Monday, March 16, 2020

மூலராம் சாதுவும் வேதாந்த சம்ஞாவும்

சிந்து தேசத்தில் ஸ்ரீநாநக் சம்ப்ரதாயத்தில் சுகாநந்தர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 1806ல் ஓர் ஆண்மகவு பிறந்தது. அதற்கு மூலராம சாது என்று பெயர் வைத்தனர். மூலராமசாது தமது 14ஆம் அகவையில் ஆன்ம விழிப்புற்றவராய்ச் சத்சங்கம், சாத்திரக் கல்வி, விசாரம் என்று தம் ஆன்மிகப் பயணத்தினைத் தொடர்ந்தார். ஹிந்தி, பார்ஸி முதலிய மொழிகளில் நல்ல பாண்டித்யம் அடைந்தார். ஸ்ரீகிருஷ்ண தாசர் என்பவரிடம் சம்ஸ்க்ருதம் முதல்நிலைகளைக் கற்றார். அப்பொழுது அங்கு தெய்வாதீனமாகத் தென்னாட்டிலிருந்து ஸ்ரீராமாநுஜ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீசேஷ ஐயங்கார் என்னும் அற்புதமான வித்வான் மூலராமசாது இருந்த ஊரில் வந்து வதிந்தார். அவரிடம் மூலராமசாது சாரீரக பாஷ்யம், நியாயம் போன்ற துறைகளில் நன்கு பயின்றார். தீவிர விசாரம், ஆன்ம சாதனம், சத்சங்கம், ஞானிகளை அண்டித் தொண்டு புரிதல் என மூலராமசாது நன்கு பரிபாகம் மிக்க ஆத்ம குணங்கள் நிறைந்த ஞானியாக வளர்ந்தார். அவருடைய பொலிவைக் கண்டவர்கள் அவருக்கு மூலசந்த்ர ஞானி என்று பெயரழைத்தனர். தாம் கற்றுத்தரும் கல்விக்கு யாரிடமும் ஒரு காசு பெறுவதில்லை. தமது தந்தையார் வைத்துப் போன செல்வத்திலேயே வரும் மாணாக்கருக்கான உணவு முதலிய செலவுகளைத் தாமே ஈந்து வித்யையைப் பரப்பினார். ஹிந்தி பாஷையில் பல வேதாந்த நூல்களையும், உரைகளையும் இயற்றினார். அவருடைய ஹிந்தி பஞ்சாப் பகுதியில் வழங்கும் ஹிந்தியாய் இருந்தது.

சம்ஸ்க்ருதத்தில் இன்னார் ஆசிரியர் என்று அறியப்படாத ஒரு நூல் வேதாந்த சம்ஞா என்னும் ஒரு நூல். அஃது வேதாந்தத்தில் எண்கள் வாரியாக வேதாந்த தத்துவங்கள் இன்னவை இவ்வளவு என்று தரப்பட்டிருக்கும் பட்டியல் போன்றது. அதாவது 2 என்று எடுத்துக் கொண்டால் இம்மை, மறுமை என இரண்டு. இப்படி என்ன என்ன இரண்டுபட உண்டோ தத்துவங்கள் அதையெல்லாம் வரிசையிட்டிருக்கும். நான்கு என்றால் வேதங்கள், புருஷார்த்தங்கள் என்று போகும். மூன்று என்றால் ஏடணை மூன்று, குணங்கள் மூன்று என்று காட்டும். இந்த நூலுக்கு ஹிந்தியில் வேதாந்த பதார்த்த மஞ்ஜூஷா என்று விளக்க நூலை எழுதினார். மூலசந்த்ர ஞானி ப்ரஹ்மத்தோடு கலந்தது 1876ல் ஆகும்.

1916ல் கோவிலூர் மடத்தைச் சார்ந்த திருக்களர் ஸ்ரீவீரசேகர ஞாநதேசிக சுவாமிகளின் மாணாக்கரான ஸ்ரீகாசிகாநந்த ஞானாசார்ய சுவாமிகள் அவர்கள் சம்ஸ்க்ருத நூலான வேதாந்த சம்ஞா என்பதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்தார். சென்னை கோமளேசுவரன்பேட்டை சச்சிதாநதம் பிரசில் பதிப்பிக்கப்ப்பட்டது. ஸ்ரீகாசிகாநந்த சுவாமிகள் அவர்களே 1935ல் சம்ஞாவுக்கு ஹிந்தியில் மூலசந்த்ர ஞானியால் எழுதப்பட்ட விளக்கமான வேதாந்த பதார்த்த மஞ்ஜூஷா என்பதையும் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து விட்டார். சம்ஸ்க்ருத மூல நூல், அதற்கான ஹிந்தி விளக்க உரை இரண்டையும் தமிழில் கொண்டு வந்த மகனீயர் ஸ்ரீகாசிகாநந்த ஞானாசார்ய சுவாமிகள் ஆவர்.
பரம்குருப்யோ நம: பரமரிஷிப்யோ நம:
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment