Saturday, October 23, 2021

அங்கேயும் இதே கஷ்டம்தானா?

துறை சார்ந்த கல்வி, ஆய்வு என்னும் நோக்கில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்பொழுது கேட்பவரும் அவ்வாறு துறை சார்ந்த தெரிதலும், சொற்களுக்கு உண்டான கறாரான துறை சார்ந்த அர்த்தங்களும் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பது முன் எப்படியோ வரவர அபூர்வமாகவே அமைகிறது. துறை சார்ந்து படிக்கப் புகும் நபர்களே கூடக் குத்துமதிப்பாகவும், குறையாகவும் பல சொற்களுக்கும் தாங்கள் சூழ்நிலையிலிருந்து உறிஞ்சிக் கொண்ட அர்த்தங்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டுதான் செல்கிறார்கள். யதேச்சையாகத் தொற்றிக்கொண்ட அர்த்தங்கள் பின்னர் கல்வித் தேர்ச்சியால் மாறுகிறதா திருத்தம் அடைகிறதா ஒன்றும் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் மென்டல் க்ளீனிங் என்னும் சித்த சுத்தி ஒருகாலும் நடைபெறுவதில்லை என்றுதான் தோன்றுகிறது. மாறாகத் துறைசாராத உற்சாகங்களால் ஒவ்வொரு சொல்லும் எல்லாம் திணிக்கப்பட்ட ரப்பர் பையாக மாறிவிடுகிறது. சாஸ்திரங்களைப் படிக்கும் பொழுது இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, இந்த ‘சாஸ்திரம்’ என்ற சொல்லையே கூடச் சொல்லலாம். இது எப்படியோ, மேற்கத்திய மெய்யியல் படிப்புகளிலும் இந்தத் தொல்லை நிகழாமல் இல்லை. உதாரணத்திற்கு மெடஃபிஸிக்ஸ் என்னும் ‘பௌதிகம் கடந்த மெய்மையின் இயல்’ என்னும் படிப்பில் இந்தக் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் சாதாரணமான அறிமுக நூலை எழுதும் ஆசிரியர்களும் கூட. எனவே அவர்கள் முதன்முன்னம் மெடஃபிஸிக்ஸ் என்றால் என்ன என்ன எல்லாம் இல்லை என்று சொல்லித் தீர வேண்டியிருக்கிறது. ஜான் டபிள்யூ கார்ரோல், நெட் மார்கோஸியன் என்னும் ஆசிரியர்கள் மெடஃபிஸிக்ஸுக்கான ஓர் அறிமுகம் என்னும் நூலின் தொடக்கத்தில் இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்கள். அது என்ன என்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் அது என்ன எல்லாம் இல்லை என்று சொல்வது பெரும் உதவி மட்டும் இல்லை, உரிய தற்காப்பும் ஆகும். 

“Let’s start with what metaphysics is not. Metaphysics - as we are using the term - is not the study of the occult. Nor is it the study of mysticism, or auras, or the power of pyramids. Although the word ‘metaphysics’ may indeed have all of those connotations in ordinary English, the word is used within academic philosophy in an entirely different way. And this book, as it happens, is meant to be an introduction to the branch of academic philosophy that is known as metaphysics.”
(An Introduction to Metaphysics, John W Carroll, Ned Markosian, Cambridge University Press, 2010, pp 1) 

விநோதம்தான். ஒன்று என்ன என்பதைச் சொல்லும் முன்னர் அது என்னவெல்லாம் இல்லை என்று சொல்லித்தீர வேண்டும் என்பது அறிவின் பெருக்கத்தைக் காட்டுகிறதா அல்லது அறியாமையின் பெருக்கத்தைக் காட்டுகிறதா? இன்னும் சொல்லப் போனால் நுண்தளத்தில் புழங்கும் பல சொற்களிலும் ஏகப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு ஒரு சொல்லையும் நேரடியாக எடுத்தோம் பயன்படுத்தினோம் என்று முடிவதில்லை. பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் சொல்வது வேறு, போய்ச் சேரும் பொருள் வேறு என்றுதான் ஆகிவிடும். நீங்கள் சொல்லாத விதத்தில் புரிந்துகொண்டு, நீங்கள் உணர்த்தாத பொருளை உள்வாங்கி ‘பிரமாதமா சொன்னீங்க’ என்று நீங்களே பாராட்டப்படும் போது நடக்கும் உங்களுக்குள்ளேயே ஓர் அசடுவழியல்.. அதை எங்கு போய்க் கொட்ட?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment