Friday, October 22, 2021

சாத்திரத்தின் ஜுரம்

 ஒருவருக்கு ஜுரம் படுத்துகிறது. ஏதோ உள்ளே ஒன்றுக்கொன்று ஒவ்வாமையினால் இந்த ஜுரம் என்று புரிகிறது. மருத்துவரிடம் சென்று காட்டுகிறார். அவரும் இந்தக் காரணத்தாலோ அல்லது அந்தக் காரணத்தாலோ என்று ஆராய்ந்து பல மருந்துகளைத் தருகிறார். ஆனாலும் உள்ளூற ஜுரம் இருந்தபடி இருக்கிறது. அப்பொழுது ஒரு மருத்துவர் நல்ல வேளையாக இந்த ஜுரம் இந்தக் காரணங்களினால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் என்று கண்டு பிடித்துத் தக்க மருந்து கொடுத்து விடுகிறார். ஜுரம் தணிகிறது.

உடல் வேறு உடல் ஆகிவிட்டதா? இல்லை. அதன் இயல்பின்படி உடல் எந்நிலையில் இருக்க வேண்டுமோ அந்நிலைக்கு வந்து விடுகிறது. அது தன்னிலைக்கு வருவதற்குத்தான் இவ்வளவு சோதனை, மாற்று மருந்து, நோய் நாடி நோய் முதல் நாடி அது தீர்க்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்த மருத்துவரின் திறமை எல்லாம். மருத்துவர் ஆரோக்கியம் என்ற புதிய வஸ்துவை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதில்லை. தன் இயல்பு கெடாது உள்ளபடி இருப்பதுதான் ஸ்வஸ்தம் என்பது. இதைப் பழக்கத்தில் சொஸ்தம் ஆயிற்றா என்று கேட்போம். ஸ்வ என்றால் தன்னிலை; ஸ்தம் என்றால் நிலைத்து நிற்றல். தன்னிலை அடைந்து நிலைத்து நிற்பதற்குப் பெயர்தான் ஸ்வஸ்தம் (சொஸ்தம்).
சரி. இது புரிகிறது. ஆனால் நூல்கள் சில சேர்ந்து ஒரு கருத்தைச் சொல்ல வருமேயானால் அந்த நூல்களுக்குள் ஒரு பிணைப்பு, கருத்து அதற்கான துணை வலு, அந்தக் கருத்தை விவரிக்கும் பங்கு என்ற விதத்தில் ஒரு பரஸ்பரத் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. கோர்ட்டில் ஒரு வழக்கு. அது சம்பந்தமான நூல்கள், சான்று ஒப்பு நோக்கும் புத்தகங்கள் எல்லாம் சேர்ந்து Body of References என்று அமைந்து விடுகிறது. சான்று நூல்களின் சரீரம் அல்லது குறிப்புதவி நூல்களால் ஆன உடல் என்றெல்லாம் சொன்னால் விநோதமாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலைகளில் அப்படிக் கருதி அவற்றைக் கையாள்வது அந்தத் துறைசார் வல்லுநர்களுக்கு வசதியான ஒன்று.
இப்படி, கடவுள் என்ற கருத்தை விளக்க வந்த நூல் தொகுதிக்கு இடையிலும் பரஸ்பரம் சான்று நூல்களால் ஆகிய உடல் வடிவம் என்று கருதும் பழக்கம் நெடுங்காலமாக இறையியல் அறிஞர்கள் மத்தியில் இருக்கிறது. இவ்வாறு சான்று நூல்களின் தொகுதி வேதாந்தத்திற்கு என்று பார்த்தால் மூன்று நூல்கள் அமைகின்றன. உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீபிரம்ம சூத்ரம் என்னும் மூன்று நூல்கள் அவை. இவற்றையும் சான்று நூல்களால் ஆகிய ஓர் உடல் என்று கருதுவதுண்டு.
ஒருவர் கவித்துவமாக இதைச் சொன்னார். இந்தச் சான்று நூல்களால் ஆகிய உடலுக்குள் ஜுரம் ஏற்பட்டு விட்டதாம். பல மருத்துவர்கள் இதற்கு வைத்தியம் செய்து பார்த்தார்கள். ஆனால் மருந்து கேட்கவில்லை. ஜுரம் தணிந்தபாடில்லை. அதாவது பல சித்தாந்த ஆசிரியர்கள் இந்த நூல்களுக்கு ஒப்பும்படி தங்கள் கருத்தை வலியுறுத்தி விளக்கம் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் பொருந்தி அமையவில்லை என்பதை இப்படிச் சொல்கிறார். பிறகு ஒரு மருத்துவர் வந்து பார்த்திருக்கிறார். அவருடைய மருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் ஒவ்வியதாய் இருந்து, சான்று நூல்களின் இடையில் அவற்றின் உள்ளர்த்தங்களுக்குள் இருந்த ஜுரம் நீங்கும் படியாக ஸ்வஸ்தப் படுத்தினார். அவர்தான் ஸ்ரீராமாநுஜர் என்கிறார். இந்தக் கவிதையைப் பாடியவர் சுதர்சன சூரி என்னும் ஆசிரியர். ஸ்ரீராமானுஜரின் உரைக்குப் பெரும் விரிவுரையாக ஒன்றைத் தாம் எழுதும் போது இவ்வாறு கூறுகிறார்.
அந்தக் கவிதையின் தமிழ் வடிவம் -
‘மிகச் சிறந்த யோகியான அந்த ஸ்ரீராமானுஜருக்கு நம் நமஸ்காரம் உரித்தாகுக. யார் சுருதி ஸ்மிருதி சூத்திரங்கள் ஆகியவற்றுக்கிடையே இருந்த உள் ஜுரத்தை முற்றிலுமாக நீக்கிச் சான்று நூல்களிடையே சமரஸம் என்னும் ஸ்வஸ்த நிலையை உண்டாக்கினாரோ அவருக்கே நம் வணக்கம்.’
அதன் வடமொழி வடிவம் -
‘தஸ்மை ராமாநுஜார்யாய நம: பரமயோகிநே |
ய: ச்ருதிர் ஸ்ம்ருதிர் சூத்ராணாம் அந்தர்ஜ்வரம் அசீசமத் ||’
சான்று நூல்களுக்குள் ஓரிடமும் முரண் ஆகாதபடிப் பொருத்தமுற விளக்கம் கண்டவர் என்னும் கருத்தை எப்படிக் கவியழகோடு சொல்லியிருக்கிறார் என்பது மிகவும் ரசிக்கத் தக்கது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment