Monday, December 26, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 11

கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்
பெற்ற பலபொருளும் பேணும் மறைமுடியாய்
உற்ற திருப்பாவை ஓதினாள் நற்பாவை
கற்ற மதியுடையோம் கண்ணன் கழலிணையே
உற்ற கதியுடையோம் ஊக்கத்தில் ஒன்றானோம்
எற்றைக்கும் யாம்கவலோம் எவ்வுலகும் சுற்றமென
உற்ற உணர்வில் உகந்தேலோ ரெம்பாவாய். 

ஆத்ம குணங்கள் நன்கு விளங்குகின்றவரான ஆசிரியர்கள் தாம் தேடியதை அடைந்த ஆனந்தத்தில் கற்று, அதுவே தமக்கு யாத்திரையாய்ப் பொருந்துகின்ற சிறப்புடையது தமிழ்வேதம் என்னும் திவ்யப் பிரபந்தங்கள். திவ்யப் பிரபந்தங்களின் உட்கருத்தை நன்கு பொலியக் காட்டுவது திருப்பாவை. அதுமட்டுமின்றி, வேதங்களின் சிரங்கள் எனப்படும் உபநிஷதங்களின் தாத்பர்யத்தையும் தன்னகத்தே தெளிவுபடுத்தி நிற்பது திருப்பாவை. நமக்குத் திருப்பாவையைத் தந்து நம்மை மாதவனுக்கு ஆட்படுத்தியது மட்டுமின்றி, திருமாலுக்கும் நம் நிலைமையை உணர்த்தி அவனை வலுக்கட்டாயமாக நமக்கு அருள் செய்ய வைப்பவளும் ஆண்டாளே. அதனாலேயே அவளை நாம் திருப்பாவை ஓதிய நற்பாவை என்று சொல்லலாம். திருப்பாவையைக் கற்ற மதிவாய்ந்த நாம் நிச்சயம் கண்ணன் கழலிணையை மறக்க மாட்டோம். அதைப் போலவே பகவத் விஷயத்திற்கு அனைவரும் உரியர் என்ற தெளிவை நாம் அடைவதால் ஊக்கத்தில் ஒன்றுபடுவோம். பின்னர் என்றைக்குமாக நம்மிடத்தில் கவலை இல்லாததாகிவிடும். எவ்வுலகும் நமக்குச் சுற்றமே என்று உண்டாகும் உணர்வினில் உத்தமன் உகக்க, அதில் நாம் உகக்க, உயரிய ஆன்ந்தமே வாழ்வாகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



1 comment: