Wednesday, February 26, 2020

ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள்

உபநிஷதங்களின் கருத்துகளை மீமாம்ஸை நெறிப்படி நூலாக, பொருந்திய தர்க்கம், சான்றுகள் கொண்டு கிரமமாகத் தரப்பட்டவை ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்னும் வேதாந்த சாத்திரம். அதை அருளியவர் ஸ்ரீகிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர். ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் நான்கு அத்யாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திலும் நான்கு பாதங்கள். ஆக நான்கு அத்யாயங்களுக்கு மொத்தம் பதினாறு பாதங்கள் என்ற கணக்கு.

இதில் முதல் அத்யாயத்தின் பெயர் ஸமன்வய அத்யாயம். இரண்டாம் அத்யாயத்தின் பெயர் அவிரோத அத்யாயம். மூன்றாம் அத்யாயத்தின் பெயர் சாதன அத்யாயம். நான்காம் அத்யாயத்தின் பெயர் பல அத்யாயம்.

முதல் அத்யாயத்தின் பெயர் ஏன் ஸமன்வய அத்யாயம்? உபநிஷதங்களில் ஜகத் காரணமாகச் சொல்லப்படும் வாக்கியங்கள் அனைத்தின் பொருளும் சித் அசித் என்பவற்றினின்றும் வேறுபட்ட இலக்கணமுடைய ப்ரஹ்மத்தினிடத்தில் நன்கு பொருந்தி ஸமன்வயப் படுகிறது என்பதை யுக்தி ரீதியாகக் கிரமமாக தர்க்க முறைப்படி முதல் அத்யாயம் நிரூபிப்பதால் அதற்கு ஸமன்வய அத்யாயம் என்று பெயர். பிரம்மம் இந்த ஜகத்தின் காரணம், இந்த ஜகத்து பிரம்மத்தைக் காரணமாகக் கொண்டு கார்யமானது என்பதில் ஏற்படக் கூடிய ஐயங்கள், மாறுபட்ட எண்ணங்கள் ஆகியவற்றை நீக்கித் தெளிவுபடுத்தும், விரோதங்கள் இல்லையென்று நிரூபிக்கும் அத்யாயம் ஆகையாலே இரண்டாம் அத்யாயம் அவிரோத அத்யாயம். ஆக முதல் இரண்டு அத்யாயங்களாலும் பிரம்மம் என்பதைப் பற்றிய ஐயம், தெளிவின்மை எதுவும் இல்லாத, நிரூபிக்கப்பட்ட போதத்தை ஏற்படுத்துவதால் முதலிரண்டு அத்யாயங்களும் முற்பகுதியான இரட்டை அத்யாயங்கள் என்று சொல்லப்படுகின்றன. (பூர்வ த்விகம்)

மூன்றாம் அத்யாயம் பிரம்மத்தை அடையும் மார்க்கத்தை, அடைவிக்கும் சாதனத்தைப் பற்றிப் பேசுகின்ற அத்யாயம். எனவே மூன்றாம் அத்யாயத்திற்கு சாதன அத்யாயம் என்று பெயர். நான்காம் அத்யாயமோ அந்தச் சாதனத்தால் நிறைவாக அடையப்படும் பலம் என்பதைப் பற்றிப் பேசுவது. எனவே நான்காம் அத்யாயத்திற்குப் பெயர் பல அத்யாயம். மூன்று நான்காம் அத்யாயங்களைச் சேர்த்து உத்தர த்விகம் என்று சொல்வது வழக்கம். (பிற்பகுதியான இரட்டை அத்யாயங்கள்)

நான்கு அத்யாயங்கள், ஒவ்வொரு அத்யாயத்திலும் நான்கு பாதங்கள் என்று பார்த்தோம் அல்லவா? அதைப் போல் ஒவ்வொரு பாதத்திலும் பல அதிகரணங்கள் என்ற பகுப்பு உண்டு. ஒவ்வொரு அதிகரணத்திலும் குறிப்பிட்ட ஸூத்திரங்கள் உண்டு. ஆக ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஸூத்திரங்களை நூற்றுக்கணக்கான அதிகரணங்கள் என்றபடிப் பிரித்து, ஒவ்வொரு பாதங்களுக்கும் இவ்வளவு அதிகரணங்கள் என்று, ஒவ்வொரு அத்யாத்திற்கும் நான்கு பாதங்கள் என்றபடி, மொத்தம் நான்கு அத்யாயங்கள் கொண்ட சாத்திரமாக இருப்பது ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரம் என்னும் வேதாந்த சாஸ்திரம்.

இதில் ஒவ்வொரு அதிகரணமும் உபநிஷதத்தின் முக்கியமான கருத்தைத் தம்முடைய ஆய்வுக்கான விஷயமாகக் கொண்டிருப்பதால் அந்தந்த உபநிஷதக் கருத்து அடங்கிய உபநிஷத வாக்கியம் அந்தந்த அதிகரணத்திற்கு விஷய வாக்கியம் எனப்படும். இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? உபநிஷதங்கள் என்பவைதாம் மிக முக்கியமான அடிப்படையான ஒரே சான்று நூல் நம் ஹிந்து மதத்திற்கு என்பது புலனாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment