Friday, October 22, 2021

நம்மாழ்வாருக்கு விளக்கம் சொல்லும் திருமங்கையாழ்வார்

 தமிழிலே வேதம் அருளிய நம்மாழ்வாரின் கருத்தை விளக்கும் விதமாக அமைந்தவை திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள். இவ்விருவர்தம் நூல்களுக்கும் துணையாக அமைந்தவை மற்றை எண்மர் நன்மாலைகள் என்பது ஒரு பார்வை. ஸ்ரீமதுரகவியாழ்வாரின் கண்ணிநுண்சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தத்தையே மீட்டும் அடைவதற்கு உறுதுணையாய் நின்ற உயர்நூல். ஸ்ரீஆண்டாளின் நூல்களோ தமிழ் வேதத்துக்கு அமைந்த உபநிஷதங்கள் ஆகும்.

பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வார் கூறுகிறார்:
‘என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை
நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’
கட்கண், மயிற்பீலிக் கண் போல் புறத்தில் கண் என்று பேர் படைத்ததாய் ஆனால் காண வேண்டிய பரம்பொருளைக் காண முடியாத புறக்கண். கண் என்று உடலின் பேராய், உடலில் உள்ள கண். ஆனால் நெஞ்சென்னும் உட்கண் காணும் அந்த பரம்பொருளை. எப்படி? உணர்ந்து. அந்தப் பரம்பொருள் எங்கு இருக்கிறது என்று கேட்டால் இதே நம்மாழ்வார்தான் சொல்லியிருக்கிறார் - ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று. அப்பொழுது சுருதியுள் பார்த்தால் தெரியாதா? அங்குதானே உளன்? ஆனால் எப்படிப் பார்ப்பது? கட்கண் காணாது என்றால், செவி, சுவை, மூக்கு எதுவுமே காணாது. சுருதியுள் இருக்கிற விஷயத்தை எப்படிப் பார்ப்பது? நெஞ்சு என்னும் உட்கண்ணைக் கொண்டு உணர்ந்து நோக்கினால் தென்படும்.
இதை எப்படி திருமங்கையாழ்வாரின் பிரபந்தம் விளக்குகிறது என்று பார்ப்போம்.
’நாடி என்றன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும்.. ‘
பார்த்தன்பள்ளி என்னும் அவன் ஊரைத் தலைவி பாடுவதாகப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் ஆகியவன் தனது உள்ளத்தை நாடித் தன் நீங்கா இருப்பிடமாகக் கொண்டான் என்று பாடும் பொழுது ‘நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ என்பதற்கு ஓர் விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment