Friday, October 22, 2021

விக்கிரக ஆராதனை

விக்கிரக ஆராதனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
நான் ஞானியார் இல்லையப்பா! என்னைப் போய் இதையெல்லாம் கேட்கிறியே?
இல்லப்பா! நண்பர் என்ற முறையில்தான் சொல்லேன். எதைக் கேட்டாலும் மறு கேள்வி போட்டே ஆகணுமா?
இருக்கட்டும். இப்ப ஒன்று சொல்கிறேன். இதற்கு நீர் என்ன நினைக்கிறீர் என்று சொல்லும்! ‘கங்கையாற்றில் உள்ள முதலைக்குப் பெயர் சிசுமாரம். அந்த வடிவில் விண்வெளியில் இருக்கும் நக்ஷத்ர கூட்டங்கள், அண்டங்களின் தொகுதிக்கு சிசுமாரம் என்று பெயர். அந்த வடிவத்தில் இருப்பது விஷ்ணு. விஷ்ணுவின் வால் ஓரத்தில் இருப்பது துருவன் என்னும் நக்ஷத்திரம். ‘தாராமயம் பகவத: சிசுமாரம் ஆக்ருதி: ப்ரபோ: திவி ரூபம் ஹரேர் யத்து தஸ்ய புச்சே ஸ்திதோ த்ருவ:’ விஷ்ணு தாமும் சுற்றி மற்றவற்றையும் சுற்ற வைக்கிறார் அந்த ரூபத்தில் இருந்துகொண்டு. சூரியர் சந்திரர் தாராகணங்கள் எல்லாம் சுற்றுகின்றன. சுற்றும் இவையெல்லாம் துருவனோடு எப்படிக் கட்டப் பட்டிருக்கின்றன? புகைவாயு ரூபமான பந்தத்தினால். ’வாதாநீகமயைர் பந்தைர் த்ருவே பத்தாநி தாநி வை’ சிசுமார வடிவில் இருக்கும் இந்த ஜோதிரூபமாக இருக்கும் நாராயணரே பரம் தாமம். தாமே இவையெல்லாவற்றின் ஆதாரமாக இருக்கிறார். ‘சிசுமார ஆக்ருதி ப்ரோக்தம் யத்ரூபம் ஜ்யோதிஷாம் திவி | நாராயண: பரம் தாம தஸ்ய ஆதார; ஸ்வயம் ஹ்ருதி ||’‘
இந்த வடிவம் பற்றி என்ன சொல்கிறீர்? இதுவும் விக்கிரகம்தான். பிரம்ம புராணத்தில் வருகிறது.

அண்ட வெளியில் சிசுமார வடிவமான நக்ஷத்திர, அண்டங்களின் கூட்டமே ஒன்று சேர்ந்து விஷ்ணுவின் வடிவாகவும் இருக்கிறது என்றால் அந்த விக்கிரகத்தை நினைப்பதற்கே மனம் ஆயாசமாக இருக்கிறது. ஏன் சூரியன், இந்தச் சூரியனே ப்ரத்யக்ஷமான பிரம்மம். இதுவே அனைத்தையும் சிருஷ்டிக்கிறது. ஆதித்யனாகிய இந்த ஞாயிறு பன்னிரு வடிவம் பூண்டு இந்த உயிர்ப்பொருளும், உருப்பொருளும் நிறைந்த உலகைப் புரக்கிறது. ஆதித்தியனுடைய பன்னிரு வடிவங்களோ இந்திரன், தாத்ரு, பர்ஜன்யன், த்வஷ்டா, பூஷன், அர்யமன், பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் என்பவையாகும்.

