Friday, October 22, 2021

கொஞ்சம் அவசரப்பட்டாக...

 ஐயா! எங்க வேகமா போறீங்க?

இருங்க. ஒரு விமானம் எங்க போச்சுன்னு தெரியலை. அதைத் தேடிக்கிட்டு...
இங்க வாங்க... எந்த விமானம்.. யாருது?
யயாதிக்கு இந்திரன் கொடுத்ததாம். அதில் ஏறித்தான் அனைத்து திசைகளையும் வென்றிருக்காரு யயாதி. அவருக்கு அப்பறம் குரு வம்சத்துலதான் இருந்துச்சு. ராஜா ஜனமேஜயன் காலத்துல ஒரு சின்ன பிரச்சனை. கர்க்க ரிஷியோடு கொஞ்சம் சண்டை ராஜாவுக்கு. கர்க்கரோட பையன் சின்னப் பையன் அவனையும் ராஜா திட்டிட்டார் போல. அதுனால ரிஷி சாபத்துனால விமானம் கண்ணுக்கு மறைஞ்சுடுத்து. அவரிடமிருந்து ஜராசந்தனிடம் போய் விட்டது விமானம். ஜராசந்தனிடம் சண்டை போட்டு ஜயித்து பீமன் அந்த விமானத்தை மீட்டாராம்.
மீட்டு..?
அதை வாசுதேவரிடம் அன்பின் காணிக்கையாகத் தந்திருக்கிறார்.
சரி. ஜனமேஜயர் என்ன ஆனார்?
அவர் ரிஷி சாபத்தினால விமானமும் போய் தேகமும் துரு நாத்தம் பிடிச்சுக் கஷ்டப் பட்டாரு. அப்பறம் சௌனகரிடம் போய் பிரார்த்திக்கவும் அவர் ஏதோ யாகம் செஞ்சு அந்த நாத்தத்தைப் போக்கியிருக்காரு.
சரி... ஊசி ... இரண்டு டோஸும் போட்டுக் கிட்டீங்களா?
ஆங் ஆயிடுச்சு.
அப்ப பேசாம போய் ஓய்வு எடுத்துக்குங்க. எல்லாம் நிலைமை சரியானப்பறம் போய்த் தேடிக்கலாம். வாசுதேவரிடம் தானே இருக்கு. பெருமாளிடம் இருப்பது எங்கப் போகப் போகுது?
அப்படீங்கறீங்க..?
ஆமாமாம். ... போய் நல்லா ஓய்வு எடுங்க.
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
***

அநேநஸ் என்பவருடைய பிள்ளை ப்ரதிக்ஷத்ரன். அவருடைய பிள்ளை ஸ்ருஞ்ஜயன். ஸ்ருஞ்ஜயன் பிள்ளை ஜயன். அவருடைய பிள்ளை விஜயன். க்ருதி என்பவர் விஜயனின் பிள்ளை. அவருடைய பிள்ளை ஹர்யத்வதன். ஹர்யத்வதனின் பிள்ளை பிரதாபமிக்க ஸஹதேவன். ஸஹதேவனின் பிள்ளை தர்மாத்மாவான நதீநன். நதீநன் பிள்ளை ஜெயத்ஸேனன். ஜெயத்ஸேனனின் பிள்ளை ஸங்க்ருதி. ஸங்க்ருதியின் பிள்ளை தர்மாத்வாவும், பெரும் புகழும் வாய்ந்த க்ஷத்ரவ்ருத்தன். க்ஷத்ரவ்ருத்தனின் வம்சமோ ஸுநஹோத்ரன். ஸுநஹோத்ரனுக்கு மூன்று பிள்ளைகள். காசன், சலன், க்ருத்ஸமதன். க்ருத்ஸமதனுக்கு சுநகன். சுநகன் வழியில் சௌநகர்கள். சலனுக்குப் பிள்ளை ஆர்ஷ்டிஸேணன். அவனுக்குப் பிள்ளை காச்யபன். காச்யபனின் பிள்ளை தீர்க்கதபஸ் காசியை ஆண்டவன். தீர்க்கதபஸுக்குப் பிள்ளை வித்வான் ஆகிய தன்வன். அவருக்குப் பிள்ளையாக தன்வந்தரி தேவர் மானிடராக அவதரித்தார். காசியை ஆண்ட புகழ் மிக்க மன்னராக இருந்தார். மிகத் திறமையான மருத்துவராகவும் இருந்தார். அனைத்து ரோகங்களையும் அவர் தீர்த்துவைப்பவராக இருந்தார். பரத்வாஜ மகரிஷியிடம் ஆயுர்வேதம் பயின்றார். பிஷக் க்ரியை என்னும் வைத்திய முறையை எட்டுப் பிரிவுகளாகப் பிரித்து சிஷ்யர்களுக்குப் பயிற்றி வைத்தார்.
*
அந்த தன்வந்தரி பகவான் அனைவருக்கும் நலம் விளைவிக்கட்டும்.

***

No comments:

Post a Comment