் தியானத்தில் அடையப்படுகிறது.
சிலர் நினைக்கலாம். நாங்கள் எல்லாம் விஷ்ணுவை வணங்குபவர்கள். நாங்கள் சிவனை வணங்குபவர்கள். எங்கள் குருமார் வேறு. அவர்கள் சொன்ன மார்க்கங்கள் வேறு. எங்களுக்கும் அத்வைதம் சொல்லும் இந்தக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? சிவன், விஷ்ணு என்பதால் இரண்டு வழி என்றில்லை. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களையும் குறிக்கின்றதுதான். இப்படி அந்த அந்தத் தெய்வ வழிபாட்டைச் சொல்லக் கூடியது அந்த அந்த நெறிக்கான ஆகம சாத்திரம். எந்த ஆகம சாத்திரம் ஆகட்டும், அது சைவ ஆகமமோ, வைஷ்ணவ ஆகமமோ, சாக்தமோ, காணாபத்யமோ, கௌமாரமோ, அல்லது சூரியனை வழிபடும் சௌரமோ எதுவானாலும் அந்தத் தெய்வத்தைப் பற்றிச் சொல்லும் போது, அந்தத் தெய்வம் எதுவே வடிவானது என்று சொல்கிறார்கள்? ஏதாவது பொருளால் ஆனது என்றா சொல்கிறார்கள்? இல்லை. எந்தத் தெய்வ வடிவாயினும் அது சித் வடிவே ஆனது என்றுதான் எந்த ஆகமமும் சொல்லக்கூடிய வார்த்தை.
சித ஆத்மகம், சின்மயம், சித்கன ரூபம் என்று சொல்லாமல் எந்தத் தெய்வத்தையும் யாரும் விவரிப்பதில்லை. ஸ்ரீஆதிசங்கரர் சொல்வதோ அந்தச் சித் கனம், சித் மயம் என்பதைத்தான் பிரம்மம் என்கிறார். அதுமட்டுமன்று. விஷ்ணு என்றால் எங்கும் விரிந்தது என்ற பொருள். பிரம்மத்தைக் குறிக்கும் பெயர். சிவம் என்றால் மங்களம், நன்மையே வடிவானது என்று பொருள். பிரம்மத்தைத் தவிர மங்களமானதும், நன்மையே வடிவானதும் வேறு எது?
குரு என்னும் பதமே அர்த்தம் நிறைந்தது. அஞ்ஞானம் என்னும் இருட்டை நீக்கி விளக்கம் பெய்யும் ஒளியாய் இருப்பது குரு என்னும் தத்துவம். பிரம்மம் தன்னளவில் ஒற்றை ஒரே சத்யமாய் இருக்கலாம். சத்யம், ஞானம், அநந்தம், ஆநந்தம் என்று பிரம்மத்தின் இயல்பை எடுத்துக் கூறுகிறது உபநிஷதம். உலகமோ, நாமோ உண்மையில் இருக்கும் சத்யம் இல்லை என்றும் இருக்கலாம். அஞ்ஞானத்தில் பந்தப்பட்ட நிலையும், அதனால் நாம் கொள்ளும் ஓராயிரம் பிரமைகளும் சிறிதும் அடிப்படை அற்ற நிலைமாற்றத் தோற்றங்களேயாக இருக்கலாம். ஆனால் அஞ்ஞானம் விலகி நம் உண்மை இயல்பை உணரும் பொழுதுதான் அந்த ஞானம் நம் தாகத்தைத் தணிக்கும். அதுவரை தொடரும் அவஸ்தையினின்றும் விடுதலையை மித்யையோடு கலந்து வந்து நமக்களிக்கும் அருள் அதே பிரம்மத்தின் இயல்பில் இருக்கப் போய்த்தான் நமக்கு அத்வைதமே கிடைக்கிறது. அந்த அருள்முகம் பிரம்மத்தின் குரு தத்துவம்.
குரு எந்த வடிவத்திலும் வரலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் யதுமகாராஜனுக்கும் ஒரு பிரம்ம ஞானிக்கும் நட்ந்த உரையாடலாக எழுதும் போது அந்தப் பிரம்ம ஞானி தமக்குக் குருவாக 24 பேர்கள் அமைந்தனர் என்று கூறுகிறார். அந்த 24 ஒரு வினோதமான வரிசை.’பூமி, காற்று, ஆகாயம், ஜலம், அக்கினி, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேனெடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரரப்பக்ஷி, குழந்தை, குமரி, அம்புதொடுப்பவன், பாம்பு, சிலந்திப் பூச்சி, குளவி என்று 24 பேர்கள் தமக்குக் குருவாக இருந்தனர் என்கிறார் பிரம்ம ஞானி. அதாவது அதன் பொருள் ஒருவருக்கு அவருடைய ஆத்மாவே குருவாக உள்ளிருந்து நடத்துகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணன் அப்பொழுது விளக்குகிறார் உத்தவரிடம்.