இந்திரனாக இருந்து தேவர்களின் விரோதிகளை அழிக்கின்றார். தாத்ரு என்னும் வடிவத்தில் பிரஜாபதியாக உயிர்களைப் படைத்துக் காக்கின்றார். பர்ஜன்யன் என்னும் வடிவத்தில் மேகங்களில் இருந்து கொண்டு மழையைக் காலம் தவறாது பொழிவிக்கின்றார். த்வஷ்டா என்னும் வடிவத்திலோ மரங்கள் செடிகள் கொடிகளினுள் இருந்து வளத்தை நல்குகிறார். பூஷன் என்ற வடிவத்தில் தான்யங்கள், உணவுப்பொருட்களினுள் இருந்தபடி விளைபொருட்களை உண்ணத் தக்கவைகளாக ஆக்கி உயிர்களுக்கு ஊட்டச் சத்து தருகின்றார். அர்யமனாய் இருந்து வாயு ரூபத்தில் ஆகாயத்தில் சுற்றி வந்து காக்கின்றார். பகன் என்ற வடிவத்திலோ உயிர்களின் உடல்பொருளாகவும், ஐம்பூதப் பொருளாகவும் ஆகிப் பொலிவூட்டுகிறார். விவஸ்வானாய் இருந்து தீயின் வடிவத்தில் காக்கின்றார். உடம்பில் உணவு செரிக்கும் தீயாகவும் அமைந்து வளம் பெருக்கின்றார். விஷ்ணு என்னும் உருவத்தில் உலகில் அவதாரங்கள் எடுத்து தேவர்களின் எதிரிகளை நாசமுறச் செய்கின்றார். அம்சுமான் என்னும் வடிவில் காற்றில் உயிர்ச் சக்தியாக அமைந்து காக்கின்றார். வருணன் என்னும் வடிவில் நீர் நிலைகளில், கடல்களில் பொருந்தி உலகைக் காக்கின்றார். மித்ரன் என்னும் வடிவில் என்றும் உயிர்களுக்கான உற்ற நட்பாய் இருந்து உதவுகின்றார். மித்ரன் என்னும் வடிவில் தாமே கடுந்தவம் புரிகின்றார். அவரே தவம் புரிவதைப் பார்த்து ரிஷிகள் அவரைக் கேட்டனர். ‘நீங்களே அனைத்தையும் படைத்தவர். நீங்கள் யாரை நோக்கித்தான் தவம் புரிகின்றீர் ஆச்சரியம்?’ அதற்கு அவர் கூறும் பதில் : வடிவங்கள் தாங்கி நிற்கும் உலகையெல்லாம் உள்ளே உள்ளுயிராய், அனைத்தையும் தம் உடலாகக் கொண்டு தாம் எவ்வித மாறுபாடும் அடையாதவராய் என்றும் இருக்கும் ஒருவரே பரமாத்மா எனப்படுபவர். அவரைக் குறித்தே என்றும் தவம் புரிகின்றேன்.

பன்னிரு வடிவம் தாங்கிப் பாரெலாம் புரக்கும் பிரத்தியக்ஷ ப்ரம்மம் ஆக இருக்கும் ஆதித்ய நாராயணர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
(குறிப்புகள்: பிரம்ம புராணம்)

*
’மனத்திற்குப் பிரீதியைத் தருவது எதுவோ அது சுவர்க்கம் எனப்படும். அதற்கு நேர்மாறானது நரகம் எனப்படும். பாபம், புண்ணியம் என்பதற்குத்தான் நரகம் சுவர்க்கம் என்று பெயர்கள் அமைந்திருக்கின்றன. ஒரே பொருள்தான் ஒரு சமயம் துக்கமாகவும் மறு சமயம் சுகமாகவும் ஆகிறது. அழுக்காறு, கோபம் என்பவற்றை விளைவிக்கிறது. துக்கம் மட்டுமே வடிவாக எந்தப் பொருள் உண்டு? எது முதலில் பிரீதியை உண்டாக்குகிறதோ அதுவே பிறகு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒரே பொருளே கோபத்தை உண்டாக்கி, துன்பத்தைத் தந்து பின்னர் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனவே துக்கமே வடிவாக எந்தப் பொருளும் இல்லை; அது போல் சுகமே வடிவாகவும் எந்தப் பொருளும் இல்லை. மனம்தான் சுகம் என்றும் துக்கம் என்றும் மாறிப் பரிணாமம் அடைகிறது. எனவே ஞானம்தான் பரம் பிரும்மம். ஞானத்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை உண்டாகும். இந்த விச்வம் அனைத்தும் ஞானமே வடிவாகக் கொண்டது. ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எதுவும் இல்லை.’
(பிரம்ம புராணம்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment