Friday, October 22, 2021

கடவுளின் இயல்பு -- மூலசித்தி

 கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் தமிழில் சுமார் 146 செய்யுள் நூல்கள் வேதாந்த தத்துவம் சார்ந்தவை இருந்திருக்கின்றன. ஸ்வயம்ப்ரகாசர் என்பார் தாம் தொகுத்த ஸ்ரீசிவப்ரகாசப் பெருந்திரட்டு என்னும் நூலில் தருகின்ற குறிப்புகளால் இதை அறிகிறோம். அதில் பல நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அதில் ஒரு நூல் மூலசித்தி என்பது. அதில் ஒரு பாடல் கடவுளின் இயல்பு எப்படி இருக்குமென்று சொல்கிறது.

கடவுளின் இயல்பா? அஃது உயிரினுக்கு உயிர் போன்று இருக்கும். உடல் என்றால் அதில் உணர்வுதானே அர்த்தம் உடையதாக ஆக்குகிறது? கடவுளின் இயல்பு உடல் போன்ற இந்த உலகில் உணர்வு போன்றது.
ம்.. ம்.. இன்னும் புரியவில்லையா.. மயக்கம் மனத்தில் நிறைந்திருக்கிறது அல்லவா? அந்த மயக்கத்தை நீக்கி அறிவு திகழும்போது எப்படி இருக்கும்? கடவுளின் இயல்பும் மயலை நீக்கும் அறிவு போல் இருக்கும்.
??
அவ்வளவு ஏன்? இருள் அடைந்து கவிந்த வல்லிருளை காலைக் கதிர் ஒளி வந்து ஒரே நொடியில் இல்லாமல் ஆக்குகிறது அன்றோ! ஆம். அதுபோல் அறியாமை இருளை நீக்கும் ஞான ரவிதான் கடவுள்.
**#$*((...?
சரி. இப்படிச் சொல்லிப் பார்ப்போம். கயவருக்கு இருட்டாய் இருப்பது கடவுள்.
ஆனால் கடவுள் காதல் கொண்டோர்க்கோ அருள் கண்ணாக இருப்பதும் கடவுளேதான்.
நான் உய்யவேண்டி அருளும் நாதனாகிய கடவுளின் இயல்பு இப்படி இருக்கின்றது. கொஞ்சம் மனம் வைத்துப் புரிந்து கொண்டால் பெரும் லாபம் உண்டு.
‘உயிரினுக்கு உயிரதாகும்
உடலினுக்கு உணர்வதாகும்
மயலினுக்கு அறிவதாகும்
வல்லிருட்கு இரவியாகும்
கயவருக்கு இருளதாகும்
காதலர்க்கு அருளும் கண்ணாம்
உயவெனக்கு அருளும் நாதன்
ஓங்கு இயல் இருக்குமாறே.’
(மூலசித்தி)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment