Thursday, January 15, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 20

ஒரு தந்தை தம் மக்களை சொந்த வயலில் உழைத்து நல்ல விளைச்சல் கண்டு வாழ்வு சிறக்க வழிதேட வேண்டும் என்று யோசித்தார். என்ன சொல்லியும் மக்கள் உழைப்புக்கு இணங்கவில்லை. ஏதாவது மாயமந்திரம், குறுக்கு வழி இவற்றில் பொருள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அந்தத் தந்தை ஓர் உபாயம் செய்தார். வயலில் ஏதோ தெய்வம் தந்த பெரும் செல்வம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை அனைவரும் ஒற்றுமையாகக் கூடி நின்று சுத்தமாகப் பூஜை வழிபாடு என்று செய்து விடாமல் தோண்டினால் அந்தத் தெய்வம் கண்ணில் காட்டும் என்று தம் மக்களை நம்பச் செய்தார். 

பிறகு அவருடைய மக்கள் ஒற்றுமையாக இணைந்து பூஜை வழிபாடு என்று வயலைத் தோண்டத் தொடங்கினர். அதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஊர்மக்கள் ஏன் தோண்டுகிறார்கள் என்று ஆராயத் தொடங்கினால் கிடைக்கும் செல்வம் அனைவருக்கும் தெரிந்து போய்த் தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே செல்வத்துக்காகத் தோண்டும் ஓரிடத்தைக் குறியிட்டுவிட்டு, மற்ற இடங்களில் மும்முரமாக உழுது, பயிரிட்டுத் தண்ணீர் பாய்ச்சி விளைச்சலுக்கு உழைப்பது போல் முயன்று வந்தனர். நாள் ஆக ஆக நல்ல விளைச்சல். விற்று வந்த செல்வம் அமோகமாகச் சேரத் தொடங்கியது. ஒற்றுமையாகவும் இருந்ததனால் அனைவரது வாழ்வும் சீரும் சிறப்புமாக ஆகியது. நெடு நாள் கழித்து அவர்களுக்குள் தெய்வம் தந்த செல்வத்தைப் பற்றிய ஆத்திரமும் அடங்கிப் போய் மனநிலைகளும் சீரடைந்த காரணத்தால் யோசித்துப் பார்த்தனர். தங்களுடைய தந்தை செய்த உபாயத்தைப் புரிந்துகொண்டு நன்றிக் கண்ணீர் பெருக்கினர். 

அதைப் போல் ஸ்ரீஆதிசங்கரரும் எப்படியாவது நம்மை நம் உண்மை இயல்பான ஆத்ம சொரூபத்தை உணரவைக்க உபாயம் செய்கிறார். சொந்த வயலில் தம் மக்களை உழைக்க வைக்க உபாயம் செய்த தந்தையின் மனநிலையை நாம் புரிந்துகொண்டால் இந்தச் சுலோகமும் நமக்கு நன்கு புரியும். எது உண்மையான அஷ்டமா சித்தி என்பதும் புரியும். ஆத்ம ஞானத்தை இழந்து இருக்கும் நிலையை விட ஒரு பாபமும் கிடையாது என்பதும் புரியும். 

‘ஒரு மாதகாலம் இவ்வண்ணம் ஆத்மத் தியானம் அப்யாஸம் செய்தால் 

பெரும் பெரும் பாபங்களிலிருந்தும் விடுதலை அடைவார். 

ஒரு வருஷம் தொடர்ந்து இவ்வாறு அப்யாஸம் செய்தால் 

அஷ்டமா சித்திகளும் பெறுவார்; 

ஆத்ம சிந்தனைக்கே உண்மையாக முயல்வோர் 

வாழ்வு முழுவதும் இதே அப்யாஸம் செய்தால் 

ஜீவன் முக்தராய் ஆவார்.’ 

(த்யாநயோகேந மாஸைகாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹ்யதி | 

ஸம்வத்ஸரம் ஸதாSப்யாஸாத் ஸித்யஷ்டகம் அவாப்னுயாத் | 

யாவஜ்ஜீவம் ஸதாSப்யாஸாத் ஜீவன்முக்தோ பவேத்யதி: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment