Sunday, February 9, 2020

அகவிழியும் வானமும்

வாழ்க்கையில் மண் என்பது நமது அன்றாடத் தேவைகள், கவலைகள், சூழ்நிலைகள், நம்மை எதிர்பார்க்காமல் உலகத்தின் இயல்பால் நம் யதார்த்தத்தைத் தாங்கும் அடிப்படை என்னும் இவற்றைக் குறிக்கிறது. மண் என்பது புலன்களின் அடிப்படை. அனைவருக்கும் அந்த அடிப்படையில் பெரும் கருத்து வேறுபாடு உண்டாதல் சாத்தியமில்லை. ஏனெனில் நம் இஷ்டத்தைச் சார்ந்திராமல் தன் இயல்பில் இருப்பது மண். ஆனால் இந்த ’மண்’ மட்டுமே போதும் என்று இருந்திருந்தால் ஒரு விதத்தில் எந்தப் பேச்சும் இல்லாது போயிருக்கும். உயிரின் இயல்போ மண்ணில் எழுந்து நின்றாலும், விண்ணில்தான் தன் நிறைவை எய்தும் என்றபடியாய் இருப்பது.

விண் என்பது உணர்வில் கிளர்ந்து விரிவது. வாழ்வின் அர்த்தம், அர்த்தங்களின் மேல் அர்த்தங்கள் ஒருங்குறத் திகழ்ச்சி பெறும் தொடர் பொலிவு என்பது மனத்தை புஷ்கலமாக ஆக்கும் சித் ஆகாசத்திற்கு விண் என்பது குறியீடு. அதாவது ஆன்மிகம். நாம் ஏற்கனவே பார்த்தபடி இந்த ‘மண்’ விண்’ என்னும் இரட்டையை விளக்க நிச்ரேயஸம் ~ அப்யுதயம் என்னும் இரட்டை இலட்சியம் உதவும். ஆன்மிக நன்மை என்பது நிச்ரேயஸம் என்றும், ஒருங்கிணைந்த உலக வாழ்வின் முன்னேற்றம் ஆன்மிகத்தின் முகாந்தரமாக அமைவது என்னும் இரட்டை இலட்சிய கருத்தாக்கத்தை ஹிந்துமதம் மிகவும் கவனத்திற்குக் கொண்டு வருகிறது என்று பார்த்தோம். இந்த இரட்டை என்பதை ‘உபயம்’ என்ற சொல் சுட்டும். சாத்திரங்களில் ‘உபயார்த்தம்’ என்றாலே இந்த ஆன்மிக உலக நன்மையின் கூட்டு என்ற பொருளில் வழங்கும். தமிழ் இலக்கியங்களிலோ இருமைக்கும் நன்மை, இம்மை, மறுமை என்று இதனைச் சுட்டுவர்.

நம் மகாகவி பாரதியார் இந்தக் கருத்தாக்கத்தை எப்படி ஒரே பாட்டில் சொல்கிறார் என்பது அறிந்து வியப்புறத் தக்கது.

‘கனவென்றும் நனவென்றும் உண்டோ? - இங்கு
காண்பது காட்சி அல்லால் பிறிதாமோ?
மனையில் இருப்பது வானம் - அந்த
வானத்தின் வந்தவர் தேவர் முனிவர்
நினைவது செய்கை அறிவீர் - எந்த
நேரத்தும் தேவர்கள் காப்பது வையம்
வினவிற் பொருள் விளங்காது - அக
விழியைத் திறந்திடில் விண்ணிங்கு தோன்றும்.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.’

வானம் ~ வையம் என்ற இரட்டையாய் வைத்து பாரதியார் பாடுவது அழகு! இதை விசாரத்தால் அறிவதை விட அகவிழியைத் திறந்தே விண் என்பதைக் காணலாகும் என்கிறார். ’என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ என்பது சடகோபன் காட்டிய யோக சக்ஷுஸ்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment