Saturday, July 16, 2022

ஸ்ரீஆளவந்தாரும் ஸ்தோத்ர ரத்நமும்

ஸ்ரீவைஷ்ணவத்தின் வரலாற்றில் ஸ்ரீஆளவந்தாரின் இடத்தைக் குறித்து உருவகமாக எம்பார் இயற்றிய சுலோகம் ஒன்றில் இவ்வாறு வருகிறது.: 

லக்ஷ்மீநாதா2க்2ய ஸிந்தௌ4 2ரிபு ஜலத3:

ப்ராப்ய காருண்ய நீரம்

நாதா2த்3ராவப்4யஷிஞ்சத் தத3நு

ரகு4வராம்போ4ஜ சக்ஷுர்ஜ2ராப்4யாம் |

3த்வா தாம் யாமுநாக்2யாம் ஸரிதமத2

யதீந்த்3ராக்2ய பத்3மாகரேந்த்3ரம்

ஸம்பூர்ய ப்ராணிஸஸ்யே ப்ரவஹதி

3ஹுதா4 தே3சிகேந்த்3ர ப்4ரமௌகை4: || 

திருமால் என்னும் லக்ஷ்மீநாதனாகிய கருணையம் பெருங்கடல். அதில் கருணை என்னும் நீரைப் பருகியது நம்மாழ்வார் என்னும் சடகோபராகிய மேகம். ஸ்ரீநாதமுநிகள் என்னும் மலையின் பேல் அந்த நீரைப் பெய்தது. மலையின் மீது பெய்த கருணை என்னும் நீர், புண்டரீகாக்ஷர் என்னும் உய்யக்கொண்டார், ராமமிச்ரர் என்னும் மணக்கால் நம்பி ஆகிய இரு அருவிகளின் வழியே யாமுநாசார்யர் என்னும் ஸ்ரீஆளவந்தாராகிய பெரிய ஆற்றில் புகுந்தது. அங்கிருந்து யதீந்த்ரர் என்னும் இராமாநுசராகிய பெரும் ஏரியில் வந்து சேர்ந்தது. அந்த ஏரியினின்றும் ஆசார்யர்கள் என்னும் வாய்க்கால்கள் மூலம் உயிர்கள் என்னும் பயிர் செழிக்கப் பாய்கிறது. 

அந்த கருணையாகிற நீர் பிரபத்தி நெறி என்பது தானே போதரும். ஸ்ரீவைஷ்ணவத்தின் சாரமும், அனைத்து வேத வேதாந்தக் கருத்துகளின் உட்பொருளும் ஆகிய பிரபத்தியைத் தாம் இயற்றிய ஸ்தோத்ர ரத்நத்தால் அனைவரும் தினமும் மனத்திலேயே பாடமாகக் கொண்டு நினைக்கும் வண்ணம் செய்தவர் ஸ்ரீஆளவந்தார். அவரைப் பற்றிய தனியன் ஒன்று இவ்வண்ணம் சொல்கிறது. 

ஸ்வாத3யந்நிஹ ஸர்வேஷாம்

த்ரய்யாந்தார்த்த2ம் ஸுது3ர்க்3ரஹம் |

ஸ்தோத்ரயாமாஸ யோகீ3ந்த்3ர:

தம் வந்தே3 யாமுநாஹ்வயம் || 

அறிதற்கு அரிதான வேதாந்த நுண்பொருளை எந்த ஒரு யோகீந்த்ரர் இவ்வண்ணம் அனைவரும் இனிதே அனுபவித்துப் பயில வாய்ப்பாக ஸ்தோத்ரமாக ஆக்கினாரோ அந்த யாமுநர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஆளவந்தாரை வணங்குகிறேன். 

மேலும் ஒரு தனியன் ஸ்தோத்ர ரத்நத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் பலகால் வணக்கி இறும்பூதெய்துகிறது. 

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: | 
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: || 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment