Friday, October 29, 2021

திருவரங்கத்தைப் பற்றி ஸ்ரீபட்டரின் அனுபவம்

நித்ய விபூதி என்கிறார்களே, விரஜா நதிக்கரையில் இருக்கிறது என்று. அங்கு போனால் கிடைக்கும் அந்தப் பேரானந்தம் இவ்வுலகிலேயே கிடைக்க வழியில்லையோ? இல்லாமல் என்ன... ஓரிடம் இருக்கிறது. காவிரி, கொள்ளிடம் என்று இரண்டினாலும் வளைக்கப்பட்ட இடம். விரஜை நதியின் கரையில், தமோகுணம் அற்றதாய், ரஜோகுணமும் இல்லாததாய், சிறந்ததான இடம், முக்தர்களுக்கு என்றே உரிய இடம் என்று யாதொன்றைச் சொல்லுகிறார்களோ அந்த விஷ்ணுவின் பரமபதம் என்று பெயர்பெற்ற உன்னத ஸ்தானம் விரஜை நதியை ஒட்டி இருக்கும் மணற்குன்றுதானே! அஃது அங்குதான் என்றில்லை. இதோ இங்கேயே இருக்கிறதே என்று சொல்லலாம்படி அமைந்திருக்கிறது காவிரி நதிக்கரையை ஒட்டி வளர்ந்திருக்கும் மணற்குன்று. காவிரியின் நடுவே விளங்கும் இந்த உன்னத ஸ்தானத்தை என்றும், என்றென்றும் கண்டுகொண்டிருக்க வேண்டும்.

ஏன் அது என்ன அவ்வளவு விசேஷம் என்றா கேட்கிறீர்கள்? அங்கிருக்கும் கோயில் சோலைப் புறங்களில்தான் விசேஷம். அந்தச் சோலைப் புறங்களில் என்ன நடைபெறுகிறது? தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் என்று உபய வேதாந்தங்களும் அங்கு ஆழ்ந்து ஈடுபாட்டுடன் துய்க்கப் பெறுவதால் எப்பொழுதும் இந்த உபய வேதாந்த ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது. உலக தாபங்கள் மற்ற இடங்களில் கடுமையாய் இருக்கும் என்றால் இங்கோ வலிமையற்றுப் போய்விடுகிறது. தூய்மை, பாவனம் பரவிக் கிடக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களின் புகலிடமாக இருக்கிறது. காவிரி நதியின் நீரால் போஷிக்கப்பட்டு வளர்ந்து ஓங்கிய சோலைகளாய் இருக்கின்றன. இங்கேயே எப்பொழுதும் வசிக்கக் கடவேனாக.

என்று அற்புதமாக ஈடுபடுகிறார் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஸ்ரீபராசர பட்டர். அந்த சுலோகங்கள் வருமாறு --

யத்விஷ்ணோ பதமதம: பரோரஜோSக்ர்யம் 
முக்தாநாமநுவிரஜம் வீதீப்ரமாஹு: | 
தத் புண்யம் புளிநமிதந்தயாSத்ய மத்யே காவேரி 
ஸ்ப்புரதி ததீக்ஷிஷீய நித்யம் ||

த்ரய்யந்தப்ரஹதி மதீஷு வைஷ்ணவாநாம் 
ப்ராப்யாஸு ப்ரசுரபவச்ரமாபஹாஸு | 
காவேரீ பரிசரிதாஸு பாவநீஷு 
ஸ்ரீரங்கோபவநதடீஷு வர்த்திஷீய ||

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

****

No comments:

Post a Comment