Thursday, October 21, 2021

சுவாமி விவேகாநந்தரின் முழுநூல் தொகுதிகள் - ஒரு விமரிசனம்

சுவாமி விவேகாநந்தரின் முழு நூல் தொகுதிகள் எந்த விதக் கால நிரல் திறனாய்வுக் கோட்பாடும் இன்றித் தொகுப்புண்டு இருக்கிறது. எவ்வளவு பத்தாண்டுகள் கடந்து விட்டன! ஆனாலும் அத்வைத ஆசிரமம் அப்படியேதான் போட்டுக் கொண்டிருக்கிறது.

வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். விவேகாநந்தருடைய கடிதங்கள் அனைத்தையும் கால வரிசைப் படி போட்ட ஒரு பதிப்பு வந்தாலே மிகவும் உபயோகம். கூடவே அவரது அனைத்து சொற்பொழிவுகளும் கால வரிசைப்படி அமைத்த ஒரு பதிப்பு. இதைச் செய்தாலே விவேகாநந்தரைப் பற்றிய நுணுக்கமான புரிதலுக்கு மிகவும் உதவி.

மடத்துக்கு ஆதாரமே விவேகாநந்தரின் நூல்களும், ம என்பார் எழுதிய ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய டைரிக் குறிப்புகளும்தான். இவற்றைக் காலத்திற்குக் காலம் செவ்விய பதிப்புகளாய் ஆக்கிக் கொண்டு வருவதை விட மடத்தாருக்கு வேறு என்ன கடமை இருக்க முடியும் என்று நமக்குப் புரியவில்லை. அதுவும் காகிதத்திலும், அச்சு வடிவிலும் எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல், மிகச் சீரிய பதிப்பாக இந்த நூல்களைப் போட்டு அத்தனை மக்கள் கையிலும் புழங்க விடுவதுதான் தலையாய பணி என்று அவர்களுக்கே தெரியாதா? அல்லது அவர்களின் பார்வை வேறா?

இந்த நூல்கள் ஏதோ மடத்து சமாசாரம் மட்டும் இல்லை. இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியம், பாரத தேசியப் பான்மை, ஹிந்து சமுதாய முன்னேற்றம், அனைத்து மதங்களிடையே ஆக்க பூர்வமான உணர்வுப் பரிமாற்றங்கள், மேற்கு, கிழக்கிடையே சூழ்ச்சிகள் அற்ற பரஸ்பரக் கல்விகள், இந்திய மக்களிடையே வெறும் கண்மூடித்தனமான பழமை போற்றுதல்களிலிருந்து விழிப்பு பெற்றுத் தெளிவடைதல் என்று எல்லாவிதத்திலும் மக்கள், தேசம், மரபு என்று அனைத்துக்கும் ஆன நன்மை அந்த நூல்களின் ஆழ்ந்த புரிதல்களில் அடங்கியிருப்பதால்தான் இவ்வளவு கவலைப்பட வேண்டியிருக்கிறது. இந்தக் கவலைகளைப் படுவதற்குத்தான் மடத்தை ஏற்படுத்தினார் விவேகாநந்தர். மடமும் பெருமளவு உரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஆயினும் இந்த அடிப்படைப் பணியிலும் கவனம் செயல் வடிவம் பெற்றால் நன்மை மிகுதியும் உண்டே என்ற அக்கறை இவ்வாறு எழுத வைக்கிறது.


விவேகாநந்தருக்கு ஜயம் உண்டாவதாகுக! ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஜயம் விளைக!

***

No comments:

Post a Comment