Monday, March 16, 2020

ஆனரபிள் கொடியாலம் வாசுதேவய்யங்கார்

ஆனரபிள் கொடியாலம் வாஸுதேவய்யங்கார் என்பவரை பண்டிட் பி ஆர் கிருஷ்ணமாசாரியார் என்பவர்,

‘மறையவர்தம் மணிவிளக்கே!
மதிளரங்கப் பெரும்பதியின் வாழ்வே! இந்தத்
தரையவர்தம் தவப்பயனே!
இரவலர்தம் புரவலனாம் தருவே! கல்வித்
துறையவர்தம் புகழ்க்கணியே!
எழில்வாஸுதேவனெனும் துரையே ! சென்னை
இறையவர்தம் சபைவிளங்கும் ஏறே!
என்னுயிர்க்குயிராய் இருந்த நண்பே!’

வாய்நிறையப் பாடுகிறார் என்றால் அந்தக் கொடியாலத்தாரின் வாழ்வு எப்படி இருந்திருக்க வேண்டும்! ஸ்ரீரங்கத்தாரின் பெருமைதான். வேறென்ன! இந்த வாஸுதேவய்யங்கார் 1907ல் பரமபதம் எய்திவிட்டார். அப்பொழுது அவருடைய பெருமைகளையும், நினைவுகளையும் சுமந்த சிறு ஏடாய் ஒரு நூல் 20 பக்கத்திற்கு ஸ்ரீவாணி விலாஸ் பிரஸ் தனது வாணி விலாஸினீ ஸீரீஸ் நம். 16 என்ற வெளியீடாய்க் கொண்டுவந்திருக்கிறது. எவ்வளவு சமுதாயப் பொறுப்புள்ள வேலை! என்றோ வாழ்ந்தவர்களைப் பற்றி மட்டும் பேசாமல் தம் காலத்தில் பலர் உவப்ப வாழ்ந்த பெரியோரைப் பற்றி அந்தச் சமூகம் கொண்டாடுமானால், அதன் தெளிவாக ஊரில் இருக்கும் பிரஸ் ஒரு சிறு நூல் போடுமானால், வாழி வாழி.!

ஸ்ரீவாஸுதேவய்யங்காரின் தந்தை கொடியாலம் ரங்கஸாமி ஐயங்கார் தாது வருஷம் நேர்ந்த பஞ்சத்தில் (அதாவது 1900ஆம் வருஷம் விகாரி, அதற்கு முந்தைய தாது 1878 ஆம் ஆண்டா?) அந்தக் கொடிய பஞ்ச காலத்தில் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் நெல்லை அளித்தும், விலை பெறாமலேயே பலரிடம் நெல்லீந்தும் தம் இதயம் சுரந்து புரந்ததனால் மக்களின் இதயத்தில் நிரந்தரமாகக் குடி புகுந்தார். மக்களுக்கு அன்னம் பாலிப்பதே அவருக்குப் பெரும் நிறைவாக இருந்தது என்கிறார் பண்டிதர். ஸ்ரீரங்கஸாமி ஐயங்காரின் பெரும் ப்ரார்த்தனைகளுக்குப் பிறகு அவருக்கு அக்ஷய வருஷம் பிறந்தவர் ஸ்ரீவாஸுதேவய்யங்கார்.

கல்வி, பாஷைகளில் தேர்ச்சி, பி எ படிப்பு, அதற்குள் தந்தை பரமபதம் எய்தியதால் எஸ்டேட்டுகளைத் தாமே கவனித்துக் கொள்ள நேர்ந்தது. பல நல்ல நூல்களைத் திரட்டிப் படிப்பதில் ஆர்வம். கல்வி பயில்வார்க்கு ஆன உதவிகள், பண்டிதர்களுக்குத் தாராளமாகச் சன்மானம், நல்ல காரியங்களுக்கு முன் நின்று தம்மால் ஆன உதவிகளை நல்குதல் என்று பண்டிதர் கிருஷ்ணமாசாரியார் விவரிக்கும் போது நம் மனம் அந்தக் காலத்திற்கே போய்விடுகிறது. இவருடைய பெரு முயற்சி திருச்சியில் நேஷனல் ஹைஸ்கூல் நல்ல முறையில் விரைவாக உருவாகக் காரணமாக இருந்தது என்கிறார் பண்டிதர். உண்டி கொடுத்தும், உறுபொருள் கொடுத்தும், உயர்வதற்குக் கல்விக்கான உதவிகள் கொடுத்தும் உயர்ந்த குடும்பம் கொடியாலம் வாஸுதேவய்யங்கார் குடும்பம்.

கொடியாலத்தில் வருஷம் தோறும் இவர் நடத்திய உற்சவத்தில் சுற்றுப்புறம் பத்து மயிலுக்கு உட்பட்ட ஊரிலுள்ளார் அனைவரும் வந்து உற்சவம் பத்து நாளும் கொடியாலத்திலேயே தங்கிக் கலந்து கொள்வார்கள். அவர்களை முழுவதும் ஒரு குறை நேராவண்ணம் விருந்துபசாரம் ஸ்ரீவாஸுதேவய்யங்காரால் செய்யப்படும் என்கிறார் பண்டிதர். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, முனிஸிபாலிடி, தேவஸ்தானம் முதலிய எல்லாவற்றிலும் வாஸுதேவய்யங்காரின் பிரஸன்னம் பல நன்மைகளைச் செய்திருக்கிறது என்பதைப் படிக்கும் பொழுது நம் மனம் நிறைகிறது. காங்கிரஸ் மஹாசபையில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். சென்னைச் சட்ட நிரூபணச் சபைக்குக் குடிகளுக்குப் பிரதிநிதியாக ஒரு மெம்பரை நியமிக்க வேண்டி யாரை நியமிக்கலாம் என்று கவர்னர் யோசித்த பொழுது ஸ்ரீமான் வாஸுதேவய்யங்காரின் பெயரே பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. சென்னைக்குச் சென்று அந்தப் பணியை மேற்கொள்ளக் கிளம்பிய போது எடுத்த படம் மிகவும் மங்கலாக இருந்தாலும் அவருடைய புகழை மிகவும் பிரகாசமாகக் காட்டுகிறது. காரணம் படத்தில் ஒரு தரப்பு மக்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகள், பெரியோர், கற்றோர், எளியோர் என்று ஊர் முழுமையின் பிரதியாகச் சமுதாயமே இருக்கிறது. இவருக்கு அவ்வமயம் வாழ்த்திப் பலரிடமிருந்து வந்த தந்திகள் குவிந்தன. டாஸ்மானியாவிலிருந்து ஸர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரிடமிருந்து வந்த தந்தி விசேஷம். அவர் சென்னையில் முன்னர் கவர்னராக இருந்தவராம். ஒரு சிறு நூலில் ஊரின் இதய ஒலி பதிந்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment