Wednesday, January 21, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 26

நாம் அன்றாடம் நம்மை எப்படி உணர்கிறோம்? எவ்வளவு பலவீனங்கள்! உடல் உபாதை. மனப் பயங்கள். இருக்கின்ற சிறு அறிவையும் சரிவரப் பயன்படுத்த முடியாமல் எல்லாம் சொதப்பும் நிலை. அகங்காரமோ இத்தனைக்கும் சொல்ல வேண்டாம். நம்முடைய கணக்கில் என்றும் குறையாமல் இருப்பது அதுதான். ஒரு விதத்தில் பார்த்தால் மிகவும் ’காமிக்’ ஆளுதான் நாம். நம்மைப் பார்த்து ஸ்ரீஆதிசங்கரர் இப்படிச் சொல்லுவதைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புதான் வரும். ‘பாவம். நல்ல மனுஷன்’.  

ஆனால் உண்மை உணர்ந்த அவர் தாம் உணர்ந்த உண்மையை உலகுக்கு உரைக்கும் போது எவ்வளவு தனிமையாக உணர்ந்திருப்பார்! பலரும் தாம் சொல்வதைக் கேலியாகத்தான் பார்ப்பார்கள் என்று உணர்ந்துதான் மிகவும் கருணையோடு, ஒரு தாயின் அக்கறையோடு இந்த உபதேசங்களைச் சுலோகங்களாகவாவது இட்டு வைத்துப் போவோம் என்று பாடுகிறார். 

மற்ற பக்திவழியைச் சார்ந்தவர்களுக்கு இந்த அளவு தனிமை இல்லை. ஏனெனில் மனிதர்கள் புன்மை நிறைந்தவர்கள், கர்ம மூட்டையைச் சுமந்து திரியும் ஐயோ பாவம் ஜீவன்கள் என்பதுதான் பக்தி மதங்கள் எதுவானாலும் அடிப்படை. அதைச் சொல்லும் முன்னரே மக்கள் ‘ஆமாம்.. ஆமாம்..’ என்று கூடவே பாட வருவார்கள். அவர்களுக்கும் அதுதான் வேண்டும். தங்கள் அன்றாடத்தில் கூட இருந்து பச்சாதாபப் பட ஒருவர் வந்தாரே என்று நன்றியோடு வருவார்கள். எல்லாம் சூனியம், ஆத்மாவும் இல்லை, உலகமும் இல்லை, எல்லாம் துக்கம் என்று சொன்னால் கேட்கவே வேண்டாம், அதைத்தான் நானும் நினைத்தேன் என்று உடன்படுவதற்கு நான் உளபட நாம் பலரும் முன்வருவோம். ஆனால் ஆதிசங்கரர் சொல்லவந்த விஷயம் அதுபோல் இல்லை. எனவேதான் எந்த உள்நோக்கமும் இன்றி வெறும் கருணையின் அடிப்படையில் சொல்பவர் ஸ்ரீஆதிசங்கரர் என்று சொல்கிறேன். உள்நோக்கம் இருப்பவர் மக்களைத் திரட்டுவதில் அக்கறை காட்டுவார். எதைச் சொன்னால் மக்கள் கூட்டம் விரும்பும் என்றுதான் பார்ப்பார். முற்றிலும் உண்மையின் பக்கம் நின்று பேசும் பேச்சு சங்கரரின் பேச்சு. 

ஆதிசங்கரர் ஆணித்தரமாக எதைப் பேசி, எழுதி, போதித்து நிறுவிவைத்துவிட்டுப் போனாரோ அந்த அத்வைத ரீதியான கருத்துகளை உலகெங்கணும் ஞானிகள் சிலர் பலர் சொல்ல முயன்று விட்டுவிட்டார்கள். காரணம் அங்கெல்லாம் இருக்கும் பண்பாடுகள், மதங்கள், மக்கள் பொது அபிப்ராயச் சூழல் அதையெல்லாம் சகிக்கவில்லை. இங்கோ ஆதிசங்கரருக்கும் முன்னாலிருந்தே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கருத்துகள் தீவிரமாகத் தியானம், உபதேசம், அனுஷ்டானம் என்று ஞானிகள் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் இங்குக் கடவுளைப் பற்றிய சொல்லாடலே அத்வைதம்தான் என்று ஆகிவிட்டது. ஆம். சங்கரர் சொல்வதுபோல் நேரடியான அத்வைதம், இல்லையேல் விசிஷ்ட அத்வைதம், இல்லையேல் சுத்த அத்வைதம் என்று, எந்தவிதமான அத்வைதம் என்பதுதான் வேறுபாடாகக் கொள்ளப்பட்டதே அன்றி, ஔவைப் பாட்டி சொல்வது போல் ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்று ஆகிவிட்டது. 

இல்லையேல் கிரேக்க ப்ளாட்டோவிற்குப் பின்தொடர்ச்சியாக வந்த (Plotinus) ப்ளோடினஸ் என்பார் அத்வைத ரீதியாகவே பேசுகிறார். ஆனால் அதற்குத் தொடர்ச்சி இல்லை. அரேபியா, பர்ஸியா போன்ற பண்பாடுகளில் ஸூஃபிக்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்களை அங்குத்தைய மக்களும் பண்பாடுகளும் ஏற்கவில்லை. அதாவது திருமூலர் சொல்வது போல் ‘பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’ என்று பரம் சார்ந்த பார்வைகள் மனித குலத்தில் அங்கங்கே ஏற்பட்டாலும் அந்தப் பார்வை நிலைத்த தரிசனமாக நின்று நிறுவப்பட்டது நம் பாரதத்தில்தான். அந்தப் பார்வை பக்திமயமான உணர்ச்சி வழக்கங்களில் மறைந்து போகாமல் மனித சிந்தனைக்கும், முனைந்த ஆழ்ந்த விசாரத்திற்கும் கிட்டும்படி இன்றும் நூல்களாக உருப்பெற்றதற்கு முக்கியமான காரணமே ஸ்ரீஆதிசங்கரர்தான். எனவேதான் அவரை நாம் நம் நிலையில்  இருந்து கேட்கும் போது, ‘உண்மையாகவா? என்ன ஆதாரம்?’ என்றெல்லாம் புரியாமல் நாம் முழிக்கும் போது திண்ணமாகக் கூறுகிறார். 

‘இந்தப் பிரபஞ்சம் வெறும் மித்யைதான். 

ஒரே சத்யமான, அழிவற்ற பிரம்மமே நான்; 

அதற்குச் சான்று வேதாந்தமும், ஞானிகளும் 

நம் சொந்த அனுபவமுமே ஆகும்’ 

(அயம் ப்ரபஞ்சோ மித்யைவ ஸத்யம் ப்ரஹ்மாஹம் அவ்யயம் | 

அத்ர ப்ரமாணம் வேதாந்தா குரவோSநுபவஸ்ததா ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment