Thursday, October 28, 2021

இச்சையும், புரிதலும்

வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ரஹ்ம ஸூத்ரத்திற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு. ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் முதலிய பல ஆசாரியர்களும் தம் தம் சித்தாந்தத்திற்கு ஏற்றாற்போல் விரிவுரை செய்துள்ளனர். 

வேதாந்த ஸூத்ரங்களில் முதல் ஸூத்ரம் ‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ என்பதாகும். ப்ரஹ்ம ஜிக்ஞாஸா என்றால் ப்ரஹ்மத்தை அறியுமிச்சை. பிரம்மத்தை அறியுமிச்சை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று வேதாந்தம் கூற வருகிறது? அறியுமிச்சையைச் செய்ய வேண்டும், இச்சை கொள்ள வேண்டும் என்று கட்டளை இடுகிறதா? விதிக்கிறதா? விதிக்கப் படுவதாய் இருக்கும் தன்மை விதேயத்வம். இச்சை அப்படிக் கட்டளை இட்டு, விதித்து அதன் மூலம் செய்யக் கூடியதா? இச்சை கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டால் ஒருவர் அதற்குக் கீழ்ப்படிந்து இச்சை கொண்டுவிட முடியுமா? நமக்கு இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று தோன்றும். ஆனால் வேதாந்திகள் எவ்வளவு நுணுக்கமாகச் சொற்களுக்குப் பொருள் கொள்கின்றனர் என்பதை நாம் உணர இது ஒரு வாய்ப்பு. 

இச்சை விதேயத்வம் உடையது அன்று. அதாவது விதியாகச் சொல்லி அதை இயற்ற வைக்க முடியாது. இச்சை புரிவாய் என்று செய்யக் கட்டளையிட்டால் இச்சை வந்துவிடாது. இச்சை வந்தவர்க்கு வழிகளை விதிக்கலாம். இச்சை எப்படி வரும்? தானேதான் வரவேண்டும். அதாவது ஒரு விஷயத்தின் மகிமை, பெருமை முதலியவற்றின் காரணமாக ஒருவர்க்கு அதன்பால் இச்சை உண்டாகலாம். ஆனால் செய்து கூட்டக் கூடிய ஒன்றன்று இச்சை என்பது. எனவே ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்ரீராமானுஜர் முதல் ஸூத்ரத்திற்கு உரை எழுதுங்கால் ’இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால் ஞானம் என்பது விதிக்கப்படுகிறது’ என்று பொருள் வரைகிறார். இச்சை விதிக்கு உட்பட்டதன்று. ஆயினும் இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்மை கொண்டது பிரம்ம ஞானம். எனவே வேதாந்த வாதாவளியில் ஸ்ரீமைஸூர் அநந்தாழ்வான் ஸமாஸவாதத்தில் ஒரு விளக்கம் தருகிறார். அதாவது, ‘இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால் ஞானம் என்பது விதிக்கப் படுகிறது’ என்று ஸ்ரீராமானுஜர் தரும் விரிவுரையில் ‘விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால்’ என்னும் சொற்றொடர்களுக்குப் பின்னர் ‘விதிக்கபடமுடியாதது எனினும்’ என்னும் சொற்றொடரை வருவித்துப் படித்துப் பொருள் கொள்வது இன்னும் விளக்கமாக இருக்கும் என்கிறார். அப்பொழுது இதையும் இணைத்துப் படித்துப் பார்த்தால் ‘இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால், (விதிக்கபடமுடியாதது எனினும்) ஞானம் என்பது விதிக்கப் படுகிறது’ என்று ஆகும். அதாவது இச்சை என்பது சொல்லிச் செய்து வருவதன்று, ஒரு விஷயத்தின் மகிமை, பெருமை என்பதனால் ஒருவருக்குத் தன்னைப் போல் உள்ளிருந்து எழ வேண்டிய ஒன்று என்னும் உள இயல் உண்மையைக் கருத்தில் விடாமல் கொண்டு உரை எழுதவும், எழுதிய உரையைப் புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’

என்னும் குறளில் இறைவனுடைய பொருள் நிறைந்த புகழை ஒருவர் புரிய வேண்டும் என்றால் என்ன? அப்படிப் புரிய முடியுமா? இங்கு ‘புரிந்தார்’ என்றால் ‘விரும்பியவர்’ என்ற பொருள். புரிதல் என்றால் விரும்பிய என்னும் பொருள் கொள்ளப் படுகிறது. ஏனெனில் விரும்புவதற்கு ஏற்ற மிகவும் சிறந்த, முதன்மையானது எதுவெனில் இறைவனின் புகழ். இறைவன் புகழை விரும்புக என்று கட்டளை இட்டால் அதற்குக் கீழ்ப்படிந்து ஒருவர் எந்தச் செயல் புரிந்தால் உடனே விருப்பம் வந்துவிடுமா? ஆயினும் சிறப்பையும், முதன்மையையும், முக்கியத்துவத்தையும் கருதி அவ்வாறு விதிப்பதாகவே கொள்ள வேண்டும். அதனையே மிக அழகாகத் திருவள்ளுவர் அவ்வாறு இறைவன் புகழைப் புரிந்தவர்கள், விரும்பியவர்கள் அடையும் உயர்நிலையைச் சொல்லி உணர வைக்கிறார். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment