Saturday, October 23, 2021

குதிரை நூல்

குதிரைகளைப் பார்த்து அதன் துள்ளல்களையும், விரைந்த பாய்ச்சல்களையும், லாகவமான நடைகளையும் கண்டு வியக்காதவர் இருக்க முடியுமா? 
சாண்டில்யன் நாவல்களில் குதிரை வீரர்களின் உலகங்கள் மலைச்சரிவுகளில், பிரதான சாலைகளில், காடுகளில் அற்புதமாக வர்ணிக்கப்படும் போது, அடேயப்பா...! குதிரைகளைப் பற்றிய சாத்திரம் ஏதாவது இருக்குமா என்று யோசித்ததுண்டு. இருக்கிறது அப்படி ஒரு சாத்திரம். அசவ சாஸ்த்ரம். - தஞ்சை சர்ஸ்வதி மஹால் தொடர் வெளியீடுகளில் நம்பர் 56. 1952 ஆம் ஆண்டு வெளியானது. தஞ்சை மஹாராஜா சர்ஃபோஜி சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. 

இந்த அச்வ சாஸ்த்ரம், நகுலன் என்பவரால் எழுதப்பட்டது. இவர் பாண்டவர்களில் ஒருவரான நகுலனே என்கிறது நூல். சாலிஹோத்ரர், ஸுச்ருதர், கர்கர் ஆகியோரின் நூல்களிலிருந்து கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் படியாக இந்த நகுலரின் நூல் கூறுவதாக முகப்பில் தெரிவிக்கப்படுகிறது. வடமொழியில் உள்ள இந்த நூலை பதிப்பித்தவர் திரு கோபாலன். திரு ஸ்வாமினாத ஆத்ரேயன் அவர்களின் கடும் உழைப்பு நூலை நன்கு உருவாக்கியிருக்கிறது. திரு சுப்ரமண்ய சாஸ்திரிகளின் தமிழாக்கம் மிக எளிமையாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் நூலின் சுருக்கம் தரப்பட்டு சிறப்படையச் செய்கிறது. இந்தச் சுவடி வண்ணப் படங்களுடன் கூடிய சுவடி. எனவே பலவித குதிரைகளின் வண்ணப் படங்கள், குதிரை உபகரணங்களின் படங்கள் எல்லாம் சேர்ந்து நூலை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன. 

குதிரைகளின் பெருமை, ரைவதர் துதி, குதிரை இறக்கை இழந்த வரலாறு, உடலமைப்பு, அங்கங்களின் இலக்கணம், அசுவ இலக்கண வகுப்பு, வயது முறையும் அங்க வகுப்பும், ஆவர்த்தங்கள், சித்திரவர்ணக் குதிரைகள், புண்டிர லக்ஷணங்களும் பலன்களும், புஷ்ப லட்சணம், குதிரை கனைப்பின் பலன், குதிரையின் மணமும் பலனும், குதிரை சாயையும் பலனும், நடை இலக்கணம், ஸத்துவ (தன்மை) இலக்கணம், முற்றும் தவிர்க்க வேண்டிய தோஷங்கள், கன்னத்தின் நிறமும் பலனும், ஜாதிக் குதிரைகள், வயதறியும் வகை, நிற இலக்கணம், அரசனுக்கேற்ற குதிரை, ஆயுள், குதிரை உணர்த்தும் பெருங்கேடுகள், குதிரைகளைப் பழக்கும் விதம், குதிரைகளின் நடை, க்திரை ஏற்றம் ஆகிய தலைப்புகளில் நூல் குதிரையைப் பற்றித் தெரிவிக்கின்றது. 

குதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது. சாலிஹோத்திர வைசம்பாயனீயம் என்ற ஸாரஸிந்து என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார்கள். சில விஷயங்கள் மிக சுவாரசியமானவை. 

-- குதிரையில் ஏறியவன் ஒருவித ஆபத்தும் நேராத பொழுது கீழே விழுந்தால் குதிரை சிரிக்கும். 

அரசன் முடிசூடும் பொழுதும், கொள்ளு தின்னும் பொழுதும், மாலை கொள்ளு தின்னும் பொழுதும், மணி ஓசை கேட்கும் பொழுதும், நல்ல மனதுடையோன் ஏறும் பொழுதும் குதிரை சந்தோஷமடையும். 

கலவி, ருதுகாலம், யுத்தம், வெற்றி, யாகம், தீனி, திறமையுள்ளவனின் ஏற்றம், கூட்டத்தை விட்டுப் பிரியும் காலம், புதுக்குதிரையைக் காணும் சமயம் இவைகளில் குதிரை கனைக்கும். 

தனக்குச் சமமான வேகமற்ற குதிரையுடன் ஓட நேரும் போது வெட்கம் கொண்டு புழுதியை வாரி இறைக்கும். 

-- இவை சில மாதிரிக்கு. 
குதிரைகளின் வயது பற்றி சாலிஹோத்திரர் கூறுவது - மனிதனுக்கு நூறு, யானைக்கு நூற்றி இருபது, பசுவிற்கு 24, கழுதை ஒட்டை - 25, நாய் - 16, நரி - 25, புழு - 7 நாள், ஈ - 14 நாள், குதிரை -- 32 வருஷங்கள். 

மத்தம், அவி, காச்யம், அச்மகேயம், மாலிகம், சுவேதவாகனம், மேசகம், சுவேதகிரிஜம், வைதர்பம் ஆகிய ஒன்பது ஜாதிக் குதிரைகளும் 'கோடகம்' என்னும் வகையில் அடங்கும். 

இப்படி ஒரு நூல் என் சேகரிப்பில். இதைப் போல் கஜ சாத்திரம் என்று ஒன்று. அது எங்கு போயிற்றோ தெரியவில்லை. கண்ணில் பட்டால் சொல்கிறேன். 

***

No comments:

Post a Comment