Monday, March 16, 2020

ப்ரஸ்தான பேதம் என்னும் நூல்

’இதையும் கொண்டுவந்துட்டாங்கப்பா!’ என்றுதான் ஒரு நூலைப் பார்த்ததும் சொல்ல வேண்டியிருக்கிறது. அது என்ன நூல்? ஸ்ரீமதுஸூதன சரஸ்வதி அவர்கள் பல கிரந்தங்களை இயற்றியருளிய மகான். அவர் சிவமஹிம்நஸ்தோத்ர வியாக்கியானத்தில் ஏழாவது சுலோகத்தில்

த்ரயீ சாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவமிதி
ப்ரபிந்நே ப்ரஸ்தாநே பரமிதமத: பத்யமிதி ச |
ருசீநாம் வைசித்ர்யாத் ருஜுகுடில நாநாபதஜுஷாம்
ந்ருணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ ||

(’த்ரயீ என்னும் வேதம், சாங்க்யம், யோகம், பசுபதிமதம், வைஷ்ணவ மதம் என்று வழிகள் வெறு வேறாக ப்ரஸ்தானங்களைச் சார்ந்து பின்பற்றப் படுகின்றன. அவரவர்களின் ருசியின் வித்யாசத்தால் வழி சுருக்கமோ, நெடிய வழியோ பின்பற்றப்படும் பலவேறு வழிகளும் கடலைப் பல நதிகளும் பல இடங்களிலிருந்து பலவாறு வந்து கலப்பதைப் போல், உன்னையே அனைத்து வழிகளும் வந்தடைகின்றன.’ - இந்த சுலோகத்தையும் இதன் பொருளையும் சிகாகோ சர்வமத மஹாசபையில் சுவாமி விவேகாநந்தர் எடுத்துச் சொல்லி விளக்கினார் என்பது குறிக்கொள்ளத் தக்கது)

இதில் ‘த்ரயீ’ என்னும் பதத்திற்கே மிகப்பெரிய வியாக்கியானம் இட்டிருக்கிறார். அதாவது த்ரயீ என்றால் வேதம், சாத்திரம் என்ற அர்த்தத்தில், சாத்திர ப்ரஸ்தானங்கள் என்ன என்ன? எது முக்கியமான முதன்மையான ப்ரஸ்தானம், எது துணை விளக்கமான ப்ரஸ்தானம் (ப்ரஸ்தானம் என்றால் ஸிலபஸ், சான்று நூல்களின் தரவரிசை என்று கொள்க), எந்த எந்த சம்ப்ரதாயத்தில் இந்த ப்ரஸ்தானங்களை எப்படி எப்படி முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று நன்கு விளக்கமாக எழுதியிருக்கிறார் இந்த ஒரு சுலோகத்திற்கே, அதுவும் த்ரயீ, ப்ரஸ்தானம் என்னும் சொற்களுக்கு. பிறகு அவரே அந்தப் பகுதியை மட்டும் தனியே நூலாக மாணவர்கள் கற்க சௌகரியமாகவும் தந்திருக்கிறார் ப்ரஸ்தானபேதம் என்று ஒரு நூலாகவே.

இந்த நூலையும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள் அழகாக 1912லேயே. யார்? கோவிலூர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீசுப்பைய சுவாமிகள். இதை ஹிந்து தியலாஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதரான கோ வடிவேலு செட்டியார் அவர்களும், மங்கலம் சண்முக முதலியார் அவர்களும் சென்னை கோமளேசுவரன்பேட்டை சச்சிதாநந்த அச்சியந்திர சாலையில் பதிப்பித்திருக்கிறார்கள். பேரையே பாருங்கள்! ஹிந்து தியலாஜிகல் ! ஹிந்து தியாலஜி என்றே தனியே எழுத வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, அந்தக் காலத்தில் ஹிந்து தியலாஜிகல் ஸ்கூல்.!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment