Thursday, December 22, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 07

கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ
வாச நறுங்குழல் கேசவனும் நம்வாழ்வில்
தேசு பொலியவும் தீர்ந்தவன் சேவடிக்கே
ஆசு கடிந்தேநாம் ஆளாக ஆண்டாளும்
பேசும் திருவுளமும் திண்பொருளும் ஓர்ந்தனையோ
நாயகத் தென்மனமே! நாரா யணன்கீர்த்தி
வாசிக்க விண்ணும் விழைந்தேலோ ரெம்பாவாய். 

புற விஷயங்கள் நம் மனத்தில் பெரும் இரைச்சலை உண்டாக்கி, அமைதியையே அரிய விஷயமாக்கி விடுகிறது. ஆனால் பகவத் விஷயமோ உள்ளத்தின் உள் ஆழத்தில் என்றும் அமைதியான ஆனந்தக் குமிழ்களைப் பூத்தவண்ணமே இனிக்கிறது என்றும். கடவுளில் ஈடுபட்ட ஒருவரைப் பார்த்தால் அவர் ஆரா அமுதை அகத்தே தேக்கியவராய் இருக்கிறார். கீசுகீசு என்று தெய்வ சுகம் அவருள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. அத்தகையோருக்குத் திருப்பாவையின் பாசுரங்கள் என்றும் புதுமையின் விளை இடமாகத்தான் தெரிகிறது. யாரும் இல்லையென்றாலும் அவர்களுக்கு அவர்களுடைய மனமே நல்ல துணையாக அமைந்துவிடுவதால் அவர்கள் என்றும் சத்சங்கத்திலேயே இருப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். ‘திருப்பாவையில் அந்தப் பாசுரத்திற்கான விளக்கம் பார்த்தாயா? இங்கே எப்படி ஈடுபட்டிருக்கிறார்கள் கண்டாயா? ஆண்டாள் கிருபையாலே நாம் கேசவனுக்கே ஆட்பட்டு நம் வாழ்வே எப்படித் தேசு பொலிகிறது! ‘அனைத்து மணங்களும் அவனே’ ஸர்வகந்த: என்று மறை சொல்லும் பரமவாசனையான கேசவன் நமக்குள் மணப்பது நம் உள் நாசிக்குப் புரிகிறதே! அவன் சேவடிக்கு ஆளாகும் போது நம் அறியாமையால் சிலவற்றைக் கவனிக்க மாட்டோம். அவனோ பரமதயாளுவாகையாலே நாம் கேட்டதைக் கொடுத்து விடுவான். அவனை நமக்காக என்று பற்றும்போது நாம் குறுக்கிக் கொள்கிறோம். அவனுக்கே நம்மை ஒப்படைத்துவிடும் போது பூர்ணமாகிறோம். அவனை நம் முயற்சியால் அடைகிறோம் என்னும் போது அதை வியாபாரம் ஆக்கிவிடுகிறோம். ஆனால் அவன் நம்முள் விளங்க நாம் தடையாக இல்லாமல் நாம் விலகிவிடும் போது செய்வன திருந்தச் செய்தவர் ஆகிவிடுகிறோம். இதையெல்லாம் நமக்கு ஆண்டாள்தான் சொல்லித்தந்து நம்மைப் பயிற்றிப் பரமனுக்கு உரியவராய் ஆக்குகிறாள். ஆசு கடிந்தே நாம் ஆள் ஆக ஆண்டாள் பேசுகின்ற திருவுளம் அவள் பாசுரங்களில் பொதிந்து கிடப்பதை அசைக்க முடியாதபடி நம்முள்ளத்தே வியாக்கியானங்கள் பதிவிடுகின்றன. இவ்வளவு ஈடுபாடு கொண்ட என் மனமே ! என் நாயகம் அல்லவோ நீ! அங்கே பார்! திருப்பாவை முழக்கம் கேட்டு விண்ணும், தன் கதவம் சாளரம் எல்லாம் திறந்து வைத்துக்கொண்டு வைத்த விழி வாங்காமல் கேட்பதை ! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



No comments:

Post a Comment