Monday, March 16, 2020

இருக்கிற நிலையில் வேதாந்தம் கற்க ஒரு கணக்கு

இப்பொழுது ஒரு கணக்கு போடுவோம். சம்ஸ்க்ருதம் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் ஒருவர். ஆர்வம் நிறைய. ஆனாலும் காலம், வேலை எல்லாமும் சேர்ந்து... . ஆனாலும் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களைக் கற்று அதன் வழியாக உபநிஷதங்களை எப்படி அணுக வேண்டுமோ அப்படி முறையாக அணுகிக் கற்பதில் ஆசை. ஏதோ இப்பொழுதைக்கு ஸ்ரீபகவத் கீதைதான் தமக்குப் பிடித்த சித்தாந்த ரீதியாக உரைகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டும், வித்வான்களின் உரைகளைக் கொண்டும் அனுபவிக்க முடிகிறது. ஆனால் வேதாந்தம் என்பதை இன்னும் சாட்சாத்தாகப் படிப்பது என்றால் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள், அந்த த்ருஷ்டியில் உபநிஷதங்கள் இப்படிப் போய்ப் பார்க்க ஆசை. ஆனாலும் வடமொழி பழகி இன்னும் எவ்வளவு.. காலம்... - இது போன்ற கவலையெல்லாம் தேவையில்லை என்று தோன்றுகிறது. முறையாக வித்வான்களிடம் அமர்ந்து கேட்டுத் தம் படிப்பை நிறைவு செய்துகொள்ள முடிந்தால் பெரும் பாக்கியம். ஆனால் இன்றைய காலம், சூழல், அவசரம், அவசியம் எல்லாமும் ஒரு பக்கத்தில் இழுக்க, அபூர்வமான வேதாந்த ஆர்வம் மொட்டாகவே கருகிவிட வேண்டாமே! இருக்கிற நிலைமையிலிருந்து தொடங்குவதும் நல்லதுதானே. அதற்கு என்ன வழி?

விசிஷ்டாத்வைதம் என்றால் ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகையோடு முதல் நான்கு ஸூத்ரங்களான சதுஸ்ஸூத்ரீ பகுதிக்குத் தமிழில் இருக்கிறது. முழு ஸ்ரீபாஷ்யமும் என்றால் ஆங்கிலத்தில் தீபா மொழிபெயர்ப்பு. தமிழில் புரிசை உ வே ஸ்ரீகிருஷ்ணமாசாரியார் ஸ்வாமியின் சுகபோதினி. கோழியாலம் ஸ்வாமியின் சாரீரக காரிகாவளி (4 பாகங்கள்), ஆங்கிலத்தில் ஸ்ரீபாஷ்ய மொழிபெயர்ப்பு ஸ்ரீ எம் ரங்காசாரியர், ஸ்ரீ வி கே ராமானுஜாசாரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது, ஸ்ரீகர்மர்கார் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக யதீந்த்ரமததீபிகையை நன்கு பரிச்சயம் செய்துகொண்டு விடுவது புத்திசாலித்தனம். அதனுடைய ஆங்கிலம் சுவாமி ஆதிதேவாநந்தருடையது அருமை. ஆனாலும் ஸ்ரீ உ வே ஸுதர்சனர் புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் தமிழ் விளக்கத்தோடு உள்ள யதீந்த்ரமத தீபிகை கம்பல்ஸரியாக ஒரு டஜன் முறை படித்துவிடுவது நல்லது. இந்த ஆயத்தம் எல்லாம் ஆனபிற்பாடு கொஞ்சம் நன்கு பரிச்சயம் ஆகச் சில துணை நூல்கள். வேளுக்குடி வரதாசாரியாரின் ஸ்ரீபாஷ்ய ஸாரம், உத்தமூர் ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்ய ஸாரம். அதாவது சம்ஸ்க்ருதத்தில் பெரிய பாண்டித்யம் அடையாமல் இதற்குள் எல்லாம் போக முடியாது; அதனால் நான் தொடவே இல்லை என்று வருந்த வேண்டாம். அதற்குச் சொன்னேன்.

அத்வைதம் என்று சொன்னால் நிறைய இருக்கின்றன. சுவாமி யோகானந்த கிரி அவர்களின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து மொழிபெயர்ப்பு. தீபா செய்த மொழிபெயர்ப்பு. ஆனாலும் தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மிகவும் கச்சிதம். சதுஸ்ஸூத்ரீ பகுதி மட்டும் என்றால் பாமதி வியாக்கியானத்துடன் சங்கர பாஷ்யம் ஆங்கிலத்தில் ஸ்ரீ எஸ் எஸ் சூர்யநாராயண சாஸ்திரி, ஸ்ரீ குன்ஹன்ராஜா அவர்களுடைய அற்புதமான நூல்.

த்வைதம் என்பதில் தமிழில் ஸ்ரீப்ருஹ்மஸூத்ர மொழிபெயர்ப்பு வந்திருக்கிறதா தெரியவில்லை. அணுபாஷ்யம் தமிழில் வந்தது முன்னர் என்னிடமே இருந்தது. யாரோ த்வைத சித்தாந்தியான நண்பர் ஒருவர் அதைப் பிரசுரிக்க வேண்டும்; யாரிடமோ அதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாங்கிக் கொண்டு போனார். பிறகு என்னிடமே புத்தகங்கள் இல்லாத நிலை வந்ததினால் நானும் அதை விசாரிக்கவில்லை. ஆங்கிலத்தில் என்றால் ஸ்ரீசுப்பாராவ் அவர்களின் மொழிபெயர்ப்பு.

நானறிந்தவரை, நினைவுக்கு வந்தவரையில் சொன்னேன். ஆர்வம் இருந்தால் சால்ஜாப்பிற்கு இடமில்லை என்று சொல்ல வந்தேன். எல்லோரும் மிகவும் பிஸி என்பதை நானும் அறிவேன். ( நம் கம்பெனி சீக்ரட்டை வெளியில் சொல்வேனா? :-) )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment