Monday, March 16, 2020

பத்து உபநிஷதங்களையும் கற்க

பத்து உபநிஷதங்களையும் படிக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் உண்டான அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சித்தாந்தபரமான அர்த்தங்களையும் கூடவே சுருக்கமாகவேனும் படிக்க வேண்டும். அதற்கென்று ஏகப்பட்ட நூல்களையெல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டு நூலகமாக வைத்துக் கொண்டு படிக்க ஆசைதான். ஆனால் எங்கே நேரம்? ஒரே நூலில் இவ்வளவும் கிடைத்தால், பரவாயில்லை கொஞ்சம் பெரிய சைஸ் நூலாக இருந்தாலும், பையில் இடம் போதாது, பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். அப்படி ஏதாவது இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள் என்று சும்மா ஒரு வார்த்தைக்குக் கூட என்னிடம் சேலஞ்ஜாகச் சொல்லிவிடாதீர்கள்! ஏனென்றால் அப்படி ஒரு நூல் இருக்கிறது. நீங்கள் ஒன்றும் பெரிய நூலை கஷ்டப்பட்டுப் பையில் எல்லாம் சுமந்து திரிய வேண்டியதில்லை. லேப்டாப்பில் போட்டு வைத்தால் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறது. க்ளிக்கினோமா, படித்தோமா என்று அமைதியாக வேலை முடியும். ஆமாம். அதுவும் 1900 ஆம் ஆண்டே வந்தது.

தசோபநிஷத் பத உரையோடு கூடியது. அர்த்தங்கள், விளக்கங்கள் தமிழில் கொடுக்கப்பட்ட திராவிட பாஷ்யம்.

சங்கர ராமானுஜ மத்வ பாஷ்யத்துடன் ஈச, கேந, கட, ப்ரச்ந, முண்டக, மாண்டூக்ய கௌடபாத காரிகை, தைத்திரீய, ஐதரேய, ப்ரஹதாரணிய, சாந்தோக்கிய உபநிஷத்துக்கள்.

மதத்ரய வித்வான்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பித்து கெ அநந்தாசார்யர் அவர்களால் சென்னை மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. ஆண்டு 1900.

என்ன அவர்கள் அவ்வளவு செய்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் நம் காலத்தில் கொஞ்சம் அதில் சில வேலைகளைச் செய்தால் இன்றும் நன்கு புரியும் நடை. இதைவிட எளிமை என்றால் இருக்கவே இருக்கிறது சுவாமி ஆசுதோஷானந்தரின் தொகுதி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment