Tuesday, February 25, 2020

நம்மாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு அருளிச்செய்தது ஸ்ரீபெரியாழ்வார். நம்மாழ்வாரும் ஒரு திருவாய்மொழியைத் தாம் அனுபவித்த திருப்பல்லாண்டு என்னும்படி அருளிச் செய்திருக்கிறார். அது எந்தப் பத்துப் பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி?

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி ‘அங்கும் இங்கும்’. இரண்டாம் திருவாய்மொழியில் ‘பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி ஓர் கோல நீல நன்னெடுங்குன்றம் வருவதொப்பான்’ என்று பாடினார். உடனே இத்தகைய வடிவோடே இந்தப் பொல்லாங்கு நிறைந்த ஸம்ஸாரத்திலே வருகிறானே என்று பதறி, அவன் காப்பவன், தாம் காக்கப்படும் உயிர் என்பதையெல்லாம் நினைவின்றி அவனுக்குப் பரிவார் யாரும் இல்லையோ என்று அவன் தனிமைக்கு வெறுத்து பீதராகிறார் அல்லது அவன் தனிமைக்குப் பரிவதில் தமக்கு யாரும் துணைசேரவில்லையே என்று தம் தனிமைக்கு வெறுத்துப் பாசுரம் அருளிச்செய்கிறார். இந்தப் பத்து பாசுரங்களும் நம்மாழ்வாரின் திருப்பல்லாண்டு என்று அருளிச்செய்வர் - என்று அனுபவிக்கிறார் அரும்பத உரையாசிரியரான குணக்கரம்பாக்கம் ராமாநுஜ ஜீயர். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டோடு பக்கம் வைத்து அனுபவிப்பதும் ஓர் அனுபவம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

No comments:

Post a Comment