Saturday, October 23, 2021

கிரேக்கத்தில் நடந்தவை

கிரேக்கத்தில் நடந்தவை 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு --
கேன்வாஸில் வரையப்பட்ட ஒரு படம். லக்கோனியர்களை அதீனியர்கள் வீழ்த்துவது போல் காட்சி. பார்த்தவர் சொன்னாராம்: 'யப்பா.. பெரும் வீரர்கள் இந்த அதீனியர்கள்! '
மற்றொருவர் அதற்கு: 'ஆம். வரையும் கேன்வாஸில்'. அவர் ஒரு லக்கோனியர்.
எத்தனை காலம் எந்த நாடு.. மனிதர்கள் ஒரே மாதிரிதான். 
 

கிரேக்கத்தில் நடந்தவை : 

'கட்டடத்தைப் பார்த்தால் என்னென்னிக்கும் நிலைச்சு வாழப் போறவன் மாதிரி கட்டியிருக்கானய்யா! சாப்பாட்டில் கட்டுகட்றதைப் பார்த்தால் ஒரேயடியா செத்துருவான் போல சாப்பிடுகிறானய்யா!' 

இதைச் சொன்னது ப்ளேட்டோ. அரிஜன்டம் நகரத்து மக்கள் கட்டடங்களையும், விருந்துகளையும் பார்த்துவிட்டு இவ்வாறு சொன்னார். 


கிரேக்கத்தில் நடந்தவை: 

"ஏ முட்டாளே! அபசுரமா வாசிச்சுத் தொலைச்சியா? இல்லையென்றால் இந்த கச்சேரி கேட்ட மக்கள் இப்படிக் கொண்டாட மாட்டார்களே!"
என்று குச்சியால் சிஷ்யனை வெளுத்து வாங்கிவிட்டார் ஹிப்போமேக்கஸ் என்ற குழல் ஆசிரியர். 


கிரேக்கத்தில் நடந்தவை: 

அரிஸ்டிப்பஸ் தம் மகனை வெறுத்துத் திட்டிக்கொண்டிருந்தார். அவரது மனைவி குறுக்கே புகுந்து சொன்னாள்: 'ஏன் இப்படித் திட்டுகிறீர்கள்? அவன் உங்களைச் சேர்ந்த ஒரு பகுதியில்லையா?' அரிஸ்டிப்பஸ் உடனே காறித் தரையில் உமிழ்ந்து ' அந்த எச்சிலும் என்னைச்‌ சேர்ந்த பகுதிதான். ஆனால் என்ன பயன்?' என்றார். 

அந்தக்காலம் இந்தக் காலம் சொல்லலாம். ஆனால் ஒரே காலம்தான் இருக்கிறது. 


கிரேக்கத்தில் நடந்தவை: 

குழல் வாசிப்பதில் மிகவும் புகழ் வாய்ந்த ஒருவரைச் சிறைபிடிக்க நேர்ந்தது அடியாஸ் என்னும் மன்னனுக்கு. ஒரு பண் வாசிக்கப் சொல்லி அவரைக் கேட்டார் அடியாஸ். வாசித்ததும் அத்தனை சபையோரும் கரவொலி எழுப்பினார்கள். குழல் நிபுணர் கூறினார் : ' என்னுடைய குதிரை இதைவிட நன்கு புரிந்துகொண்டு கனைக்கும்.' 


கிரேக்கத்தில் நடந்தவை: 

ஃபிலிப் பேரரசர் ஆன்டிபேட்டரின் நண்பர் ஒருவரை நீதிபதியாக நியமித்து ஆணை பிறப்பித்துப் பின்னர் அதை நீக்கி விட்டார். காரணம், அந்த நபர் தாடிக்குக் கரு மை பூசியிருந்தார் நரையை மறைக்க. "உரோமத்தில் கூட ஒருவரை நம்ப முடியாது என்னும் போது வியவகாரங்களில் அவரை நம்புவது யாங்ஙனம்?" என்பது ஃபிலிப் பேரரசர் கருதிய‌ காரணமாம். 

என்னவோ போங்க.. டை பண்ணியதற்குப் பதவி போச்சேய்யா... 

***


No comments:

Post a Comment