Sunday, February 16, 2020

பாகவத சேஷத்வம்

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்க அரங்கன் சேவடி அடையும் சடகோபன் ஏன் மறுபடியும் நம்மிடம் வருகிறார்? அதுதான் ஸ்ரீவைஷ்ணவத்தின் உச்சம். பகவானை அடைதல் என்பது ஆரம்பநிலை அவ்வளவே. அந்த பகவத் காதல் என்பது பாகவதர்களிடம், பகவானின் பக்தர்களிடம் தொண்டு பூணும் அன்பாக மாறுவதுதான் முதிர்ந்த நிலை. முதிர்ந்த நிலைக்குப் போன பக்திதான் நிலைக்கும்.

என்னை ஏன் இந்த நிலைக்கு முதலில் இந்த ஸம்ஸாரத்தில் ஆளாக்கினாய்? என்று தம் முன் தோன்றும் பகவானிடம் நம்மாழ்வார் மடியைப் பிடித்துக் கேள்வி கேட்கிறார். அவரும் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறார். ம்..ம்.. அதெல்லாம் செல்லுபடியாகவில்லை. என்ன செய்வது?

முதலில் --- யார் சார் கோவிலுக்கெல்லாம் போறது? கடவுள் இருக்குன்னு சொல்றீங்களா? என்னம்மோ நமக்கு அதெல்லாம் அவ்வளவு... சாரி.... மற்றவங்க போறத நான் தடுக்க மாட்டேன் என்ன.... - இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் ஜீவன்தான்,... பிறகு....... உலகம் அல்பம் அஸ்திரம் அசுகம் என்றெல்லாம் பட்டுப் பட்டுத் தெரிந்து பின்னர் ஐயோ அப்பா எங்க இருக்க யாராவது இருக்கீங்களா... தெய்வம் என்று ஒன்று கிடையாதா... நான் இப்படிக் கத்தறேனே காதுல கேட்கல்லியா.... என்று பரிதபித்து...

அப்புறமும் இதன் பக்குவம் நிலை நிற்க வேண்டுமே, அதற்காக கடவுள் பொறுமையாக இந்த ஜீவனுக்குப் பக்குவம் முதிரும்படியாகச் செய்து, பகவான் இல்லாமல் வாழ்வு இல்லை என்று இந்த உலக வாழ்வே அடிக்கொதிக்கும் பாலை வெப்பமாகச் சுடும் அளவிற்கு வந்து.... சரி இப்பொழுது முகம் கொடுக்கலாம் என்று வந்து நின்றால் .... ஜீவனுக்கு கடந்தகாலம் எல்லாம் நினைத்துப் பகீர் என்கிறது!

முதலில் எனக்கு ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து என்னையும் உன்னையும் மறந்த துர்கதி ஏன் ஏற்பட்டது? அதற்குச் சொல் பதில். நீ அப்பொழுதும்தானே பார்த்துக்கொண்டு நின்றாய்? இதற்குத்தான் மடிபிடித்த கேள்வி என்பது. எப்படி இதற்கு பகவான் பதில் சொல்லுகிறார்? - பராக்கு காட்டித்தான். குழந்தை அடம் பண்ணால் ஏதொ அதையும் இதையும் காட்டி கவனத்தைத் திருப்புவது போல - அதெல்லாம் இருக்கட்டும் ஆழ்வீர்! பாரும் நீர் அடையப் போகும் நிலையைப் பாரும். உமக்காக திருநாடு என்ன அமளிதுமளி படுகிறது என்று பாரும்! - என்று காட்டித்தான் மறக்கடிக்கிறார்.

அப்படியெல்லாம் போய் அடைந்துவிட்டு மறுபடியும் அடியார்குழாம் கூடுவதற்கே வந்து விடுகிறார் ஆழ்வார் என்றால் ஸ்ரீவைஷ்ணவத்தின் அறுதியான வார்த்தையை உரைத்தவர் ஸ்ரீஆண்டாள் என்றுதானே அர்த்தம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment