Friday, October 22, 2021

ஸ்ரீராமப்ரஸாதரின் பாடல்

 வங்காளத்தின் உன்னத காளி பக்தர். ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி அவருடைய பாடல்களைப் பாட ஆரம்பித்தே சமாதி நிலையில் இலயித்து விடுவார். அவர்தான் ஸ்ரீராமப்ரஸாதர். (அல்பத் தனமான எண்ணம் ஒன்று - அவரும் வங்கியில் க்ளார்க்காகத்தான் இருந்தவராமே..!)

அவருடைய பாடல் ஒன்று - என் மொழிபெயர்ப்பில் (ஆங்கில நடுவாங்கியின் மூலம்)
‘காளியின் நாமம் கட்டித் தீஞ்சுவையாகும்
சொல் அதை எப்பொழுதும் சொல்லிச்
சுடரமுதம் பருகிடலாகும்
நாவே! சீசீ.. இன்னுமா விஷயசுக நயப்பு ?
உருவுகடந்த ஒன்று அதுவே உருவுள அனைத்தும்
ஒன்றுகெழுமிடும் இருப்பிடமாகும்
அங்கு வேறென்ன இருக்கும்
ஆநந்தம் முக்தி பரம நிலையம்
பரம்பொருள் நாமம் அன்றி வேறெது இருக்கும்
காளி விழித்துக் கொண்டவன் நெஞ்சில்
கங்கை ஓடும்
காலனை வென்ற கங்காதர சிவனோ
காளியின் பதமலர் தாங்கித் துயில் கிடக்கும்
ஞானத் தீயை இதயத்தில் மூட்டு
தர்மம் அதர்மம் நெய்யென்றே அதில் கொட்டு
மனத்தை வில்வத் தளங்களாய் ஆக்கு
முயற்சி தனையே சுருவமாய் ஆக்கு
ப்ரஸாதன் சொல்கின்றான் :
‘என் இதயப் பிணக்கோ தீர்ந்துவிட்டது
இந்த உடலோ காளிக்கே சொந்தமானது
அதற்கான பத்திரம் உளது
அதில் காளியின் கையொப்பும் உளது’
*
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment