Friday, October 22, 2021

ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி மகாகாவியத்தில் அனுபவம்

மனம் தளர்ந்து வெறுமைநிலை அடையும் போதெல்லாம் எதையும் படிக்க முடிவதில்லை. எதிலும் ஆர்வமும் ஏற்படுவதில்லை. ஒன்றே ஒன்றுதான் அப்பொழுதெல்லாம் எனக்கு ஆதரவாய், சற்றும் அலுக்காததாய், தெம்பூட்டக் கூடியதாய் இருப்பது. அதுவே பகவான் ஸ்ரீஅரவிந்தரின் ‘சாவித்ரி’ என்னும் ஆன்மிகப் பெருவெள்ளம். என் வாழ்க்கையில் கைகொடுக்கத் தவறாத அன்னையின் அருள்!

“The spirit in a finite ignorant world
Must rescue so its prisoned consciousness
Forced out in little jets at quivering points
From the Inconscient’s sealed infinitude.
Tnen slowly it gathers mass, looks up at Light.”
(Savitri, 1950 ed pp 140) 


சநாதநமான ரிஷிகளின் யோகாரூடப் பெரும் பாதை நினைத்தது. ' பல உன்னத உத்கீத சத்யங்களை எழுதி முற்றி முழுமை பெறுத்தாமல் காலம் நெடுக விட்டு வைத்திருப்பதாய்' அதற்குத் தோன்றியது. ஒரு புதிய ஜீமூதமான உத்வேகத்தில் விடுவிடு என்று முற்றி முழுமை ததும்ப பூரண செய்தியைக் கட்டுரைத்து, அந்த நிறைவில் பெருமிதம் கொண்டது. அந்த நிறைவும், பெருமிதமுமே பகவான் ஸ்ரீ அரவிந்தரின் Life Divine , Savitri என்னும் மஹா கிரந்தங்களாய் உருவெடுத்தன. 


எவ்வளவு மனத் தளர்ச்சியும், நிலைத் தயக்கமும். நிர்க்கதியும் உற்ற போதும் உணர்வின் உள்ளால், அடியாழத்தில் ஒரு சுடர் சிமிட்டியபடிதான் இருக்கிறது. இனங்காணா அதன் ஒளியை மோப்ப சக்தியால் தொடர்வன போன்று இருள்சூழ் உயிர்கள் தம் யதேச்சையான நகர்வுகள் ஏதோ நோக்கோடு முடிவெடுத்துச் செய்த பயணம் போல் அமைந்து விடுவதைப் பின்னர்தான் உணர்ந்து கண்கரந்த கார் அருளுக்கு நன்றி விம்முகின்றன. நாமறியாக் காலத்தே நாமும் அறியாதே அழிவதற்கே அறிவைப் பயன்படுத்தும் நம் கையில் நம்மைக் காட்டிக் கொடுத்து விடாதே பரிணாமத்தில் நம்மை ஒளித்து ஊட்டும் உட்கரந்த தாய்மையை உணர்ந்து நெகிழும் தருணமே மனித உயிர் கடைத்தேற்றத்திற்கான முதல் அடியில் வந்து சேர்ந்திருக்கிறது என்பது மிகவும் தியானங்களாலும் ஆய்வுகளாலும் சிலரே காணக்கிடைக்கும் துப்பாய் அமைந்திருக்கிறது. 

“Or there calls to us from some unfulfilled beyond
A greatness yet unreached by the halting world.
In a memory behind our mortal sense
A dream persists of larger happier air
Breathing around free hearts of joy and love,
Forgotten by us, immortal in lost Time."
(Savitri, Sri Aurobindo, 1950 ed pp 199) 


மனிதர் எவருமே உயர்ந்த மனநிலை, ஆழ்ந்த அமைதி, தன்னைப் புறந்தள்ளித் தானாய் நின்ற மௌனம் இதையெல்லாம் வாழ்க்கையில் ஏதோ கணங்களில் கணம் மட்டுமே உணராமல் இருப்பதில்லை. ஆனால் உறங்கும் பொருளின் ஜாட்யத்தில் ஏதோ திகில் அடித்தது போல் வாரிச் சுருட்டிப் பள்ளத்தின் பழகிய சதுப்பில் வந்து விழுந்ததும்தான் ஒரு நிம்மதி உற்றது போல், பீதி களைந்தது போல் ஆசுவாசம் ஆகிறது. பாவம் உயிர்! என்ன செய்யும்? ஆகப்பெரும் ஆனந்த அமைவுற்ற இயல்நிலை அதுவே, அதைத் தான் அடையும் பயணம்தான் வாழ்க்கை என்று ஒரோவழி மினுக் மினுக் என்று அவ்வப்பொழுது புரிந்தாலும் பழகிய சேறுபாய் அள்ளலின் சுகம்! எப்படி விட்டுவிட முடியும்.? இனி உஷாராக இருக்க வேண்டும்! தெரியாத் தனமாகக் கூட அந்நிலைக்குள் நுழைந்துவிடக் கூடாது. ச... பிரச்சனைகள் தீர்ந்துபோன நிலை.... அது பெரிய விஷயம்தான். நாம் அற்பம் ஆயிற்றே என்று சௌகரியமான உன்னதம் அதமம் என்ற இரட்டையாடி, ஒரு பெரும் கைகூப்பே அந்நிலைக்கு நாம் செயற்பாலது என்று சிக்கல் தீர்த்த சுகத்தில் கிடக்கத் தொடங்கிவிடுகிறது. இத்தனைக்கும் இது தானே எட்டா நிலையாய்க் கற்பனை செய்து சுகம் காணும் அந்நிலையோ இதன் இயல்பானப் பெருநிலை என்ற உளவை யாரே அதனிடம் உணர்த்தவல்லார்? அத்தகையோரே உயிர்க்குலத்திற்கு அருட்கொடையீனும் பெற்றியராய்த் திகழ்கின்றனர்.

“Only a while at first these heavenlier states,
These large wide-poised upliftings could endure.
The high and luminous tension breaks too soon,
The body's stone stillness and the life’s hushed trance,
The breathless might and calm of silent mind;
Or slowly they fail as sets a golden day.
The restless nether members tire of peace;
A nostalgia of old little works and joys,
A need to call back small familiar selves.
To tread the accustomed and inferior way.
The need to rest in a natural poise of fall,
As a child who learns to walk can walk not long,
Replace the titan will for ever to climb,
On the heart’s altar dim the sacred fire."
(Savitri, Sri Aurobindo, ed 1950, pp 34) 


சித் என்னும் ஒன்று இல்லையெனில் எதற்கும் பொருளில்லை. யதேச்சையாகத் தோன்றி நகர்ந்து பெயர்ந்து உருண்டு கறங்கிச் செல்லாநிற்கும் கர்ம தரங்கம். இதனூடே ஓர்மை கொள்ளும் ஓர் புள்ளியாய், யாதாலும் உற்றறியா இயல்புடைத்தாய் மன்னும் சைதன்ய பிந்து. உணர்வின் உட்கரு புள்ளி. அதன் தயவால் புறம்பல்கிப் போதரும் தோற்ற உலகும், காலமும், வரவும், எதிர்வும் என இவையனைத்தையும் கணக்கிடும் கண்விழிக் கூர்மையாய் சித். 

“A conscious frame was here, a self-born Force.
In this enigma of the dusk of God,
This slow and strange uneasy compromise
Of limiting Nature with a limitless Soul,
Where all must move between an ordered Chance
And an uncaring blind Necessity,
Too high the fire spiritual dare not blaze."
(Savitri, pp 18, Sri Aurobindo, 1950) 


பட்டப் பகலாகக் காட்சியளிக்கும் நம் இந்த உலகம் உற்று நோக்கினால் பகலன்ன இருளும், இருளன்ன விளக்கமும் மூசிக்கலந்த முருட்டாய் நீளும் ஐயவெளி. முன்வைக்கும் அடி நமக்குச் சந்தேகம். பின் சாயும் மானம் ஸம்சயம். இதற்கு நடுவில் நம்மின் சத்தியத் தேட்டம் என்னும் இருள்கான் ஊதையில் நலியும் கைப்பந்தம்!. வெட்ட விரிந்து விரிவாய் அளந்த ஒன்றாம் சாட்சி போல் விரிந்த விண். நம் அவஸ்தையும் அனுபவமும் அதற்குப் புலனாகக் கூடும் என்று நினைக்க வழியில்லை. ஆயினும் மண்கவிந்து கிடந்த மலர்தலை உலகின்கண் புலர்கதிர் சூல்கொள்ளத்தான் செய்தது. இதைவிடப் பெருநற்செய்தி யாதுகொல் உண்டு !! 

“Here where our half-lit ignorance skirts the gulfs
On the dumb bosom of the ambiguous earth,
Here where one knows not even the step in front
And Truth has her throne on the shadowy back of doubt.
On this anguished and precarious field of toil
Outspread beneath some large indifferent gaze.
Impartial witness to our joy and bale,
Our prostrate soil bore the awakening ray."
(Savitri, Sri Aurobindo, 1950, pp 5)

Srirangam Mohanarangan

***

No comments:

Post a Comment