Monday, March 16, 2020

வேதம் தமிழ் செய்த விமலர்கள்

வேதம் தமிழ் செய்த விமலர்கள். வேதங்கள் நான்கு. ரிக், யஜுர், சாமம், அதர்வம். ஒவ்வொன்றிலும் மந்த்ர ஸம்ஹிதை, பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் என்ற உட்பிரிவுகள் உண்டு. எழுதாமறை என்று நெடுங்காலம் வந்து சேர்ந்து மிகப் பண்டைய காலத்து அருள் நூலாகவும், ஆன்மிக இலக்கியமாகவும் மனித குலத்தில் திகழ்வன. இவற்றை ஒன்றோ, இரண்டோ, பகுதியோ, முழுதுமோ தமிழில் தர முயன்றுள்ளார்கள் பல பெரியோர்கள். அவர்களை வேதம் தமிழ் செய்த விமலர்கள் என்று நாம் நன்றி பாராட்ட வேண்டும்.

ஸ்ரீசிவத்யாநாநந்த மஹரிஷி, குன்னூர், ஆநந்தாசிரமம். இவர் ரிக்வேதத்தை முதல் இரண்டு அஷ்டகங்கள், அதாவது மூன்றாவது மண்டலம் ஆறாம் ஸூக்தம் வரை தமிழ்ச் செய்யுளாகவும் ஆக்கி, அந்தச் செய்யுட்களுக்குத் தமிழில் பொருளும் எழுதியுள்ளார். 1918லும் அதைத் தொடர்ந்ந்தும் இரண்டு அஷ்டகங்கள் இரண்டு வால்யூம்களாக வந்துள்ளன. மொத்தம் சுமார் 900 பக்கங்கள்.

திருவொற்றியூரான் அடிமை என்று தம்மை அடையாளப்படுத்தியவரும், ஞானமும், செல்வமும், வேத ஞானத்தைத் தமிழகம் அறிய வேண்டும் என்று ஆராத ஆர்வம் கொண்டவருமான ஸ்ரீ த ப இராமசாமிப் பிள்ளை என்பவரின் விடாமுயற்சியாலும், மிக்க பொருள் உதவியாலும் ஸ்ரீகாசிவாசி சிவாநந்த யதீந்திரர் என்பார் ஸாயண பாஷ்யத்துடன் மொழிபெயர்த்த ஸாம வேதம் 1935ல் வந்தது. பின்னர் கிருஷ்ண யஜுர் வேதம் முழுவதும் ஸாயண பாஷ்யத்துடன் பத்து வால்யூம்களில் 1939ல் வந்தன. சங்கர திக்கு விஜயம், ரிக்வேத பஞ்ச ருத்திரங்கள் போன்ற நூல்களும் அவரால் மொழிபெயர்க்கப் பட்டன.

ஸ்ரீ எம் ஆர் ஜம்புநாதன் அவர்கள் நான்கு வேதங்களின் மந்திர ஸம்ஹிதைப் பகுதியை முழுவதும் மொழிபெயர்த்துள்ளார்.

வேதம் தமிழ் செய்த விமலர்களாம் இவர்களிடத்தில் நம் நன்றிகளும், வணக்கங்களும் என்றும் செலுத்துவோமாக.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment