Tuesday, September 8, 2020

விழிப்பு என்னும் நுழைவாயில்

 நல்ல மனிதர்கள்தாம். ஆனால் பாவம். நாசகர சக்திகளின் பிடியில் மாட்டிக்கொண்டு அவை ஆட்டிவைக்கும் விதத்தில் ஆடவேண்டிய துர்க்கதி. - இவ்வாறு பரிதாபப் படுவதைக் கேட்டிருப்போம். இப்படிப் பட்ட நிலைதான் இந்த ஜீவனுக்கு. உடல் என்னும் யந்திரத்தில் அதனைத் தன் பயணத்திற்கு, தன் இலட்சியத்திற்கு இயக்க வேண்டிய நிலைமை மாறி ஐம்புலன் ஆட்சிக்கு அடிமையாகி இயந்திரம் என்பது அதுவே இயக்குவோனாகவும், இயக்க வேண்டியவன் இயக்கப்படும் இழிநிலை ஆகவும் - இது எப்படி மாறும்? ‘ஆத்மாநம் ரதிநம் வித்தி’ என்று சொன்னதை எப்பொழுது புரிந்து கொள்வோம்?

கட்டுண்டவர் விடுதலை ஆக வேண்டும் என்றால் முதல் படி அவர் தாம் கட்டுண்டிருக்கிறோம் என்பதைப் பூரணமாக உணர வேண்டும். புலன்களில் கட்டுண்ட இந்த ஜீவன் என்ற அடையாளம் அன்று தன்னுடையது; உண்மையில் இந்தப் புலன்கள் காளாமணி விளக்காக இருந்து விளக்கெரிக்கும் கருவறையில் கடவுள் உள்ளுயிராய்த் துலங்க விளங்கும் வடிவமாகிய ஆத்மனே தான் என்று ஆத்ம ஞானத்தை அன்றோ அடையாளமாகக் கொள்ள வேண்டும். அதற்கு முதல் படிதான் தன் இற்றைய வாழ்க்கை எதன் வசமாக நடந்து கொண்டிருக்கிறது என்னும் விழிப்பு. அவ்வாறு விழிப்பின் வசனமாக வருவதுதான் ’நான் செய்வதெல்லாம் காமத்தின் வசப்பட்டு ஜீவனாகத் தான் இயங்கும் நிலைமை. கோபத்தின் வசப்பட்டு ஜீவனாகத் தான் இயங்கும் துர்க்கதி’. - இதை விழித்த தனக்குத் தானே நன்கு உணர்ந்து கொள்ளும் வார்த்தையே - காம: அகார்ஷீத்; மன்யு: அகார்ஷீத் என்னும் ஜபம்.
ஆத்ம ஞானத்தின் நுழைவாயிலாக இருப்பது இந்த விழிப்பு. இந்த விழிப்பை நிலைத்த உணர்வாக மாற்றும் கலைதான் இந்த ஜபம். கவச மந்திரங்கள் ஆகட்டும், அல்லது இந்த ஜபம் ஆகட்டும் - நோக்கம் என்னவோ ஒன்றேதான். உடல் என்னும் யந்திரத்திற்கு உணவாக இந்த உயிர் படும் அவஸ்தையை மாற்றி, இந்த உடல் என்னும் யந்திரத்தைத் தன் ஆன்மிகப் பயணத்திற்கு உரிய ரதம் ஆக இந்த ஜீவன் கொள்ளும் வெற்றி என்னும் முதல் கட்டம். இதையே ஹிந்துமதத்தின் பல வழிபாடுகளும் பலவேறு விதங்களில் பலவித மக்களுக்கும் பயிற்றி வைக்கும் ஆத்ம ஞான வழிமுறைகளாக இருக்கின்றன.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment