Thursday, March 19, 2020

உபநிஷதம் கூறும் ப்ராஹ்மணத்துவம்

உபநிஷதங்களில் அரிய ஓர் கருத்து. யார் கிருபணன்? ஒருவர் தன்னிடம் செல்வம், திறமை, பெரும்பேறு இவை இருந்தும் அவற்றைத் தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் பயனின்றி யார் மரணித்து விடுகிறாரோ அவரைக் கிருபணன் என்று சுட்டுகிறது. சென்று மறைவது செல்வமன்று; அரைநொடியில் மறைவது ஆற்றலன்று; நில்லா சுகங்கள் எவையும் நிலைப்பேறன்று. பின்னர் எது உண்மையான செல்வம்? உண்மையான ஆற்றல்? உண்மையான பெரும்பேறு? ஆத்ம ஞானம் ஒன்றே நிலையானதும், உண்மையானதுமான செல்வம், ஆற்றல், பெரும்பேறு ஆகும். அந்த ஆத்ம ஞானத்தை யார் இந்தப் பிறவியிலேயே அடையாமல் இறப்பைத் தழுவுகிறாரோ அவர் என்ன சிறப்பு இருந்தாலும் சரியே அவரே உண்மையில் கிருபணன் ஆகிறார். சரி. அப்படியென்றால் இந்த வாழ்க்கையிலேயே பெற வேண்டிய பெரும்பேறான ஆத்மஞானத்தைப் பெற்றுவிட்டவரை யார் என்று அழைப்பது? அதாவது கிருபணன் என்பதற்கு நேர் எதிர்ப்பதமாக என்னவென்று அவரைச் சொல்வது? ஆத்மஞானம் பெற்ற ஒருவரே அவர் எவரேனும் பிராஹ்மணர் ஆகிறார். இங்கு கிருபணன் என்பதற்கு நேர் எதிர்ச்சொல்லாக பிராஹ்மணன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது உபநிஷதம்.

’யோ வா ஏதத் அக்ஷரம் கார்க்கி அவித்வாஸ்மாத் லோகாத் ப்ரைதி ஸ க்ருபண:’

’அத ஏதத் அக்ஷரம் கார்க்கி விதித்வாஸ்மாத் லோகாத் ப்ரைதி ஸ ப்ராஹ்மண:’

உபநிஷதங்கள் வர்ணக் குறிப்பாக இல்லாமல் ஆன்மிக ஞானமுடைமை என்பதைக் குறிப்பதற்காக இவ்விதம் பயன்படுத்தியிருப்பதை நாம் கவனம் கொள்ள வேண்டும். ஆத்ம ஞானம் பெறாமை கிருபணம். ஆத்மா ஞானம் உடைமை பிராஹ்மணம் என்னும் பொருளில் உபநிஷதத்திலேயே ஆளப்பட்டிருக்கிறது. இங்கு ப்ரஹ்ம என்னும் சொல்லில் வரும் ப்ரஹ் என்பது பெருக்கம், விரிவு, பொலிவு, வளமை என்னும் பொருளில் இவ்வாறு சொல் ஆளப்பட்டிருப்பது சிறப்பாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment