Tuesday, February 25, 2020

வேதாந்தம் உபநிஷத்து ப்ரஹ்ம ஜ்ஞானம்

வேதாந்தம் என்பது உபநிஷதம் என்பதைக் குறிக்கும். வேதத்தின் நிச்சயம், நிர்ணயமான தத்துவக் கருத்து, வேதம் என்ன சொல்லவந்ததோ அந்த முக்கியமான கருத்து நிறைவுபெறும் பகுதி என்ற பொருளில் உபநிஷதம் என்பதுதான் வேதத்தின் அந்தம். அந்தம் என்றால் கடைசிப் பகுதி என்ற பொருளில் இதைப் புரிந்துகொள்ளக் கூடாது. உபநிஷதங்கள். மிக முக்கியமான உபநிஷதங்கள் என்று பத்து உபநிஷதங்களைக் கவனத்தில் கொண்டு ஆசாரியர்கள் உரைகள் எழுதியுள்ளனர். காலத்தால் முன் வந்த ஆசாரியர் ஸ்ரீஆதிசங்கரர்.

உபநிஷதக் கருத்துக்களைத் தொகுத்து மீமாம்ஸை நெறிப்படி, தர்க்க ரீதியாகத் தந்திருக்கும் நூல் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் எனப்படும் வேதாந்த ஸூத்திரங்கள். சுலோகங்கள் வடிவில் உபநிஷதக் கருத்துக்களை பக்தி தோய தந்திருக்கும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதை. ஆக உபநிஷதங்களே முதன்முன்னம் முக்கியமான ஏக ப்ரமாணம். அதன் கருத்துக்களை விளக்கவும், நெறிப்படுத்தித் தரவும் உதவும் நூல்கள் கீதையும், வேதாந்த ஸூத்திரங்களும் ஆகும் என்பது இப்பொழுது நமக்குப் புரிந்து கொள்ள முடியும். அப்படியென்றால் உபநிஷதம் என்றால் என்ன? இதைப் பற்றி யாரேனும் நம பண்டைய ஆசாரியர்கள் விளக்கம் தந்துள்ளனரா என்று பார்த்தால் மிகத் தெளிவாக விளக்கம் தந்துள்ளனர்.

பகவத்பாதரான ஸ்ரீஆதிசங்கரர் தமது உபநிஷத் வியாக்கியானங்களில் உபநிஷதம் என்றால் எதைக் குறிக்கும் என்று தெளிவுபட விளக்கியிருக்கிறார். ஓரிடத்தில் ஈரிடத்தில் அன்றிப் பல இடங்களிலும் அறுதிபட அவர் விளக்கியிருக்கும் நேர்த்தி அழகு!.

ஆத்மஞானத்தைப் போதிப்பதுதான் உபநிஷதம் என்பது அவர் பல இடங்களிலும் விளக்கும் கருத்து. அது மட்டுமன்றி, உபநிஷதம் என்ற சொல்லே ஆத்ம ஞானம் என்பதையே குறிக்கும் என்றும், அதனாலேயே ஆத்மஞானத்தைப் போதிக்கும் வித்யைக்கே உபநிஷதம் என்பதே பெயராக வந்துவிட்டது என்றும் கூறுகிறார்.

தைத்திரீய உபநிஷதத்தின் வியாக்கியானத்தில் அவர் கூறுவது: “அத ப்ரஹ்ம வித்யார்த்தோபநிஷத் ஆரப்யதே| உபநிஷத் இதி வித்யா உச்யதே|.. ப்ரஹ்மண உபநிகமயித்ருத்வாத், உபநிஷண்ண வா அஸ்யா பர ச்ரேய இதி | தத் அர்த்தத்வாத் க்ரந்தோபி உபநிஷத்” -

பொருள் - “எனவே ப்ரஹ்மத்தைப் பற்றிப் போதிக்கும் இந்த உபநிஷத் ஆரம்பிக்கப் படுகிறது. ஆத்மா பற்றிய வித்யையே உபநிஷதம் என்று சொல்லப்படுகிறது. ப்ரஹ்மத்தின் நெருக்கத்தில் ஒருவரை அழைத்துச் செல்வதாலும் உபநிஷத். பரம ச்ரேயஸ் என்பதைத் தருவதாலும் உபநிஷத். இந்தப் பொருளிலேயே கிரந்தத்திற்கே உபநிஷதம் என்று பெயர்.’

