Thursday, February 13, 2020

கரந்த ‘ஸெல்’ இடந்தொறும்..!

ஒரு ஸெல். பயலாஜிகல் யூனிட். எவ்வளவு நுண்ணியது !. அதற்குள் ஓர் உலகமே வேலை செய்கிறது. வெறும் உலகம் அன்று. தகவல் தொழில்நுட்ப உலகம். நாம் தொலைபேசி பேசும் இந்த செல்லைச் சொல்லவில்லை. டிஎன்ஏ உருவாவது புரதத்தால். புரதம் உண்டாகவும் டிஎன்ஏ வேண்டியிருக்கிறது. அப்படியெனில் எது முதலில் உண்டாகி எதற்குக் காரணமாகிறது? சரி. ஒரு புரதம் தேவை என்றால் என்ன தேவை எவ்வளவு தேவை என்று தகவல்கள் பரிமாறப் படுகின்றன. தகவல்கள் ஏந்தியபடி ஒரு நுண்ணிய புரி, கண்ணுக்கெல்லாம் தெரியாது. அந்தத் தகவலைப் படித்து வேண்டியதைச் செய்ய உடனே உற்பத்தியில் இறங்கக் காத்திருக்கும் ஒன்று. வேனோ லேனோ எல்லாம் அங்கு எந்தத் தொடர் இணையம் இருக்கிறது? ஒரு சின்ன ஸெல்லுக்குள் இன்னும் கண்டுபிடிக்காத மர்மங்கள்.

நம்மாழ்வார் ஒரு பாட்டில் சொல்கிறார்.

கரந்த சில் இடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும்

சில் இடம் என்றால் மிக நுண்ணிய சரீரங்கள், இடம் என்றாலே நுண்ணிய சரீரம் என்று பார்க்கிறார். அந்த மிக நுண்ணிய இடம் அதனுள் எல்லாம் திகழும் பொருள். இங்கு பொருள் என்றால் உயிர். ஸோ... எவ்வளவு நுண்ணிய என்று போனாலும் அங்கும் அங்கைக்கேத்த சரீரம், அந்தச் சரீரமாகிய இடத்துள் திகழும் பொருளாகிய உயிர், இந்த இடம் உயிர் என்பனவற்றுள் திகழும் நாராயணன். எப்படித் திகழ்கிறான்? அந்த நுண்ணிய ப்ரதேசமே பெரும் பரந்த அண்டம் என்று சொல்லலாம்போல் முழுக்க வியாபித்து இருக்கிறான். ஒன்றையும் மிச்சம் வைப்பதில்லை. ஒவ்வொரு உயிரினுள்ளும் அவனுடைய விலாசம். அவனுடைய வாசம். அவனுடைய பர்மனண்ட் அட்ரஸ். ஒவ்வொரு உயிரும் அவனுடைய ரெஸிடன்ஸ்.

அவன் ஹிரண்யன் பைத்தியக்காரன். இங்குள்ளானா, இங்குள்ளானா என்று சும்மா ஒவ்வொரு பொருளையும் காட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ‘எனக்குள் உள்ளானா?’ என்று கொஞ்சம் அந்தர்முகமாகத் தனக்குள் யோகப் பார்வை பார்த்திருந்தால் போதும். மற்ற ஆர்ப்பாட்டமெல்லாம் தேவையில்லை என்று ஆகியிருக்கும். இந்த அசுரர்களே கொஞ்சம் அசடு. எல்லாம் தவம், யோகம் என்று பண்ணும். கடுமையாகப் பல ஆண்டுகள் பண்ணும். அப்புறமும் காசைக் கொடு, நிலத்தைக் கொடு, இன்பத்தைக் கொடு, நீண்ட வாழ்நாள் ஜாலியாக இருக்கக் கொடு என்று தேகத்தைத் தாண்டி ஆன்மிகத்துக்குப் போகாது புத்தி.

இங்கேயோ திருப்பாவையில் எல்லாரும் ஆன்மிகத்தை அடைந்தே ஆகவேண்டும் என்று பெரும் பேராசை படுகிறாள் ஸ்ரீஆண்டாள். ‘நான் அடைந்துவிட்டேன். ஏதோ என்வரைக்கும் போதும் அப்படியே யோகத்தில் ஆழ்ந்து கிருஷ்ணனை அனுபவிக்கிறேனே’ என்று சொல்வோரையும் எங்கேயாவது பரவச நிலைக்குப் போய்விடப் போகிறதே என்று ‘நீ என்ன ஊமையா? செவிடா? அனந்தலா? யாராவது மந்திரிச்சு பெருந்துயிலில் விழுந்தாயோ?’ என்று திட்டு மேல திட்டு. இதில் கிருஷ்ணன் மேல வேற சந்தேகம். உள்ளே கிருஷ்ணன் வேறு இருக்கிறானா? எல்லாம் எல்லாரையும் விட்டுவிட்டு தனியாக ஆகிறதா?

*
ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரனிடம் கேட்கிறார் - உனக்கு என்ன வேண்டும்? கேள்.

என்றும் கொஞ்சமும் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் சமாதி நிலையில் ஆழவேண்டும்.

அய்யய்ய... என்ன இது இவ்வளவு சின்ன விஷயத்துக்கு ஆசைப் படுகிறாய்? நீ என்னவோ பெரும் ஆலமரமாகப் பல உயிர்களும் தங்கி வாழ்ந்து போகும் அளவிற்கு பெரிதாகக் கேட்பாய் என்று நான் எதிர்பார்த்தேன்..!’
*
உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ...
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment