Friday, February 14, 2020

துயிலெழுப்புதல்

தெய்வ மானிடர்களின் செயல்கள் அறிதற்கு அரியன. அவர்களுக்கு என்ன கிடைக்கிறது அதில்? ஏன் அவர்கள், விழுவதையே விரும்பும் நம்மைத் தூக்கி நிமிர்த்தி விண்ணுயர அழைத்துச் செல்லத் துடிக்கிறார்கள்? எத்தனை அருளாளர்கள் வந்து நம்மிடம் தோற்றுப் போயிருக்கிறார்கள்? அத்தனை பேர் சொன்னதையும் விழுங்கி ஏப்பம் விட்ட கணக்கு யாருக்கு நினைவில் இருக்கும்? ஆனாலும் விடாமல் நம்பால் பரிவு கொண்டு வருகிறார்கள். நம்மில் ஒரு பகுதி அவர்களிடமிருந்து ஓடி ஒளிகிறது. ஆனால் ஒரு பகுதி அவர்களுக்குக்காக ஏங்கிக் கதறுகிறது. அவர்கள் பார்வையில் நாமெல்லாம் விழுந்து எழுந்து சரியும் சிறு கன்றுகள். அவர்களிடம் இருக்கும் குணமோ தாய்மை. அத்தனை தெய்வ மனிதர்கள் அனைவரிடமும் இருந்த ஒற்றைக் குணம் தாய்மை. அவர்களோ பனித்தலை வீழ நம் வாசல் கடைபற்றி நின்று ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?’ என்று சளைக்காமல் நம்மை எழுப்புகிறார்கள்.

நம்மை எழுப்புவது இருக்கட்டும். ’இந்த மக்களிடம் எத்தனைதான் ஓலியாடுவது? யாரும் கவனிக்கும் பாடில்லை. பேசாமல் நாம் ஆழ்ந்து சமாதிநிலையில் நன் அனுபவத்தைப் பார்ப்போம்’ என்று இருக்கும் தெய்வ மனிதர்களையும் போய் எழுப்புகிறார்கள்.

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?

எழுப்பினாரா இல்லையா? பெரும் சோதிக் கடலான இடத்திலிருந்து ஓர் குழந்தை திவ்ய தேஜஸுடன் தவழ்ந்து வந்து ஆழ்ந்த சமாதி நிலையில் உறைந்து நின்ற முனிவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ‘நான் போகிறேன். நீங்கள் வரவில்லையா?’ என்று இளநகை ததும்ப எழுப்பிவிட்டுத் தானே வந்தது? அறிதுயிலில் ஆழவிடவில்லையே! முனிவரை சிகாகோ பார்லிமண்ட் தொடங்கித் தம் அரும்பணியை ஆற்றாமல் விடவில்லையே?

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கனையிருள் அகன்றது

என்று அறிதுயிலும் அரங்கனை எழுப்பினார் தொண்டரடிப்பொடியார். கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் என்று கிருஷ்ணானுபவத்தில் தோய்ந்து தம்முள் இருப்பவர்களையும் விடாமல் எழுப்புகிறாள் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீஆண்டாளுக்கு ஒரே நோக்கம் வெறும் கன்றுகள் நிலையில் தத்தித் திணறும் நாம் உணர வேண்டாமா? இதற்கு மேலும் தூங்கினோம் என்றால் ஒரு வேளை பசுக்களும் கன்றுகளும் நம்மிடம் வந்து ‘ஃபார் எ சேன்ஜ் நீங்க போய் கொட்டிலில் படுத்து உறங்குங்கள். நாங்கள் வீட்டுவாசிகளாக இருக்கிறோம்’ என்று சொன்னாலும் சொல்லும். எதற்கு வம்பு? எழுந்து விடுவோம்.

’‘கறவைகள் பின் சென்று
கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து
உன் தன்னைப் பிறவிபெறுந்தனைப்
புண்ணியம் யாமுடையோம்.
குறைவொன்றுமில்லாத கோவிந்தா!
உன் தன்னோடு உறவேல்
நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது.
அறியாத பிள்ளைகளோம்..’’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment