Thursday, March 19, 2020

குடும்பம் என்பதின் முக்கியத்துவம்

மனித சரித்திரத்தை ஊன்றிக் கவனித்தால் நமக்கு ஒன்று புரியவரும். என்னவெனில் நாகரிகம், வளர்ச்சி, பாதுகாப்பு, கல்வி, தொடர்ச்சியான அனுபவ அறிவின் படிநிலை வளர்ச்சி என்பதெல்லாம் மனித குலத்தில் நிலைபெற்றது என்பது ’குடும்பம்’ என்ற அமைப்பு உருவான பிற்பாடுதான். குடும்பம் என்பது தோன்றுவதற்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாது. ஏனெனில் மனிதர் எவரும் தோற்றத்தின் பொழுது தனிமனிதராய்த் தோன்றுவதில்லை. குடும்பத்தின் அங்கமாகத்தான் எந்தத் தனிமனிதரும் ஏற்படுகின்றனர். மனிதக் குழந்தையின் முழுவளர்ச்சி என்பது பெரிதும் மனத்தின் வளர்ச்சியாக இருப்பதால் மனம் நன்கு வளர்ச்சி அடையும் நிலைவரையில் அதற்குப் பாதுகாப்பான சூழ்நிலை தேவையாகிறது. மனத்தின் வளர்ச்சியே மனித வளர்ச்சி என்பதால்தான் கல்வி, வழிவழி அனுபவம், பாரம்பரியம், உணர்ச்சிகளை நன்கு பயிற்றும் உறவுமுறைப் பரிமாற்றங்கள் ஆகியன எல்லாம் ஒருங்கே நடைபெறும் அமைப்பாக குடும்பம் அமைகிறது.

அம்மா என்பவள் ஆகப்பெரும் முதன்முன்னம் அன்பு என்னும் பயிற்சி அளிக்கும் ஆசிரியை ஆகிறாள். ஆனால் மனித ஜீவனின் முழுவளர்ச்சிக்கு அவள் தொடக்கமே. இன்றியமையாத தொடக்கம். அடுத்த நிலையில் மிக முக்கியமாக வந்து அமைவது அப்பா என்னும் குடும்பத் தலைவரின் பயிற்சி. உலகம் என்ற பச்சை நிஜத்தை அப்படியே மனித மனம் உள்வாங்குவது, எந்தப் பயிற்சியும் இல்லாமல், ஆக்க பூர்வமானதாக இருக்காது. சுயசிந்தனை என்பது நன்கு வடிவாகி இயக்கம் பெறச் சிலகாலம் எடுத்துக் கொள்கிறது. சுய சிந்தனையும் மனித மனத்தின் வளர்ச்சியில் வெற்றிடத்தில் திடுமென உண்டாவதன்று. எனவேதான் தந்தை பார்வைகளைச் செம்மை படுத்துபவராக அமைகிறார். உலக அனுபவங்களைத் திறம்பட எதிர்கொள்ளும் அனுபவப் பாடங்களைக் குழந்தைக்குக் கடத்தும் முக்கியமான பயிற்சி அவரிடமிருந்து கிடைக்கிறது. இத்தகைய முகாந்தரமான பயிற்சிகளை நன்கு செரித்த ஜீவன் சமுதாயம், உலகம் என்ற விரிவில் முன்னோர் அளித்துச் சென்ற கல்விச் செல்வங்களை அடைய குரு என்பவர் மிக அத்யாவசியமாகிறார். ஆசிரியர், பள்ளிக்கூடம், என்னும் அமைப்புகளில் வளரும் ஜீவனுக்கு மனத்தின் நேரடியான பயிற்சி தொடங்குகிறது. ஆயினும் குடும்பம் என்ற பயிற்சியைச் செவ்வனே முடிப்பதற்கேற்ப கல்விச்சாலை என்பது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குடும்பம் என்பது நல்ல மாணவர் என்னும் வரையில் உருவாக்குகிறது என்றால் கல்விச்சாலை நல்ல மனிதர் என்ற பயிற்சியைக் கொடுக்கிறது. அதை முடித்த பின்னர்தான் தனிஒரு மனிதர் என்பவர் சமுதாயத்தில் தோற்றம் பெறுகிறார். நல்ல தனி மனிதர்கள் என்பதன் அடித்தளமாக இருப்பது குடும்பம். எனவே குடும்பத் தலைவர் என்பவரே ஜீவனுக்கு தொடக்க நிலையில் கல்விச்சாலையாகவும் அமைகிறார். ‘குடும்பம்’ என்னும் உயிர்ச் சமுதாய நிறுவன கேந்திரத்தை அலட்சியப் படுத்தி தனி மனிதர் பற்றிய சித்தாந்தம் எதுவும் எழுவது இயல்பானதாகவோ, நன்மையானதாகவோ இருப்பதில்லை. தைத்திரீய உபநிஷதம் இந்த இன்றியமையாத கேந்திரமான அமைப்பை மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ என்று செறிவுறச் சொல்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment