Monday, March 16, 2020

கீதையைக் கற்க

கீதையின் விஷயம் தனி. பல அளவுகளிலும், சுருக்கம், விரிவு, கையடக்கம் என்று பல மகனீயர்களும் தொடர்ந்து கீதைக்கு விளக்கம் கொடுத்து வந்திருக்கிறார்கள். சிறப்பு. ஒன்று மிகச் சிறந்த துதி நூலாகவும் இருக்கும்; அதே நேரத்தில் பக்தி என்னும் மார்கத்தைப் போதிப்பதோடு நிற்காமல் பக்தியைத் தன்னைப் பாராயணம் செய்யும் பொழுதே அனுகாரம் (பா4வித்தல்) செய்யத்தக்கதாகவும் அமைந்திருக்கும்; ஒரே சமயத்தில் ஹிந்து தியாலஜியின் சாரம் அனைத்தும் தன்னகத்தே கொண்டு விளங்கும்; அதே பொழுதில் சாத்திரங்களின் பெரும் விவாதங்களிலெல்லாம் அதன் ஐயப்பாட்டைக் களையும் உன்னத சான்று நூலாகவும் திகழும்; உபநிஷதங்களின் சாரமாக இருக்கும்; அதே நேரம் உபநிஷதக் கருத்துகளுக்கான விளக்கமாகவும் விளங்கும்; ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களின் கருத்துப் படிவளர்ச்சியைத் தெளிவாக்கும்; அதே நேரம் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்னும் வழிவழியான துறையே தான் கூறும் கருத்துகளுக்கான உடனடிச் சான்றாகக் காட்டும் நூலாகவும் திகழும் - இத்தனையுமாக ஒரு நூல் அதுவே கீதை, ஸ்ரீமத் பகவத் கீதை. நன்மை செய்பவர் ஒரு பொழுதும் நாசம் அடையார் என்ற மங்களகரமான உத்தரவாதத்தை உலகிற்குத் தந்த உன்னத நூல் கீதை.

கீதைக்கான விளக்கங்களும் சித்தாந்த ரீதியாகப் பலவாகப் பெருகி நிற்கின்றன. எனவே இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்வது கடினம். ஆயினும் கீதைக்கான சங்கர பாஷ்யம் ஆங்கில மொழிபெயர்ப்பு என்றால் எனக்கு மிகவும் பிடித்தது ஸ்ரீ சி வி ராமசந்திர ஐயர் மொழிபெயர்த்தது. ஸ்ரீபாரதீய வித்யா பவன் போட்டது. இவர் அமுதம் தோய்த்து எழுதவல்ல ஸ்ரீ ரா கணபதி அவர்களுடைய தந்தை என்று நினைக்கிறேன். விசிஷ்டாத்வைதம் தமிழில் கொடுத்து வைத்தது. கீதைக்கு ஸ்ரீ உ வே புத்தூர் ஸுதர்சனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களின் ஐந்து வால்யூம்களாக கீதா பாஷ்யம். ஸ்ரீராமானுஜரின் கீதா பாஷ்யம், அதற்கு ஸ்ரீவேதாந்த தேசிகரின் தாத்பர்ய சந்திரிகை ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான தமிழில் விளக்க உரை என்றால் ஸ்ரீஸுதர்சனருடையது. ஆங்கிலத்தில் சுவாமி ஆதிதேவாநந்தா அவர்கள் ஸ்ரீராமானுஜரின் கீதா பாஷ்யத்தை மூலத்தையும் போட்டுக் கீழே தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பாகவும் கொண்டு வந்துவிட்டார். மொழிபெயர்ப்பு அருமை. த்வைத சித்தாந்த ரீதியிலான கீதையின் விளக்கத்திற்குத் தமிழில் ஸ்ரீஸத்யானந்தம் க்ருஷ்ணாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்ரீமத் ஸத்யத்யான தீர்த்தர் அவர்களுடைய கீதை விளக்க நூல்.

சமீப காலத்தில் வந்துதித்த மகனீயர்கள் பலரும் கீதைக்கு நன்கு விரிவாக விளக்கங்கள் கண்டுள்ளனர். சுவாமி அபேதாநந்தர், சுவாமி ரங்கநாதாநந்தர், பரமஹம்ஸ யோகாநந்தர் என்று நீளும் வரிசை. பகவான் ஸ்ரீஅரவிந்தரின் ’கீதையைப் பற்றிய கட்டுரைகள்’ என்பது சிறப்பாக எனக்குப் படுகிறது. உண்மையில் கீதைக்கான விளக்க நூல்களின் பட்டியலைப் போட்டு முடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இதோ இப்பொழுது இதை எழுதும் பொழுதே அதை விட்டுவிட்டோம் இது விட்டுப் போய்விட்டது என்று ஏகப்பட்ட நினைவூட்டல்கள் என் மனத்திலேயே தோன்றுகின்றன. எவ்வளவு தடவை எழுதினாலும் இந்த நிலைமை மாறாதது என்பதால்.....
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment