Friday, October 22, 2021

நற்றிணையில் உள்ளமும் அறிவும்

நற்றிணையின் ஒரு தலைவி தோழியிடம் பேசுகிறாள். ‘இனி அவர் வருவாரா? அவரை வரவழைக்கச் செய்யும் முயற்சி இதையெல்லாம் நிறுத்திவிடு. அவரைக் கடிந்துகொள்வதையும் நிறுத்து. அவர் என்ன செய்துவிட்டுப் போயிருக்கிறார் என்பது அவருக்கே கூடத் தெரியாது. அவர் தம் இயல்பில் தம் நோக்கம் கருதி எதற்கோ போயிருக்கிறார். ஆனால் கூடவே என்னுடைய உயிரான ஒன்றும், அதற்குக் காப்பான ஒன்றும் உருவிக்கொண்டு போய்விட்டது என்பதை அவர் எப்படி அறிவார்? நான் படும் இந்த நோய்க்கு மருந்தாகவாவது அவருடைய வரவு பயன்படலாம் என்கிறாயா? அதுவும் பயனில்லை. மருந்து வந்து அதனால் நன்னிலை பெற வேண்டிய இரண்டுமே அவருடன் சேர்ந்து போய்விட்டது என்னும் போது மீதம் இருப்பது மெலிந்து வற்றி இருக்கும் கூடு மட்டுமே.’ 

அவள் கூறுகின்ற அந்த உயிரான ஒன்றும் அதன் காப்பான ஒன்றும் என்ன? உலோச்சனார் என்னும் புலவர் எழுதிய பாடல். உள இயலுக்கு எவ்வளவு ஆழமான சொல்வளம் சங்கத் தமிழில் என்பதற்குக் காட்டு. 

’ என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக.
அன்னவாக இனையல் தோழி! யாம்
இன்னம் ஆக நத்துறந்தோர் நட்பு எவன்?’ 

அவர் எவ்வளவு சிறப்பு உடையவர் ஆயினும், எத்தனை அன்பு உடையரே ஆயினும் இனி அவர் நினைவு வேண்டாம். நம்மைத் துறந்தோர் என்பதைச் சங்கப் பாடல் நத்துறந்தோர் - நம் + துறந்தோர் என்று ஆள்வது கருதத்தக்கது. இனி ஓர் அழகான உவமை வருகிறது. மலையில் குறவர்கள் மரப்பட்டையை ஆடையாகச் சுற்றிக் கொள்வர். அவர்கள் அந்த மரப்பட்டைக்காகக் கிழிக்கும் போது சமயத்தில் தெரியாமல் சந்தனமரத்தின் மேற்பட்டையைக் கிழித்துவிடுவர். சிறிய இலை உள்ள சந்தனமரம் மேற்பட்டை கிழிக்கப்பட்டதால் கிழிபட்ட வாயின் வழியே உயிர்நீர் வடிந்து நலிவுபடும். அதுபோல் என் அறிவும் உள்ளமும் அவரோடு வழிந்து சென்றுவிட்டது. இனி மருந்து வந்தாலும் குணப்படுவதற்கு எதுவும் இல்லை.’ 

‘மரனார் உடுக்கை மலையுறை குறவர்
அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கிப் பையென
மரம்வறி தாகச் சோர்ந்துக்கு ஆங்கென்
அறிவும் உள்ளமும் அவர்வயிற் சென்றென..’ 

அறிவு என்பது யாது, உள்ளம் என்பது யாது என்னும் வேறுபாட்டைத் தெள்ளிதாக உணர்ந்திருந்த முதிர்ந்த உள இயல் செறிவு சங்கப் புலவர்களுடையது. 

நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் ஓரிடம் - 

’.. புனைபூந்துழாய் மலர்க்கே
மெலியும் மடநெஞ்சினார்
தந்துபோயின வேதனையே’ 

சங்கத் தமிழின் நீட்சியாய்த் திருமால் காதலை வளர்த்தவர் நம்மாழ்வார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment