Monday, March 16, 2020

ஔவைக்குறள் பற்றி

ஔவையின் குறள் மிகுந்த யோக ரகசியம் செறிந்தது. பல யோக நூல்களில் வரும் கருத்துக்களைக் கூடத் தம் குறள்களில் ஔவையார் குறிப்புணர்த்தி விளக்கியிருக்கிறார். ‘தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்’ என்பது திருமூலர் வாக்கு. இதை தியானிக்கும்போது ஔவையின் குறள்கள் நன்கு விளக்கமாக அர்த்தப்படுகின்றன.

‘எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.

ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.

இந்த இடத்தில் அருந்தவத்தால் உணர்வு நண்ணப்படும் என்ற ஔவையார் அந்தத் தவம் என்பது ஞானத்தால் ஆய உடம்பாக இருப்பது என்கிறார். நாம் இன்னும் புரியாமல் விழித்தால் அடுத்து ஒரு குறளில் நம் அல்லல் அகற்றித் தெளிவிக்கிறார்.

’ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.’

ஞானத்தால் ஆய உடம்பு என்பதில் அந்த அறிவின் இயல்பு எத்தகையது? ஆதியோடொன்றும் அறிவு. ஜகத்காரணவஸ்துவும், பரவஸ்துமான பகவானுடன் ஒன்றுதலான அறிவே உணர்வை எழுப்பும். அத்தகைய அறிவைப் பெறுவது ஒன்றே தவம் என்று அறியப்படும். உணர்வு வாய்க்கப்பெறின் அடுத்து என்ன நிகழும்?

‘உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.’

அர்ச்சனை என்ற பக்தியோகம் உணர்வு என்ற சிவலிங்கத்தை நாம் பெற்றபின்னரே தொடங்குகிறது. உணர்வைப் பெற ஆய தவம் ஆவது ஆதியோடொன்றும் அறிவைப் பெறுவது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment