Tuesday, September 8, 2020

இம்மையும் மறுமையும் புத்தரும்

 இம்மை, மறுமை; இகம், பரம்; அப்யுதயம், நிச்ரேயஸம்; - இவை இரட்டை இலட்சியங்களாக ஹிந்துமதம் முன்னிறுத்துகிறது. ஆன்மிகச் சிறப்பை மட்டும் ஒருவர் அடைந்தால் போதும் என்று விரக்தியில் மிக்கவர்கள் நினைத்தாலும் பொதுவான இலட்சியம் என்பது வாழ்வின் வளம், ஆன்மிக உணர்வின் சிறப்பு இரண்டுமே இணைந்துதான் வாழ்வின் முழுமையான இலட்சியம் என்பதை அப்யுதயம், நிச்ரேயஸம் என்பது குறிக்கிறது. இஹம், பரம் என்பது இங்கு என்னும் இவ்வுலகில், இவ்வுலக வாழ்வைக் கடந்த அவ்வுலகில் என்று இம்மை, மறுமை என்ற செயல், செயலின் விளைவின் தொடர்ச்சி என்பதை வலியுறுத்தி சீரிய அற உணர்வுக்கு வழிவகுக்கிறது. ஒருவர் இங்கு செய்யும் செயல் இங்கோடு போய்விடும் என்பது இல்லை; மறுமையிலும் அவரை நலியும் என்ற கருத்து அறவழியைச் சமுதாயத்தில் நன்கு நிலைநிறுத்தும் கருத்தாகும். ஏதோ அந்த நேரத்தில் மனம் போனபடி, உணர்ச்சிகளின் வழி என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதன் விளைவுகள் என்று ஒன்றும் கிடையாது; தப்பித்துக் கொள்ளாலாம் என்ற தற்குறியான கருத்து பாரத மண்ணில் எழுந்த எந்த நெறிகளிலும் இல்லை. ஹிந்து சமுதாயத்தில் எழுந்த எந்த மார்க்கத்திலும் இத்தகைய கண்மூடித் தனத்தை நாம் பார்க்க இயலாது.

புத்தபிரானின் உபதேசங்களான தம்மபதத்தில் ஒரு சுலோகம் இவ்வாறு கூறுகிறது:
‘பாபங்கள் செய்வோர் இவ்வுலகத்திலும் சோகம் அடைகின்றனர்; மறுமையிலும் அவர்கள் சோகமே அடைகின்றனர். இரண்டு இடத்தும் சோகம் உறுகின்றனர். அவர்கள் தாமே புரிந்த குற்றங்கள் காட்சியுறவே அவர்கள் தாமே சோகமுறுகின்றனர்; சோகத்தால் தளர்ந்தும் போகின்றனர்.’
பாபகாரீ இத சோசதி பெக்க சோசதி
உபயத்த சோசதி
சோ அத்தனோ கிலித்தம் கம்மம் திச்வா
சோசதி சோ விஹஞ்ஞதி. (தம்மபதம் 15)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment