Sunday, February 9, 2020

விண்ணுக்குள் விளங்கும் மண்

தெய்வமோ நம்மை உயர்த்த இங்கு வந்து அவதரிக்கிறது. நம்மில் ஒருவராய், நாம் அதனை விரும்ப வேண்டும் என்று நம்மை நம்பி இருப்பதுவாய்த் தன்னைத் தாழவிட்டுப் பரிமாறுகிறது. நமக்காகத் தெய்வம் அழும் அழுகை விண்ணெல்லாம் கேட்கிறது. அழுகின்ற தெய்வத்தின் வாயில் பார்க்கிறோம். அதன் உள்ளே நாம் நமது என்று நினைத்துக் கொண்டிருக்கும் மண் முழுவதும் அங்கு இருக்கிறது. மண் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. அதனை உணர்ந்து நாமும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் தெய்வத்திற்குள் நமது வாழ்வு என்று ஆகியிருக்கும். ஆனால் நாமோ தான் தனது என்று பேதம் பிரமித்து, மண் நமது என்று மயக்கம் ஆழ்ந்து விண்ணை அண்ணாந்து நோக்குகிறோம். நாம் நம்மை உணர்ந்தால். நாம் நம்மை உணரும்வரை தெய்வம் அழுகையை நிறுத்தப் போவதில்லை. விண்ணெல்லாம் கேட்கும் அழுகை! பெரியாழ்வார் சொல்கிறார்:

’விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்; உன்வாயில்
விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்றிருந்தேன்.’

மகாகவி பாரதியார் பாடுகிறார்:

‘தன்னை மறந்து ஸகல உலகினையும்
மன்ன நிதம்காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அமைவெய்தி நெஞ்சம்
துவளாதிருத்தல் சுகம்.’

நாம் என்ன செய்வது? நமக்கு இந்நிலையில் கைகொடுப்பது பிரார்த்தனை மட்டுமே. அவளிடமே பிரார்த்திப்போம் -

‘மர்மமான பொருளாம் - நின்றன்
மலரடிக்கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் - சேர்ந்தே
தேசு கூட வேண்டும்.’

தெய்வத்திற்குள் நாமும் நம் உலகும் அமைவுறக் காணும் பக்குவம் அந்தத் தெய்வமே நமக்குத் தரவேண்டும். நம்மால் ஆனது இதய பூர்வமான தாபம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment