Friday, October 22, 2021

அல்ப நிம்மதி

 இதோ கிடைத்து விட்டது! நினைச்சேன். என்னடா இது! நமக்குள் அசிங்கமான மனம் ஒன்று இருக்கிறது. பக்கத்திலேயே மிகவும் தூய்மையான மனமும் ஒன்று இருக்கிறது. சமயத்தில் எதில் மடை பாய்கிறது என்றே தெரிய மாட்டேன் என்கிறது. எந்த மனம் எழுந்து நின்று ஆடுகிறதோ அதற்குத் தகுந்தால் போல் காட்சி, மூட் எல்லாம். ஒன்று யோக்கியமாக இருக்கணும். இல்லை உருப்படாம இருக்கணும். இது என்னது இரண்டும் கெட்ட நிலை என்று சங்கடப் பட்டிருக்கிறேன். எல்லாம் அப்படித்தான் என்று சொல்கிறது பழைய உபநிஷத்து ஒன்று. இதையெல்லாம் கடந்துதான் போகணுமாம். இப்படி என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே ஜூட் விட்டிருப்பேன். செமத்தியா மாட்டிக்கொண்ட பிறகு இப்படியும் போக வழியில்லை அப்படியும் நத்தை நகர்வு அப்பப்ப முழம் சறுக்கல்.

‘மனமோ இரண்டுவிதம் என்று சொல்வார்கள்; ஒன்று சுத்தம் மற்றொன்று அசுத்தம். ஆசைகள் கிளரும் மனம் அசுத்தம். ஆசைகள் அற்ற மனம் சுத்தம்.’
மனம் இரண்டு அவஸ்தைகளை உடையது என்று சொன்னாலாவது சரி அசுத்தமான நிலை மாறி சுத்தமான நிலை போல் இருக்கிறது என்று கொள்ளலாம். உபநிஷதம் கவனமாக வார்த்தையைப் போடுகிறது. மனோ ஹி த்விவிதம் ப்ரோக்தம் - மனமோ இரண்டு வழிகளில் (விதங்களில்) இயங்குவது என்பார்கள். அந்த த்விவிதம் என்று சொன்னதில்தான் நமக்குக் கொஞ்சம் தெம்பு. மனம் சமயத்தில் இப்படியும் பாயும்; சமயத்தில் அப்படியும் பாயும் என்பது நமக்கு மட்டும் கோளாறு இல்லை. ரூட்டுல ஏற்கனவே இருக்கற பிரச்சனைதான் என்ற அல்ப நிம்மதி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment