Tuesday, September 1, 2020

ஸ்ரீமத் பாகவத தசமஸ்கந்த கீர்த்தனைகள்

 என்ன என்ன முயற்சிகள்! என்ன என்ன சாதனைகள்! கவிதை பாடலாம், செய்யுள் இயற்றலாம், பல்லாயிரம் பாடல் சொல்லோவியம் செய்யலாம். ஆனால் கீர்த்தனை என்ற இசைவடிவில் எவ்வளவு பாட முடியும்? 100 கீர்த்தனை? நீங்க வேற. ஒருவர் பாடியிருக்கிறார் பாருங்கள்! மொத்த ஸ்ரீமத் பாகவதம் தசம ஸ்கந்தம் முழுமையுமே கீர்த்தனங்களாக, நுணுக்க எழுத்து, பெரிய சைஸ் நூல், உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு மேல். போதுமா? அத்தனையும் ராகம் தாளம் பல்லவிக்கு, இசைக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி. அதைப் படிக்கும் போதே பழைய முறையில் மனத்தில் பாடிப் பார்க்கும் பொழுதே, யப்பா, ஒவ்வொன்றும் அள்ளுகிறது! நாச்சியார் கோவில் பக்கத்தில் உமையாள்புரம். அங்கு பூர்வசிகை ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் உதித்தவரான ஸ்ரீஅநந்தபாரதி ஸ்வாமிகள். காலம் 1786 ஆ? சாலிவாஹன சகாப்தம் 1707 என்று சொன்னால். இவருடைய குலகுரு உத்தமசீலி ஸ்ரீநிவாச தீக்ஷிதர். ஸ்ரீ அநந்தபாரதி ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தை, ஸ்ரீதரீயத்தின் ப்ரகாரம் கீர்த்தனைகளாகவே நாடகப் பாணியில் இயற்றியுள்ளார். சீர்காழி அருணாசலக் கவிராயரின் ஸ்ரீராமநாடகக் கீர்த்தனை முன்னூக்கம். திரிசிரபுரத்து ஸ்ரீராமசாமி ஐயரின் வேண்டுகோள் நமக்கு இந்த அற்புத நூலின் காரணம்.

தொடக்கத்திலேயே ஒரு விருத்தம் வைக்கிறார்:
‘கீதை சொன்னார் பார்த்தனுக்குக் குருவாயந்த க்
கிருஷ்ணனையே பெரியாழ்வார் மிகக்கொண்டா டும்
பாதையறி வீர்சட கோபன்சொன்னா ரே
பரகாலன் முதலான பதின்மர் சொன்னா ர்
கோதை சொன்னாள் இங்கிவர்கள் சரணம்போற்றி க்
குருமாரை அடிபணிந்து கூறுகின்றே ன்
கோதைதந்த நந்தன முகுந்தன்கா தை
சொல்லுவீர்வினைக ளெல்லாம் வெல்லுவீ ரே.’
ஸ்ரீமத் பாகவத் நூற்பெருமையைச் சொல்லுகிறதாக ஒரு கீர்த்தனை - தோடி ரூபக தாளம்
பல்லவி
மகிமைசேரும் ஞானம்தரும் அரிகதையிது வே
சுகமுனி முகத்தாமரை மலரில்பிறந்த மாமது வே
அநுபல்லவி
புகழ்தானே படைக்கி ற
புண்ணியசாலிகளாம் புருடருக்கே கிடைக்கி ற (மகிமை)
சரணங்கள்
வேதமெனும் கற்பகத் தருவின் கனியினிரத மே
விஷ்ணுபத கங்கை போலே வினைதீர்க்கு மற்புத மே
மேகவண்ணன் பதமே நல்ல
பாகவதாமுதமே ஞான
யோகநெறிக்கிதமே சுவி
வேகமே உச்சித மேலான உன்னத மே
மெய்ப்பொருளாம் வேதவியாச முனிகிருத மே (மகிமை)
மாச்சரியம் இல்லாதார்க்கு கவடில்லாத தர்ம ம்
வகையாங்கர்ம ஞானதேவ காண்டத்திலும் மர்ம ம்
ஆச்சரியம் இம்மங் கள
மீச்சுரமே நன்மந் திர
தீட்சைபரப் பிர்மம் அறி
பேச்சிதுவாயும் மனதில் ஊர்ச்சித ஞானம் ம
ருமஅறிகுவாரவருட ஜன்மமே ஜன்ம ம் (மகிமை)
...... ..........................
........................
என்று இப்படிப் போகிறது கீர்த்தனை.
‘உலகுண்டகனிவாயர் உயர்பாண்டவசகாயர்
தலமதனிற் புகழ்மாயர் சரித்திரத்தைக் கூற..’
என்று களைகட்டிக் கன அலங்காரமாகக் கீர்த்தனாலோகம் நூல்முழுக்க திவ்யபோகம் ஆக இருக்கிறது. கொள்ளவாரும் ஜகத்தீரே! ஜகம் வேண்டாம் தமிழ்நாட்டினரே! தமிழ்நாடு வேண்டாம். திருச்சிக்காரவுகளே! என்றெல்லாம் குரல் கொடுத்தால் யார் காதில் விழப் போகிறது? ‘சந்தை இரைச்சலில் கவிதை யாருக்கு வேண்டும்?’ என்றார் திருலோக சீதாராம் அன்றே. சொல்லிவைப்போம். விடியும்போது விடியட்டும்.
***

No comments:

Post a Comment