‘ஒரு மனிதருடைய ஆத்மாவுக்குச் சிறப்பாக அவருடைய ஆத்மாவேதான் குருவாக அமைகிறது. ஏனெனில் ஆத்மாவின் உந்துதலால் ஒரு மனிதர் தம் பிரத்யக்ஷத்தாலும், அனுமானத்தாலும் கூட உயர்நலனை அடைகிறார்கள்.’ (ஆத்மனோ குருர் ஆத்மைவ புருஷஸ்ய விசேஷத:| யத் ப்ரத்யக்ஷானுமானாப்யாம் ச்ரேயோSஸாவநுவிந்ததே || ) (11.7.20)
எதேச்சையாக நம் கையில் கிடைக்கும் நூல், நாம் சந்திக்கும் மனிதர், நமக்கு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, நம் கண்முன் நடக்கும் ஒரு காட்சி, ஏன் ஏதோ ஒரு பறவை, ஏதொ ஒரு விலங்கு என்று எந்த ரூபத்திலும் பிரம்மத்தின் குரு முகம், அருள் பாய்வு நடந்தாலன்றி மாயைத் திரையும் கிழிவதில்லை. அப்பால் நிற்பது போல் நின்று குமிணகைக்கும் பரமசிவமோ, அறிதுயில் அமர்ந்து அனைத்தும் அறிந்த குறும்பில் புன்னகைக்கும் ஆதிநாராயணமோ அப்பொழுதுதான் நம் கனவு இரிந்த நிதர்சனமாய் நமக்கும் அர்த்தப் படுகிறது.
இதையே தேஜோபிந்து உபநிஷத் கூறுகிறது. ‘பகுதியாக்கப் படாமல் ஒரே முழுமையான சைதன்ய ரஸம்தான் பிரம்மா, அதே சைதன்ய ரஸமே ஹரி, அதே சைதன்ய ரஸமே ருத்ரர், அதே சைதன்ய ரஸமே நான், அதே சைத்ன்ய ரஸமே ஆத்மா, அதே சைதன்ய ரஸமே குரு’ (அகண்டைக ரஸோ ப்ரஹ்ம, அகண்டைக ரஸோ ஹரி:, அகண்டைக ரஸோ ருத்ர, அகண்டைக ரஸோSஸ்மி அஹம், அகண்டைக ரஸோஹி ஆத்மா ஹி அகண்டைக ரஸோ குரு:) (2.5-6).
வேத ஸாரத்தைச் சொல்ல வந்த ஸ்ரீஆதிசங்கரரும் அதையே சொல்கிறார். விஷ்ணு, சிவம், குரு அனைத்தும் ஒன்று கலந்தது பிரம்மம். அதுவே உன் இதய கமலத்தில் இருள் கடியும் ஆத்ம தீபமாக இருப்பது. அவ்வாறு அதை நீ தியானம் செய்வாயாக.
அனைத்து உயிர்களிலும் அந்த ஒளி, ஆத்மா என்ற பிரம்மம் திகழ்கிறது. என்றால் பலப்பல ஜீவர்கள் போல் தோன்றினாலும் ஒரே ஆத்மாவாகத் திகழ்கிறது. ஒளிரும் சூரியன் ஒன்றுதான். ஆனால் பல நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கும் சூரியன்கள் பல போன்று தோன்றினாலும் உள்ள சூரியன் ஒன்றேதான்.
ஒருமுறை விலகிய இருள் மீண்டும் வந்து ஒட்டுவதில்லை. ஒரு முறை கலைந்த கனவு மீண்டும் வந்து தொடர்வதில்லை. ’பயப்படும் குழந்தை முகமூடி போட்டு ஆடும் நபர் தன் தந்தை என்று உணர்ந்ததும் பின்னர்ப் பயப்படுவதில்லை’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதுபோல் ஒரே ஒரு முறை நன்கு சிந்தித்து இந்தப் பிரம்மத்தைப் புரிந்துகொண்டு விட்டால் பின்னர் அந்த மனிதர் முக்தர்தான் என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
’இதய கமலத்தின் உள்ளே
இலகும் தீபமாய் வேத சாரம்
பிரணவமயமாய், தர்க்கம் கடந்து,
தியானத்தில் யோகிகளால் அடையப்படும்.
ஹரி, குரு, சிவம் கலந்த யோகம்
அனைத்து உயிரிலும் திகழும் ஏகம்
ஒருமுறை மனத்தால் சிந்தித்து உணர்ந்தால்
போதும் அவர் முக்தரே ஆவார்.’
(ஹ்ருதயகமல மத்யே தீபவத் வேதஸாரம்
ப்ரணவமயம் அதர்க்யம் யோகிபிர் த்யானகம்யம் |
ஹரிகுருசிவ யோகம் ஸர்வபூதஸ்தம் ஏகம்
ஸக்ருதபி மநஸா வை சிந்தயேத் ய: ஸ முக்த: || )
முற்றும்.
சுபம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***