ப்ருஹதாரண்யக உபநிஷத வியாக்கியானத்தில் ஸ்ரீஆதிசங்கரர் கூறுவது: “ஸேயம் ப்ரஹ்மவிதயா உபநிஷத் சபதவாச்யா, தத்பராணாம் ஸ ஹேதோ: ஸம்ஸாரஸ்ய அத்யந்த அவஸாதநாத்; உபநி பூர்வஸ்ய ஸதே: தத் அர்தத்வாத் | தாதர்த்யாத் க்ரந்தோபி உபநிஷத் உச்யதே “

பொருள்: ‘இந்த ப்ரஹ்ம வித்யைக்கே உபநிஷதம் என்று பெயர். இதைச் சார்ந்து கற்பவரிடமிருந்து இந்த ஸம்ஸாரத்தை அடியோடு நீக்கிவிடுகிறது. உபநி என்னும் முன்னொட்டும் ஸத் என்னும் தாதுவினோடு சேரும் போது இந்தப் பொருளையே தருகிறது. அதே பொருளில்தான் நூலிற்கும் உபநிஷத் என்று சொல்லப்படுகிறது.’

ஈஸாவாஸ்ய உபநிஷதத்தில் ஸ்ரீஆதிசங்கரர் கூறுவது: “ஸர்வாஸாம் உபநிஷதாம் ஆத்ம யாதாத்ம்ய நிரூபணேந ஏவ அபேக்ஷயாத், கீதாநாம் மோக்ஷதர்மாணாம் ச ஏவ பரத்வாத்”

பொருள்: ‘அனைத்து உபநிஷதங்களுக்கும் உட்கிடக்கையாவது என்னவெனில் ஆத்மாவின் உண்மையான இயல்பை நிரூபிப்பதே ஆகும். கீதைக்கும் மற்று மோக்ஷதர்மம் போன்ற நூல்களுக்கும் அதுவே நோக்கம் ஆகும்.’

இப்பொழுது நமக்கு உபநிஷதம் என்றால் என்னவென்று தெளிவாகியது அல்லவா? உபநிஷதம் என்றால் வேதாந்தம். வேதத்தின் அந்தம் எனப்படும் அர்த்த நிச்சயம். நிர்ணயமான வேத அர்த்தம். வேதத்தின் உட்கருத்து என்னவோ அது நிறைவேறின அறுதியான பகுதி. அந்த உபநிஷதம் என்றாலே பொருள் ஆத்மஞானம் என்பதே ஆகும் என்று கல்வெட்டி உரைத்தாற்போல் ஸ்ரீஆதிசங்கரரின் விளக்கத்தின் பின்னர் நமக்கு என்ன குழப்பம் இருக்க முடியும்?

உபநிஷதம் என்பதைப் பற்றித் தமது தைத்திரீய உபநிஷத வியாக்கியானத்தில் ஸ்ரீகூரநாராயண ஜீயர் கூறுவது: “பரஸ்ய ப்ரஹ்மண: ஸமீபே வாசகதயா நிஷீதந்தி இதி உபநிஷத:| பரப்ரஹ்ம பிரதிபாதகத்வாத் தத்ப்ராப்தி ஹேதுத்வாச்ச பரவித்யா ஏதா: |”

பரப்ரம்மத்தின் சமீபத்தில் கற்பவரைக் கொண்டு போய் வைப்பது என்பதால் உபநிஷதம். பரப்ரஹ்மத்தை நன்கு விளக்கிப் புரிய வைப்பதாலும், அந்த பரப்ரஹ்மத்தை அடைவதற்கான காரணமாக இருப்பதாலும் பரவித்யை என்று ஆகிறது.

உபநிஷத் என்றால் ப்ரஹ்மஞானம் என்பதைக் குறிக்குமா?

சாந்தோக்ய உபநிஷத் பாஷ்யத்தில் ஸ்ரீரங்கராமானுஜ முனிவர் கூறுவது: “உபநிஷத் சப்தேந உபநிஷத் ஜன்யம் ப்ரஹ்மாத்மகத்வ ஜ்னானம் உச்யதே”

’உபநிஷத் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது உபநிஷத் மூலமாக உண்டாகும் ப்ரஹ்மாத்மகத்வ ஜ்னானம் என்பதே ஆகும்.’

வேதம் என்பதன் முக்கிய நோக்கமே ஆத்ம ஞானத்தை மனிதருக்குப் போதிப்பதுவே ஆகும் என்பதில் நூலும் தெளிவு, நோக்கமும் தெளிவு பின் ஏன் குழப்பம் நம்மிடம் தேவையில்லையே.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment