Friday, October 22, 2021

பாணினிதான் இலக்கணம் என்றில்லை

 மொழி என்பது இலக்கணத்தை விட பெரிய விஷயம் என்ற யதார்த்தமான பார்வை சம்ஸ்க்ருத வியாகரண அறிஞர்களிடையே இருந்து வருகிறது. அதாவது பாணினி என்பவர் இலக்கணம் செய்தால் அது மிகப் பெரும் சாதனைதான். மொழியின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கும் விதத்தில் ஓரமைப்பு என்ற விதத்தில் இலக்கணம் என்பது மொழியின் இயக்கத்தை, அதன் பரவலான செயல்பாட்டை மனத்திற்குப் புரியும்படி கொணர்ந்து ஒருங்குற நிறுத்துகிறது. ஆனால் ஒருவர் ஒரு காலத்தில் ஓரமைப்பியலாக இலக்கணம் ஒன்று செய்து விட்டால் அதன் பின்னர் அது ஒன்றுதான். வேறு இலக்கணங்கள் அந்த மொழிக்கு ஏற்கனவே இருந்தாலோ, அல்லது அடுத்து வரும் காலங்களில் ஏற்பட்டாலோ அதெல்லாம் தள்ளுபடி, கொள்ளத் தக்கது அல்ல, சான்றானவை அல்ல என்று ஒதுக்கித் தள்ளும் போக்கை மறுத்து சில அறிஞர்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார்கள். அவர்களின் கருத்து யாதெனில் மொழி என்பது எந்த ஓர் இலக்கண அமைப்பிலும் தீர்ந்து போய்விடும் விஷயம் அன்று. அந்த இலக்கணம் எத்தனை பெருமைக்குரியதாய் இருப்பினும் என்பதே.

உதாரணத்திற்கு, பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் வைநதேய பண்டிதர் என்பவர் ஒரு கருத்தை முன் வைத்து தமது கட்டுரையை வடித்திருப்பார் போலும்! அதாவது பாணினியின் இலக்கணம் சம்ஸ்க்ருதத்திற்கு முடிவான அறுதியான இலக்கணம்; பதஞ்ஜலி பாஷ்யத்துடன் கூடிய மும்முனிகளின் இலக்கணம் என்று போற்றப்படும் பாணினி இலக்கணம் அன்றி வேறு ஒன்றும் சான்றானவை அல்ல என்ற கருத்தில் எழுதியிருப்பார் போலும் வைநதேயர். அதற்கு மேல்ப்புத்தூர் நாராயண பட்டத்ரி (நாராயணீயம் எழுதியவரோ) என்பவர் ‘அபாணினீய ப்ராமாண்ய சாதனம்’ என்று ஒரு சிறு கண்டன நூலை எழுதி, வைநதேயரின் பக்ஷத்தை (கருத்தை) மறுத்து, எந்த ஓர் இலக்கண நூலுக்குள்ளும் மொழி முழுவதும் அடங்கிவிடாது. வேத ரிஷிகள், வேத வியாசர், காவியக் காரர்கள் போன்ற பலரும் பாணினியின் இலக்கணத்தால் விளக்கப்படாத மொழி ஆட்சிகளைப் பயன் படுத்தியுள்ளனர் என்றெல்லாம் தமது மறுப்பை அழகுற எழுதியுள்ளார்.
தொடங்கும் போதே, தாம் நாராயணர், மறுக்கப்பட்டவர் பெயர் வைநதேயர், தம்முடைய பார்வை நல்லதும் சரியானதும் ஆன பார்வை (சுதர்சனம்) என்பதையெல்லாம் வைத்து ஒரு சுலோகம் செய்து விடுகிறார். அதில் மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை, அதாவது கருடனுக்கு மற்றொரு பெயர் வைநதேயர் என்பது. வினதையின் புத்திரர் என்ற பொருளுடையது. கருடனின் கர்வத்தை அடக்கி நாராயணர் ஆகிய விஷ்ணு வைநதேயன் ஆகிய கருடனின் பக்ஷத்தைத் (சிறகை) தமக்கு அடக்கமாக வைத்துக் கொண்டார் என்ற நிகழ்ச்சியை தொட்டுக் காட்டும் விதமாக எழுதியிருக்கிறார். ’அதைப் போல் இப்பொழுதும் வைநதேயரே நாராயணன் ஆகிய நான் சுதர்சனத்தின் பலத்தால் உமது பக்ஷத்தை ஆக்கிரமிக்கின்றேன்’ என்று இருபொருள்படச் செல்கிறது சுலோகம்.
’சுதர்சனத்தைக் கைக்கொண்டு இன்றும் அதே நாரணன் ஆகிய நான் வைநதேயரே உமது பக்ஷத்தை வெல்வதில் நிலையாக இருக்கிறேன்’ என்பது அதன் தமிழ் வடிவம்.
ஸுதர்சனம் ஆலம்பீ ஸோSஹம் நாராயணோSதுநா |
வைநதேய பவத்பக்ஷம் ஆக்ரம்ய ஸ்தாதும் ஆரபே ||
இலக்கண முறைகள் என்றாலும் பண்டைய அறிஞர்கள் ஒரே பார்வைதான் பார்த்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆரோக்கியமான விவாதம் நிகழ்ந்தவண்ணம் இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் உணரும் போது சிந்திக்க வைக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment