Friday, October 22, 2021

உரைகளும் திருக்குறளும்

 உரைகள் மிகவும் உதவிதான் பழம் நூல்களைக் கற்பதற்கு. இல்லை என்று சொல்ல முடியாது. ஆயினும் சில இடங்களில் சில ஏதுக்கள் கொண்டு உரைகள் ஒரு வழியில் பார்க்கும் போது மூல நூலின் இணையான இடங்களே இயல்பான பொருள் தரும் வாய்ப்பும் உண்டு. மேலும் பல பழம் நூல்களில் ஒவ்விய ஆட்சிகளைக் காணும் போது இன்னும் தெளிவு பெற வழியும் பிறக்கும். உரைகளை மூடிய கதவு என்று சொல்ல முடியாது. ஊக்கிச் செலுத்தும் வழிகள் என்று நாம் கொள்ள வேண்டும். ஆனால் உரைகளின் நியாயங்களைச் சிறிதும் உணராமல் மனம் போன போக்கில் தோன்றியவாறு சிலர் பொருள் கொள்ளும் போது வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே இலக்காகி நிற்கும் அவலம்தான் மிஞ்சுகிறது.

திருக்குறளில், ‘அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.’ என்னும் குறளில் பிறவாழி என்னும் சொல்லை எப்படிப் பிரிப்பது என்ற பிரச்சனை உரைகளுக்கு வருகிறது. பிறவி ஆழி என்றால் பிறவியாழி என்று வரும். எனவே இஃது பிற + ஆழி = பிறவாழிதான் என்று கொண்டு பொருள் உரைக்கின்றனர். இந்நிலையை எடுத்தபின் நூலின் அமைப்பும் அவர்களுக்குத் தாம் கொண்ட பொருளுக்கு வலு சேர்ப்பது போல் படுகிறது. அற ஆழி என்பதை இறைவனுக்கு ஆக்கிவிட்டார். மிஞ்சி இருப்பது பொருளும் இன்பமும்தான். எனவே இந்த இரண்டைத்தான் பிற ஆழி என்று குறிக்கிறார் என்ற நயமும் தென்படவே பிற கடல்களாகிய பொருளையும் இன்பத்தையும் கடக்க வேண்டும் என்றால் இறைவனின் தாளே கதி. அந்த இறைவனோ அறத்தின் உருவாக இருக்கின்றான். அறத்தின் உட்கருத்தாக இருக்கின்றான். அறத்தைச் செலுத்தும் ஆற்றலாகவும் இருக்கின்றான்.
இது நல்ல பொருள்தான். இருந்தாலும் ஒரு சங்கடம். தாமே பொருட்பால் இன்பத்துப்பால் என்றெல்லாம் பாடிவிட்டு, அறத்தின் வழிப்பட்டதே பொருளும் இன்பமும், அறத்தின் வழிப்படாதது பொருளும் ஆகாது இன்பமும் ஆகாது என்று இருக்கும் போது, பொருளையும், இன்பத்தையும் விலக்கத்தக்கவையாகவும், அமிழ்த்தும் கடல் போன்று கரையேறவொட்டாக் கொடும் விஷயங்களாகவும் காட்டுவது முற்றிலும் துறவறம் என்பதற்குச் சரியாயினும் முப்பால் பாட வந்தவர் சொல்ல வந்த பொருளாகக் கூடுமா என்னும் ஐயமும் எழும். எனவே இங்கு பிறவி என்னும் கடலைக் குறிப்பதாகக் கொள்வதே நெடும் இலக்கிய மரபிற்கு அமைந்தது என்று தோன்றுகிறது. பழைய உரை ஒன்று மட்டும் பிறவி என்னும் சமுத்திரம் என்று கூறுகிறது. கவிராஜ பண்டிதர் பிறவியாகிய ஆழி என்று கூறுகிறார். தம் கருத்திற்கு அரணாகப் பழம் நூல்களாகிய பெருங்கதை, வில்லிபாரதம் ஆகியவற்றைக் காட்டுகிறார். பெருங்கதையில் யானைப் பிறவியைக் குறிக்க ‘வேழப் பிறவும்’ என்ற ஆட்சி வருகிறது. வில்லிபாரதத்தில் ‘பிறவாழி கரைகண்டோரே’ என்று பிறவாழி என்பது பிறவியாகிய கடல் என்னும் பொருளில் ஆட்சி வருகிறது. இங்கும் சுற்றி வளைத்து வரும் பொழுது ஒரே பொருளில்தான் வந்து முடியும். பிறவிக்கடல் ஏன் ஓயாமல் பெருகுகிறது? ஆசை என்னும் காரணத்தால். ஆசை என்பது மிகுதியும் பொருள் பற்றியும் இன்பம் குறித்தும் எழுவது. எனவே பொருளாசை இன்பப்பற்று இரண்டுமே பிறவிக்கடல் பெருகச் செய்யும் ஏதுக்கள். எனவே இவற்றைத் துறக்க வேண்டுமெனில் அறவாழி அந்தணன் தாளே கதி என்று வந்து முடியும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment