Wednesday, February 19, 2020

அஹமஸ்மி அபராத சக்ரவர்த்தி:

ஜீவர்களாகிய நமக்குச் சாதிக்க முடிந்ததெல்லாம் தெய்வத்திடம் புரியும் அபராதமே. அதையும் செய்துவிட்டு, வெட்கமும் இன்றி அந்தத் தெய்வத்திடமே பிரார்த்தனைக்கும் நிற்போம். இந்த விதத்தில் நாம் அபராத சக்ரவர்த்தி என்கிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகர். அதையும் நம்மை நோக்கி நேரே சொல்லாமல் ஏதோ தமக்குச் சொல்லிக் கொள்வது போல் சொல்கிறார். ‘அஹமஸ்மி அபராத சக்ரவர்த்தி:’ என்று தயாசதகத்தில். தெய்வத்திற்கும் மிகவும் கருணை. இந்த ஜீவன் செய்யும் அபராதங்களைப் பொருட்படுத்தாமல் இவன் ஐயோ என்று போய் நிற்கும் போது அருளும் புரிகிறது. எந்த ஜீவன் என்று கணக்கில்லாமல், அது இந்திரனும் சரி, சாதாரண மனித ஜீவனும் சரி. இதை மிக அழகாகப் பாடிக் காட்டுகிறார் ஸ்வாமி தேசிகன் தமது யாதவாப்யுதயத்தில்.

‘க்ருதாபராதேஷு அபி ஸாநுகம்பம்
க்ஷேமங்கரம் க்ஷேத்ர விவேசகாநாம் |
விச்வோபகார அத்வர பத்த தீக்ஷம்
வேத்யம் பரம் வேதவிதோ விதுஸ்த்வாம் || ‘

அபராதம் செய்பவர்களிடம் ஐயோ பாவம் என்னும் உள்ள நெகிழ்ச்சி உடையவன்; இது தேகம் இது தேகத்தினின்றும் வேறான ஆத்மா, இது க்ஷேத்ரம் இது க்ஷேத்ரஜ்ஞன் என்ற விவேகம் புரிவோருக்கு க்ஷேமம் செய்பவன்; அவன் சதா ஒரு வேள்வி புரிந்தவண்ணம் இருக்கிறான் அது என்ன எனில் அனைவருக்கும், விச்வத்திற்கும் உதவுவது என்னும் வேள்வியில் எப்பொழுதும் தீக்ஷை கொண்டவனாய் இருக்கிறான்; அறிஞர்களுக்கு அறியவேண்டியவற்றுள் மிக உயர்ந்த அறிய வேண்டிய பொருளே அவன் தான்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment