Monday, March 16, 2020

ஒரே பண்பாட்டின் இதய ஒலி

நான் ஏதோ தகவல் தந்தியாக விஷயங்களைப் போடுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் யாராவது படிக்கின்றவர்கள் சிந்திக்க மாட்டார்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னவெனில் எவ்வளவோ மகான்கள், தொடர்ந்து காலம் நெடுகிலும் பார்த்தால் தென் கோடியில் இருக்கிறவர் எங்கோ பஞ்ஜாப், காஷ்மீரம் என்று இருப்பவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார் வேதாந்தத்தில். எங்கோ ரோஹ்டா ஊரில் இருக்கும் நிச்சல்தாஸ் காசியில் வந்து வேதாந்தம் கற்கிறார். அத்தனை வேதாந்த நூல்களையும் கற்ற நிச்சல்தாஸ் எழுதிய விசாரசாகர் என்னும் நூல்தான் ஹிந்தி சமுதாயத்தில் வேதாந்தம் நன்கு பழக அடிப்படையாகிறது. அதைத் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீகுப்புசாமி ராஜு தமிழில் ஆக்குகிறார். தென்னாட்டு ஸ்ரீசேஷ ஐயங்கார் பஞ்ஜாப்பைச் சேர்ந்த மூலராமசாதுவிற்கு வேதாந்தம் கற்பிக்கிறார். கற்பவர்களோ, கற்பிப்பவர்களோ ஓரினம் ஒரு மொழி ஓரிடம் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களை ஆத்மபந்தமாகப் பிணைப்பது எது? நான் ஒவ்வொருவரின் இனத்தைக் குறிப்பிடவில்லை. காரணம் ஆத்மிக வித்யையில், பாரமார்த்திகப் பண்பாட்டில் இனம், மொழி, ஆண் பெண் ஆகிய வேறுபாடுகளுக்கு மதிப்பு இல்லை. ஆத்மாவின் மொழி ஒன்றுதான். ஆத்மிகக் குலமும் ஒன்றே என்பதைத்தான் இந்த மகனீயர்கள் காட்டுகிறார்கள் தம் வாழ்வினால். காஷ்மீரத்திற்குச் சென்று சுவடி தேடுகிறார் ஸ்ரீராமாநுஜர். அவருக்கு முன்னால் ஸ்ரீஆதிசங்கரர் தமது சங்கர பாஷ்யத்தில் மேற்கோள் காட்டுவதோ சௌந்தரபாண்டியனின் சுலோகங்களை. அதற்கும் முன்பு பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சியின் வரிகளில் வேதாந்தம் பேசப் படுகிறது என்கிறார் நச்சினார்க்கினியர். எழுநூறு வருஷங்களுக்கு முன்னர் (அறுநூறா, ஐந்நூறா) தத்வராயர் ஸ்வரூபாநந்தர் 146 வேதாந்தத் தமிழ் நூல்களிலிருந்து செய்யுட்களைத் தொகுத்துப் பெருந்திரட்டு செய்கிறார். 15 நூற் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் ராதா பக்தியில் முக்கியமான வடிவத்தை ஸ்ரீரங்கத்தில் வந்திருந்தபொழுது கிடைத்த பார்வைகளால் (திருவாய்மொழியின் மூலம்) திரும்பியபின்னர் ரூபகோஸ்வாமியைக் கூப்பிட்டுப் பகிர்ந்து கொள்கிறார். மல்லன் மகாபக்தன் ஆகிறார். கண் ஒன்று கண்டேன் என்று பாடியவர் கண் என்ன கண்ணே என்று ஆகிவிடுகிறார். தெருவில் நடந்து போகும் ஈசூர் சச்சிதாநந்தம் பிள்ளையைப் பார்ப்பவர்கள் ப்ரஹ்மம் நடந்து போகிறது ப்ரஹ்மம் வருகிறது என்று நகையாடும் அளவிற்கு அத்வைத ப்ரஹ்ம சிந்தனையில் தோய்ந்தவராக இருக்கிறார். சாது நித்தியானந்தம்மாள் 20 வயதிற்கு மேல் எழுதப் படிக்கக் கற்று வேதாந்தம் பயின்று இரண்டு அரிய நூல்கள் ஆக்கித் தந்துவிடுகிறார். கரபாத்திர சுவாமிகள் சகஜாநந்தரை உருவாக்குகிறார். நாத்திகரான சிங்காரவேலு முதலியார் விவேகாநந்தரின் ஸ்பரிசத்தால் வாழ்க்கையில் யோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார். யோகி பார்த்தசாரதி ஐயங்காரின் மருமானான ஸ்ரீஅளசிங்கமய்யங்கார் விவேகாநந்தரே சரணம் என்று ஆகிறார். ‘எங்களுக்கு வழிநடத்த யாருமில்லையே’ என்று அங்கலாய்த்த பாரதியிடம் சகோதரி நிவேதிதா கூறியதோ ‘ஏனில்லை? ஸ்ரீஅளசிங்கம் இருக்கிறாரே!’ தாம் யாருக்கும் தீக்ஷையே தரமாட்டேன் என்று அடமாக நிற்கும் சுவாமி பிரம்மாநந்தர், பேலூர் மடத்தில், நாடகக் கொட்டகையில் ஸ்ரீராமாநுஜர் தாம் நரகம் போனாலும் பரவாயில்லை என்று கோபுரத்தின் மீது ஏறி நின்று அனைத்து மக்களுக்கும் அரிய மந்திரத்தை விளக்கியதைக் காட்சியாகக் கண்டவுடன் மறுநாளே தாமும் பக்தர்களுக்கு தீக்ஷை தரத் தொடங்குகிறார். பத்ரிநாத், கேதார்நாத்தில் போய்நின்று தென்கோடியைச் சேர்ந்த பாமரன் பரவசமாகி நிற்கிறான். ஹிமாசலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீரங்கம், மதுரை என்று வந்து கண்ணீரும் கம்பலையுமாய் குமரியில் போய் அன்னையின் திருமுன்னர் சரணடைகிறார். பல மொழிகள் பேசினாலும், பல ஊர்களில் வதிந்தாலும் பண்பாடு ஒரே இதயத்துடன் ஒலிக்கிறது ஓம் ஓம் என. ஓம் என்பதுதானே வடிவிலும், பொருளிலும் நம் பாரதத் திருநாடு.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment