Monday, February 10, 2020

தூக்கமும் திருப்பாவையும்

நன்கு வாய்க்கு ருசியாக உண்பது, விளையாடுவது, நன்கு தூங்குவது, தூக்கத்திலும் அந்த விடியறதுக்கு முன்னாடி எழுந்திருக்கவேண்டுமே என்னும்போது வந்து கவியற தூக்கம் இருக்கே... யப்பா அதுபோல சுகம் உண்டா..... இந்த மாதிரியான most indulging moments of life இதற்கெல்லாம் உலகத்தில் யாராவது கவிதை பாடியிருக்கிறார்களா தெரியாது. ஆனால் ஸ்ரீஆண்டாள் பாடியிருக்கிறாள். வெறுமனே பாடவில்லை. தூக்கத்தையும், எழுந்துகொள்ளச் சோம்பல்பட்டுச் சுணங்குகிற தருணங்களையும் அப்படியே கடவுள் காதலாக மாற்றி ஒரு ரசவாதமே செய்துவிடுகிறாள். காலையில் குழந்தைகளை எழுப்புகின்ற தாய்மார்கள் படும்பாடு தெரியும். ‘எழுந்திரு நேரம் ஆச்சுபார்’ என்றால் வருகின்ற பதில்கள் தினுசு தினுசா வரும். எழுந்துகொள்வது போல் உடம்பை அப்படி ஒரு நெளி நெளித்து ஆள் நகர்ந்தாகிவிட்டது என்றவுடன் மொத்த போர்வையையும் எடுத்து நன்றாகப் போர்த்திக்கொண்டு, காலை கையை எல்லாம் சுருக்கி நத்தை மாதிரி உள்வாங்கிச் சொக்குகிற தூக்கம் அடேயப்பா..... பாதி நனவு, பாதி கனவு, பாதி விழிப்பு, பாதி துயில் என்ற அந்தத் தருணத்தையும் பகவானை நினைக்கும் தருணமாக மாற்ற ஸ்ரீஆண்டாள் ஒருவரால்தான் முடியும். திருப்பாவை பாடியபிறகு யாரும் காலையில் தூக்கச் சண்டையை திருப்பாவை நினைவில்லாமல் அனுபவிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து
உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்

நம் வசத்தில் இருக்கும் தருணம், நாம் அவசத்தில் நம்மை இழந்திருக்கும் தருணம் எல்லாவற்றையும் பகவத் சிந்தனமாக மாற்றியே தீருவது என்று ஸ்ரீஆண்டாள் முடிவே செய்த பின்னர் கலிகாலம் எப்படித் தொடர்ந்து இருக்க முடியும்?. நாம் அவளுடைய அருளுக்கு ஏங்க வேண்டாம். மறுக்காமல் ஏற்றுக்கொண்டாலே போதும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment