Saturday, October 23, 2021

Czeslaw Milosz - செஸ்வா மீவாஷ்

செஸ்வா மீவாஷ் (Czeslaw Milosz) நோபல் பரிசு பெற்ற போலிஷ் கவிஞர். அவர் பிறந்த ஊர் இன்றைய லிதுவானியாவில் இருக்கிறது. கம்யூனிஸம் விரட்ட, ஃப்ரான்ஸில் அடைக்கலம். பின்பு அமெரிக்காவில் புகலிடம். பிஹெச்டி எதுவும் பெறாமலேயே ஸ்லாவிக் மொழிகளில் பேராசிரியர் வேலை. போலிஷ் மொழியில் பல தொகுப்புகள் (போலண்டில் அவருடைய நூல்களை அச்சிடுவது தடை செய்யப்பட்டிருந்த போதிலும்). அவருக்கு நோபல் பரிசு கிடைத்ததும்தான் போலண்டிலும் சரி, அமெரிக்காவில் அவருக்குப் பழகியவர்களும் சரி அவருடைய மேதைமையை உணர்ந்தனர். நகரங்கள் சரிவதையும், மனிதருக்குள் இருக்கும் வன்மங்கள் வெளிப்படுவதையும் அனுபவத்தில் பார்த்தவர். இல்வாழ்க்கையும், மனையாளும், கருவில் தம் குழந்தையும் என்ற நிலையிலும் சர்வாதிகாரங்களுக்கு அஞ்சி கண்டம் விட்டுக் கண்டம் என்று புகல் தேடி அலைந்த மனிதர். அவர் மொத்த நகரங்களை நோக்கி ஓர் உரத்த குரல் வீசுகிறார்: 

“Till not one stone, 0 city, remains
Upon a stone, and you too will pass away.
Flame will consume the painted history.
Your memory will become a dug-up coin.
And for your disasters this is your reward:
As a sign that language only is your home,
Your ramparts will be built by poets.”
(Czeslaw Milosz, New and Collected Poems 1931 to 2001) 

கல்லில் கட்டியவை காலத்தில் காணாமல் போகும். கவிஞன் சொல்லில் கட்டியவையில் இனி உங்கள் வாசம் நிரந்தரம் - என்று அவர் உரக்கச் சொல்லும் குரல் கவிஞனின் குரல். நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கல் கெட்டியானது. கரையாது. ஆனால் காலம் அதை ஊதிவிடுகிறது. சொல் ஓசை ஓலி. சொன்னால் போயிற்று. ஆனால் சொல்லில் வடிக்கும் கோட்டைகளைக் கடலலை போல் மோதி மோதிக் காலம்தான் தன் தோல்விக் கணக்குப் பாடிக் கொள்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment