Friday, October 22, 2021

இதுவும் சாத்திரத்தில்தான் இருக்கு

’மனத்திற்குப் பிரீதியைத் தருவது எதுவோ அது சுவர்க்கம் எனப்படும். அதற்கு நேர்மாறானது நரகம் எனப்படும். பாபம், புண்ணியம் என்பதற்குத்தான் நரகம் சுவர்க்கம் என்று பெயர்கள் அமைந்திருக்கின்றன. ஒரே பொருள்தான் ஒரு சமயம் துக்கமாகவும் மறு சமயம் சுகமாகவும் ஆகிறது. அழுக்காறு, கோபம் என்பவற்றை விளைவிக்கிறது. துக்கம் மட்டுமே வடிவாக எந்தப் பொருள் உண்டு? எது முதலில் பிரீதியை உண்டாக்குகிறதோ அதுவே பிறகு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒரே பொருளே கோபத்தை உண்டாக்கி, துன்பத்தைத் தந்து பின்னர் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனவே துக்கமே வடிவாக எந்தப் பொருளும் இல்லை; அது போல் சுகமே வடிவாகவும் எந்தப் பொருளும் இல்லை. மனம்தான் சுகம் என்றும் துக்கம் என்றும் மாறிப் பரிணாமம் அடைகிறது. எனவே ஞானம்தான் பரம் பிரும்மம். ஞானத்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை உண்டாகும். இந்த விச்வம் அனைத்தும் ஞானமே வடிவாகக் கொண்டது. ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எதுவும் இல்லை.’
(பிரம்ம புராணம்)
*
சாத்திரங்களில், புராணங்களில் ஒரே மாதிரியான மனப்பான்மை உள்ளவர்களின் கருத்துகள்தாம் இருக்கின்றன என்று நினைக்க முடியாது. ஒரு பக்கம் குறுகிய நோக்குடன் பழம் வழக்கம் என்பதையே வேறு எதையும் யோசிக்காமல் வலியுறுத்தும் மனப்பான்மை உள்ளவர்களுக்குத் தோதாக விஷயங்கள் சொல்லப் படுகின்றன என்பதைப் போலவே மானிடம், மனிதப் பண்பு என்பதை மற்ற எல்லாவற்றிலும் மேலாக வலியுறுத்திக் காட்டும் மனப்பான்மைக்கும் வலுவூட்டுவதாகவும் விஷயங்கள் காணப் படுகின்றன. அவற்றைப் பிரித்தெடுத்து நாம் ஒரு நிரல்படக் காணும் போது பழமைவாதத்தையும் தாண்டி மனிதப் பண்புகள் முக்கியமானவை என்பதை வலியுறுத்தும் கதைகள், சொல்லாடல்கள், உபதேசங்கள் என்பவை தொடர்ந்து ஒரு சிலரால் பேணப்பட்டும், வலியுறுத்தப் பட்டும் வந்திருக்கின்றன என்று புரிய வருகிறது. ஆனால் கூடுதல் அளவில் காணப்படும் பதிவுகள் எவை என்பது ஒரு முக்கியமான கேள்வியே.
உதாரணத்திற்கு, பாத்ம புராணத்தில் ஒரு கதை வருகிறது. அது சொல்லப் படும் பொழுதே பல விவரங்கள் மலிந்து சொல்ல வந்த கதையின் மையக் கருவைச் சற்றே மறைத்தாலும் கதையின் மையக் கரு பளிச்செனத் தெரிவதாக இருக்கிறது. ஒரு கோவில். அதில் சோழ ராஜா ஒருவர் பொன்னாலும் மணியாலும் முத்துக்களாலும் அலங்கரித்து விஷ்ணுவிற்கு வழிபாடு நடத்தியிருக்கிறார். அப்பொழுது விஷ்ணுதாசர் என்ற ஓர் ஏழை அந்தணரும் அங்கு வந்து துளசி இலைகளால் தாம் விரும்பிய விதத்தில் வழிபாடு நடத்தி வணங்குகிறார். இதைக் கண்ட ராஜாவுக்குக் கோபம் வருகிறது. இவ்வளவு விலையுயர்ந்த பொன்னும் மணிகளும் கொண்டு நான் வழிபாடு செய்து வைத்திருக்கும் போது அதன் மீது இப்படி துளசி இலைகளைப் போட்டு மறைக்கின்றீரே என்று கோபப் படுகின்றார். அந்தணர் தாம் மிகவும் பக்தியோடு வணங்கி அந்தத் துளசி இலைகளை இட்டு வழிபட்டதாக வாதிடுகிறார். அப்பொழுது பக்தி என்றால் என்ன என்ற பிரச்சனை வருகிறது. ராஜாவும் மிகவும் ஆர்வமாக ஈடுபாட்டுடன் தான் பொன்னும் மணியும் இட்டு வணங்கியிருக்கிறார். அவருடைய பக்தியிலும் குறை சொல்ல முடியாது. அந்தணரும் அவரால் முடிந்தது என்று துளசி இலைகளை இட்டு பக்தி செலுத்தியிருக்கிறார். இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்பொழுது அவர்களுக்குள் ஒரு போட்டி போல் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. தாம் மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப் போவதாகவும், யாருடைய வழிபாட்டில் பக்தி அதிகம் என்பதை ஸ்ரீவிஷ்ணுவே தீர்மானிக்கட்டும் என்று.
ராஜாவின் வழிபாடுகளில் ஈடுபாட்டிற்கும் விமரிசைக்கும் குறைவேயில்லை. விஷ்ணுதாசர் பழையபடித் துளசி இலைகள் இட்டும் ஏதோ படையல் உணவு சமைத்து வந்ததை இட்டும் தம் பக்தியைத் தொடர்கிறார். ஆனால் தாம் படையல் உணவைக் கடவுளின் முன்னர் வைத்துவிட்டுச் சற்று அங்கோ இங்கோ போய் வருவதற்குள் அந்த உணவு காணாமல் போய் விடுகிறது. ஒரு நாள் மறு நாள் இதுவே தொடர்கிறது. அடுத்த நாட்களில் இந்த மர்மத்தை எப்படியும் கண்டு பிடித்து விட வேண்டும் என்று மறைந்திருந்து பார்க்கிறார். அப்பொழுது அவர் காண்பது பசியிலும், வறுமையிலும் நொந்து ஓர் எளிய ஏழைக் குடிமகன் ஒருவர் அதை எடுத்துக் கொண்டு ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறார். உடனே பார்க்கும் விஷ்ணுதாசரின் மனத்தில் கலக்கம் ஏற்படுகிறது. பசிக் கொடுமையால் ஓர் எளிய மனிதர் படும் துன்பம் அந்த முகத்தில் அவருக்கு அப்படியே தெரியவும், தம்முடைய பக்தி வழிபாடு என்பதையெல்லாம் மறந்துபோக, ஐயோ அவர் வெறும் சோற்றை உண்டால் என்ன பயன், தொண்டையில் அல்லவா அடைத்துக் கொள்ளும் என்று ‘அப்பா! இரு இரு. இந்தா இந்த நெய்யையும், குழம்பையும் சற்று சேர்த்துக் கொள் என்று சொல்லியபடியே அவரைத் தொடர்ந்து ஓடுகிறார். இவரது உபசரிப்பு அவருக்கு விபரீதமாகப் படுகிறது. தந்திரமாகத் தன்னைப் பிடிக்கத் திட்டம் போலும் என்று மேலும் ஓடுகிறார். பிறகு ஒரு வழியாக அவரை அமைதிப் படுத்தித் தாம் கொண்டு வந்த உணவுப் பொருட்களை அவருக்கு இட்டு உண்ணச் செய்து அதில் என்றும் தன் வழிபாட்டில் கிட்டாத ஒரு பெறும் நிறைவு தம்முள் ஏற்படுவதை உணர்கிறார் என்பது கதையின் மையக் கருவாக வருகிறது. பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை என்பது போலவே, எளிய முறையில் உள்ளம் நிறைந்து செய்வதிலும் இருக்கிறது என்று சொல்வதை விட, கூட வாழும் ஓர் எளிய மனிதரின் பசிக் கொடுமையைப் போக்கும் பரிவுணர்ச்சியில்தான் வழிபாடோ பக்தியோ நிறைவடைகிறது; தெய்வமும் அதில்தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது என்னும் கருத்து கதையின் மூலம் உணர்த்தப் படுகிறது. ஆனால் பொறுமையாகத் தேடி எடுக்க வேண்டியிருக்கிறது இது போன்ற அரும் மணியான பகுதிகளை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment