Sunday, December 25, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 10


நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்
ஆற்றப் படைத்தோம் அழிவுறோம் ஆண்டாளைப்
போற்றிப் புகலடைந்தோம் பூமன்னு மார்பனடி
ஏற்றும் தகவுடையோம் இவ்வுலகம் வாழ்ந்திடவே
ஆற்றும் பணிகற்றோம் அல்லல் அகன்றிடவே
ஊற்றுப் பெருக்காகி உள்ளம் புரந்திடவே
போற்றித் தொழுது புகன்றேலோ ரெம்பாவாய்.

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று நோற்பவர்களுக்கும் அதைப் பலனுடையதாக  ஆக்கிக்கொடுப்பவன் நாராயணனே. அவன் கையில் பாரத்தைப் போட்டுவிட்டு தான், தன்முனைப்பு என்று ஒன்றில்லை என்பவர்க்கும் அவனே பலன் தருபவன். ஆனால் அதற்காக அவன் தரும்போது தருகிறான், அது வரும்போது வருகிறது என்று இருப்பது யாருக்கும் ஒவ்வாத ஒன்று. பிரபத்தி என்று இருப்பவர்க்கும் கைங்கர்யத்தில் ஈடுபாடு, தம்முடைய இயல்பைப் பற்றிய ஞானத்தில் ஊன்றி நிற்றல், அடையும் பலனாகிய அவனிடத்தில் அடங்கா ஆர்வம் இதெல்லாம் வேண்டும். இத்தனையும் நமக்கு வாய்க்கச் செய்வது ஈடு போன்ற பேருரைகள். எனவே நம் ஸ்வரூபத்திற்குக் கேடு என்னும் அழிவு நமக்கு உண்டாவதில்லை. பகவத் விஷய தத்வார்த்தமெல்லாம் தன் முப்பது பாடல்களில் நமக்கு என்றும் மனத்திலும், நாவிலும் நிலைக்கும்படிச் செய்தவள் ஆண்டாள். அவளைப் போற்றிப் புகலடைந்து விட்டோம். பூமன்னு மார்பன் ஆகிய திருமாலின் திருவடியான நம்மாழ்வாரை ஏற்றும் தகவு உடையோம் நாம். இவ்வளவு நாள் இவ்வுலகம் நலியும்வகையில் செயால்புரிவதுவே பணி என்று இருந்த நாம் இவ்வுலகம் வாழும் வழியில் பணி செய்யக் கற்றோம் ஆண்டாள் தயவினால். அல்லல் அகன்றது. ஊக்கம் வற்றாத ஊற்றாகிப் பெருகும் உள்ளம். அதை நன்கு புரந்திட நாம் செய்ய வேண்டியதோ ஆண்டாளையும், திருப்பாவையையும் போற்றிப் புகழ்ந்து தொழுது நடத்தலே ஆகும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment